#🌺 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி 🙏
நாட்டின் விடுதலை, சமூக விடுதலையை
வென்றெடுத்த தேவர் பெருமகனாரின்
குருபூசையில் அவரை வணங்குவோம்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மரியாதை
நாட்டின் விடுதலைக்காக போராடியவரும் தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று அறிவித்து அதன்படி வாழ்ந்தவரும், அனைத்துத் தரப்பு மக்களாலும், அனைத்து அரசியல் கட்சிகளாலும் போற்றி வணங்கப்படும் தலைவருமான பசும்பொன் முத்துஇராமலிங்கத் தேவரின் 63-ஆம் குருபூசை நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரை வணங்குகிறேன்.
தேவர் பெருமகனாரின் பெருமைகளும், சமூகத்திற்காக அவர் ஆற்றிய பணிகளும் பட்டியலிட முடியாத அளவுக்கு நீண்டவை. சென்னை மாகாணத்தில் ஒரு சமூகத்தையே பிறப்பின் அடிப்படையில் குற்றவாளிகளாக்கும் குற்றப்பரம்பரை சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற உணர்வு தான் அவரது அரசியல் பயணத்தை வழி நடத்தியது.
காந்தியின் தலைமையை ஏற்று காங்கிரஸ் கட்சியில் பயணம் செய்த தேவர் பெருமகனார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களையே தம்மை வழிநடத்திச் செல்லும் தளபதியாக கருதினார். காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் நேதாஜியை வீழ்த்த காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்கள் முயன்ற போது, தென்னிந்தியா முழுவதும் ஆதரவைத் திரட்டி நேதாஜியை வெற்றி பெறச் செய்தவர் தேவர் பெருமகனார்.
இந்திய விடுதலைக்காக காங்கிரசின் அங்கமாகவும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சீடராகவும் இருந்து அவர் நடத்திய போராட்டங்கள் வியக்கத்தக்கவை. ஒரு சமூகத்தையே அதன் பிறப்பால் குற்றவாளிகளாக முத்திரைக் குத்தி களங்கப்படுத்தும் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேயர் ஆட்சியிலும், விடுதலை இந்தியாவிலும் போராடி அவர் பெற்ற வெற்றி ஈடு இணையற்றது.
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநிறுத்த நடத்தப்பட்ட ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு துணை நின்றது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது நிலங்களை வழங்கியது, தொழிற்சங்க தலைவராக இருந்து தொழிலாளர்களுக்கு உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்தது என மக்களுக்காக அவர் நடத்திய போராட்டங்களும், பெற்ற வெற்றிகளும் ஏராளம். அனைத்துத் தரப்பு மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகளை இந்த நாளில் மட்டுமின்றி, எந்த நாளும் நினைவு கூர்வோம்; போற்றுவோம்!
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🇹🇩 திண்டுக்கல் மாவட்டம் வடக்கு 🇹🇩 #🤝பா.ம.க #பாட்டாளி மக்கள் கட்சி


