ShareChat
click to see wallet page
search
தெவிட்டாத விட்டலா - 1 குதிரை வீரன் 🌼🌼🌼🌼🌼🌼 ஊருக்கு கோடியில் ஒரு வனாந்தர பிரதேசத்தில் ஒரு சிறு ஆஸ்ரமம். பெரிய கட்டிடம் என்று கனவு காண வேண்டாம். தொத்தல் குடிசை. மண் தரை. சூரிய பகவான் குடிசையின் ஓலை இடுக்கில் நுழைந்து எங்கும் திட்டு திட்டாக வெளிச்ச வட்டங்களைத் தெளித்திருந்தான். மழை காலத்தில் வருணன் எப்படி அந்த பழைய ஓலைக்குடிசை ஆஸ்ரமத்தின் உள்ளேயே வாசம் இருப்பான் என்று அப்புறம் மழை வரும்போது பார்த்துக் கொள்ளுவோம். இந்த ஆஸ்ரமத்தின் உள்ளே நிறைய தலைகள் ஆனந்த பக்தி பரவசத்தில் ஆடின. சிறிய அந்த கூடத்தில் விட்டலன் இடுப்பில் கையோடு துக்காராமின் அபங்கத்தில் திளைத்து கொண்டிருந்தான். முகலாய சாம்ரஜ்யத்திற்கே சிம்ம சொப்பனமாக இருந்த மராத்தியன் மகாவீரன் சத்ரபதி சிவாஜி மகாராஜாவும் அந்த கூட்டத்தில் தன்னை மறந்து சேர்ந்து பாடிக்கொண்டு விட்டல் நாம சங்கீர்த்தனத்தில் மூழ்கிக் கொண்டிருந்த போது ஒரு ஒற்றன் , மெதுவாக கூட்டத்தில் முண்டி இடித்து முன்னேறி சிவாஜி அருகில் சென்று அவர் காதில் சேதி சொன்னான். ''மகாராஜா, முகலாயர் படை வெளியே வந்துகொண்டிருக்கிறது. நீங்கள் இங்கிருப்பது தெரிந்து கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இங்கிருந்து உடனே தப்பிக்கவேண்டும் '' சிவாஜியின் முகத்தில் சிந்தனை தேங்கியது. கவலையோடு துக்காராம் சுவாமிகளை அணுகி " குரு மகராஜ் சுவாமிஜி, இந்த இடத்தின் தூய்மையும் அமைதியும் கெட நான் விரும்பவில்லை. என் எதிரிகள் என்னைக் கொல்ல வந்து கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் இங்கு உபத்ரவமின்றி நான் உடனே புறப்படுகிறேன்." "மகாராஜ், விடோபாவின் அபங்கத்தில் பாதியில் நிறுத்தி வெளியேற கூடாது. முடியும் வரை சற்று காத்திருக்கலாமே." துக்காராமின் அன்பு கட்டளையை முடியாமல் "அவ்வாறே சுவாமிஜி" என்றார் சிவாஜி. விட்டல் அபங்கத்தில் ருசியும், தன்னுயிர் போகும்போது இறைவன் நாமத்திலே போகட்டுமே என்ற தியாக எண்ணம் தான் சிவாஜிக்கு. எந்த எதிர்ப்பும் இல்லாமல் முகலாயர் படையிடம் தன்னை ஒப்புவித்தால் மற்ற பக்தர்களுக்கு எந்த இடையூறும் இருக்காதல்லவா." சிவாஜி மீண்டும் அபங்க பஜனையில் கவலையின்றி ஈடுபட்டார். முகலாய சுல்தான், ஒற்றர்கள் மூலம் சிவாஜி தேஹூ என்ற அந்த கிராமத்தில் இருக்கிறார் என்று அறிந்து அவன் படைத் தலைவன் 2000 ஆயுதம் தாங்கிய படை வீரர்களோடு அந்த ஊரில் நுழைந்தான். வெகுகாலமாக பிடிக்க முடியாத சிவாஜி இந்த ஊரில் இன்று கட்டாயம் உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடி படுவது நிச்சயம். சுல்தானின் துரதிர்ஷ்டம் அவனுக்காக காத்திருந்ததே. ஊர் எல்லையிலேயே தக்க தருணத்தில் சிவாஜியின் குதிரைப்படை சுல்தானின் படையை எதிர் கொண்டது. ஒரு குதிரையின் மேல் சிவாஜி உருவிய வாளுடன் அவர்களை மோதி அழிப்பதை கண்டு அனைத்து படைகளும் சிவாஜியின் குதிரையை மட்டுமே குறி வைத்தன. தனி ஒருவனாக அவர்களை எதிர்ப்பது அறிவின்மை என்று உணர்ந்த சிவாஜி தனது வீரர்களிட மிருந்து விலகி காட்டுப்பாதையில் குதிரையை விரட்டவே அவரை தொடர்ந்து சுல்தானின் படை சென்றது. மின்னல் வேகத்தில் செல்லும் சிவாஜியை எவ்வளவோ முயன்றும் சுல்தான் படை நெருங்க முடியவில்லை. நேரம் நழுவியது. சூரியன் அஸ்தமனம் ஆகும் சமயம். சிவாஜிக்கு மலை எலி என்று பெயர் உண்டே. அந்த வனப் பகுதியின் அனை த்து மலைதொடர்களும் அத்துபடி. அதன் கணவாய்கள், குகைகள் அனைத்தும் அறிந்த சிவாஜி எங்கு சென்றார் எப்படி மாயமாக மறைந்தார் என்று தெரியாமல் ஏமாற்றத்தோடு படை வீரர்கள் திரும்பி சுல்தான் முன் தலையைத் தொங்க போட்டுகொண்டு நிற்க சுல்தானின் படைத்தலைவன் நெருப்பாக கொதித்துக் கொண்டிருந்தான்: "வெட்கமாயில்லை! ச்சே! நீங்கள் எல்லாம் வீரர்களா? 2000 பேர் சிறந்த குதிரை படை வீரர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள், ஒரு தனி மனிதனை பிடிக்க யோக்யதை இல்லை. அவமான சின்னங்களா" என்று திட்டு வாங்கி கொண்டிருக்கும் போது, ஆஸ்ரமத்தில் அபங்கம் முடிந்து அனைவரும் பிரசாதம் பெற்று சந்தோஷமாக அந்த பஜனை கூடத்திலிருந்து வெளியேறினர். சிவாஜி துக்காராம் காலில் விழுந்து வணங்கி எழுந்தபோது ஒரு ஒற்றன் ஓடோடி வந்து ''மகாராஜ் உங்கள் வீரத்தின் முன் முகலாய படை சுருண்டு ஓடி எங்கோ மலைப்பாதையில் சென்று விட்டது. உங்கள் குதிரையை அவர்களால் பிடிக்க முடியவில்லை. எப்படி அதற்குள் இங்கு வந்து விட்டீர்கள். நீங்கள் மின்னலை காட்டிலும் வேகமான தலைவர்” என்று புகழ்ந்தான். சிவாஜி திகைத்தார். ஒரு கணத்தில் சுரீர் என்று உரைத்தது. அவரது இரு கரங்களும் எதிரே சிரித்துக் கொண்டு இடுப்பில் கை கட்டி நின்ற விட்டலனை வணங்கின. கண்களில் கண்ணீர்ப் பெருக்கு நன்றி பெருக்காக வழிந்தது. விட்டலன் சிரித்தான். அவனைத்தான் சிவாஜி ரூபத்தில் குதிரை வீரர்கள் இன்னமும் மலைகளுக் கிடையில் தேடிக் கொண்டிருக்கிறார்களே! கடவுளை நம்பினோர் கைவிடப் படார் என்று சும்மாவா நமது முன்னோர்கள் சொன்னார்கள். தனது பக்தன் துக்காராமின் சிஷ்யன் சிவாஜியை விட்டலன் கைவிடுவானா? சிவாஜி தன்னை போற்றி பஜனையில் ஈடுபட்ட நேரம் தான் சிவாஜியாக சென்று போர் புரிந்தவனல்லவா? இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி 🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #💙ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🏻 #ஸ்ரீ பாண்டுரங்கன் தரிசனம் #பண்டரிபுரம்--பாண்டுரங்கன். #பாண்டுரங்கன் 🙏🙏🙏🌹
🙏பெருமாள் - ShareChat