🌺அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி.🌺
3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட
பாடல்-03.
அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், உனது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமைஎண் ணாத கருமநெஞ்சால்,
மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே.
பொருள்:
நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் – மனிதர்கள் தங்கள் முன் வினைப் (கருமப்) பயனால், அதனால் ஏற்பட்ட வாசனைகளால் நிரம்பிய மனம் கொண்டு, உன்னிடம் அன்பு கொண்ட அடியவர் பெருமையை எண்ணி அவர்களைப் பணிந்து உன் அருள் பெறும் வழியைப் பார்க்காமல்
நரகில் மறிந்தே விழும் – தீய செயல்கள் செய்து நரகத்தில் கூட்டம் கூட்டமாய் சென்று விழும்
நரகுக்கு உறவாய மனிதரையே – நரகத்திற்கு உறவுக் கூட்டம் போல் இருக்கும் மனிதர்களை
வெருவிப் பிறிந்தேன் – (நான்) வெறுத்து (அவர் மேல் கோபம் கொண்டு) அவர்களை விட்டு விலகி விட்டேன்.
அறிந்தேன் எவரும் அறியா மறையை – யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை நான் அறிந்து கொண்டேன். (அது உன் திருவடியை அடைவதே மிக எளிதான வழி என்பது).
அறிந்து கொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே – அன்பர்கள் (அடியவர்கள்) விரும்பும் அனைத்தும் அருளும் செல்வமே (திருவே) – அந்த ரகசியத்தை நான் அறிந்து கொண்டு உனது திருவடிக்கே சரணமாக (அடைக்கலமாக) அடைந்தேன்.
விளக்கம்:
அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே! நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை. மனத்தாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து மனிதரையே நாடிக் கொண்டிருந்தது. இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். ஆதலினால் அத்தீயவழி மாக்களை விட்டுப் பிரிந்து வந்து விட்டேன். எவரும் அறியாத வேதப் பொருளை தெரிந்து கொண்டு உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே எனக்குத் துணையாவாய்.
4. உயர் பதவிகளை அடைய
பாடல்-04.
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே, கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்திஎந் நாளும் பொருந்துகவே.
பொருள்: மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து – மனிதர்களும் தேவர்களும் என்றும் வாழும் முனிவர்களும் வந்து
சென்னி குனிதரும் – தலையால் வணங்கும்
சேவடிக் கோமளமே – சிறப்பு மிகுந்த சிவந்த பாதங்களை உடைய மென்மையானவளே (கோமளவல்லியே)
கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த – கொன்றைப்பூ அணிந்த நீண்ட சடைமுடியில் குளிர்ச்சி தரும் நிலவும் பாம்பும் கங்கையும் அணிந்துள்ள
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே – புனிதராம் உன் கணவரும் நீயும் என் புத்தியில் எந்நாளும் இருந்து அருளவேண்டும்
விளக்கம்:
மனிதர், தேவர், பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும் இளம் சந்திரனையும், அரவையும், கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும் நீயும் இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும். 🚩🕉🪷🙏🏻 #அபிராமி அந்தாதி இன்று #அபிராமி அந்தாதி பாடல்கள் #அபிராமி அந்தாதி #🙏அம்மன் துணை🔱 #அம்மன் பக்தி பாடல்கள்


