ShareChat
click to see wallet page
search
அறிக்கை: *காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவினை அன்னைத்தமிழில் நடத்திட வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஏகாம்பரநாதர் திருக்கோயிலின் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவினை முழுவதுமாகத் தமிழிலேயே நடத்துவது குறித்த அறிவிப்பாணையை வெளியிடாமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி, தெய்வத்தமிழ் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக, கடந்த 05.02.2020 அன்று அருந்தமிழ் பெரும்பாட்டன் அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழனால் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு நிகழ்வானது தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிபெற்றோம். நீதிமன்ற ஆணையை அரசு ஏற்று அன்றைய அதிமுக அரசு தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கினை தமிழ் வழியில் நடத்த ஆவன செய்தது. அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் டிசம்பர் மாதம் நான்காம் தேதி கரூர் பசுபதீசுவரர் ஆலயக் குடமுழுக்கு குறித்தும் முன்கூட்டியே வீரத்தமிழர் முன்னணி சார்பாகத் தமிழ்வழியில் குடமுழுக்கு கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதியரசர்கள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு “தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு நடக்கும்போது தமிழில் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும், அதை நிறைவேற்றத் தவறும் கோவில் நிர்வாகத்திற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினார்கள். அதன் பிறகு, தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனின் பழனி திருக்கோயிலின் குடமுழுக்கையும் தமிழில் நடத்த முதலில் திமுக அரசு மறுத்தபோதும், மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு வேறுவழியின்றித் தமிழிலும் மந்திரங்கள் ஓதப்பட்டன. அதேபோன்றே மருதமலை முருகன் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் என்று அடுத்தடுத்து தமிழ் முன்னோர்களால் கட்டப்பட்ட பழம்பெரும் திருக்கோயில்களில் நடைபெற்ற திருக்குடமுழுக்கிலும் அதே நிலையே தொடர்கின்றது. இந்நிலையில் வருகின்ற 08.12.2025 அன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் குடமுழுக்கு நன்னீராட்டு ப் பெருவிழா நடைபெறவுள்ள நிலையில் அதனைத் தமிழில் நடத்துவதற்கான எவ்வித அறிவிப்பும் இதுவரை கோயில் நிர்வாகம் வெளியிடாதது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குடமுழுக்கை சமஸ்கிருதத்தில் மட்டுமே நடத்தக் கோயில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் திட்டமிட்டுள்ளதோ எனவும் ஐயமுறத் தோன்றுகிறது. தமிழ் மொழி காப்போம், மண் காப்போம், மானம் காப்போம், ‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்பவையெல்லாம் தமிழர்களை ஏமாற்றி வாக்குகளை பறிப்பதற்கான திமுகவின் தேர்தல்கால வெற்று முழக்கங்கள் என்பதையே குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த ஆணை பிறப்பிக்காமல் அலட்சியப்படுத்தும் திமுக அரசின் ஆணவப்போக்கு காட்டுகிறது. குறிப்பாக திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாட்டு கோயிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் தொடர்ச்சியாக அன்னைத்தமிழை புறக்கணித்து, அமைச்சர் சேகர்பாபு மூலம் வடமொழிக்கு சாமரம் வீசுவது வெட்கக்கேடானது. இதுதான் திராவிட மாடல் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? என்ற கேள்வி எழுகின்றது. ஆகவே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவின் அனைத்து நிகழ்வுகளும் அன்னைத் தமிழிலேயே நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய அதுகுறித்த அறிவிப்பாணையை முன்கூட்டியே வெளியிட வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கினை தமிழில் நடத்த தமிழ்நாடு அரசு மறுக்குமாயின், தமிழ்ச்சைவ இறை அடியார்களையும், தமிழ் ஆர்வலர்களையும் ஒன்று திரட்டி மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதையும், திமுக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து தமிழில் குடமுழுக்கு நடத்த சட்டப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். https://x.com/Seeman4TN/status/1995474393775112315?s=20 #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #செஞ்சிக்கோட்டை #GINGEE_ NTK #gingee-ntk #SEEMAN4TN #NTK4TN #கோனேரிக்கோன்_கோட்டை - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - ShareChat