#✍ எக்ஸாம் குறிப்பு #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் #🧒குழந்தைகளுக்கான கல்வி📔 #✍️தமிழ் மன்றம் #📓 பொது தமிழ்
சிபிஎஸ்இ பள்ளிகளும்
மும்மொழித் திட்டங்களும்
ஒரு பார்வை.
*******************************
வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் முன்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
மாணவ மாணவிகள் மூன்றாவது மொழியாக இந்திய மொழிகளில் எந்த ஒரு மொழியை வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம் என்றும், ஆகவே இது இந்தித் திணிப்பு அல்ல என்றும் பல அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் கூறுவதையும் அறிவீர்கள்.
அதன் உண்மை நிலை என்ன என்பதை நாம் இங்கு பார்க்கலாம்.
சிபிஎஸ்சி பள்ளிகளில் மாணவர்கள் மூன்றாவது மொழியாகத் தேர்வு செய்யக்கூடிய மொழிகள் பல உள்ளன. அவற்றில் முக்கியமானவை:
தமிழ், இந்தி, சமஸ்கிருதம், உருது,
தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, ஒடியா, அஸ்ஸாமி, காஷ்மீரி, நேபாளி, சிந்தி, கொங்கணி, மிசோ, போடோ, மணிப்பூரி, ஆங்கிலம், திபெத்தியம், பாரசீகம் (Persian) ஜெர்மன், ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ் முதலியன.
இங்கு சிபிஎஸ்சி கல்வி வாரியத்தின் முதல் மொழி மற்றும் இரண்டாம் மொழி குறித்த விதிமுறைகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சிபிஎஸ்சி பள்ளிகளைப் பொருத்தமட்டில் மாணவர்கள் முதல் மொழியாக எடுத்துப் படிக்க வேண்டிய மொழி இந்தி மொழியாக இருக்கலாம். அல்லது ஆங்கில மொழியாக இருக்கலாம்.
இரண்டாவது மொழியாக எடுத்துப் படிக்க வேண்டிய மொழி அவரவர் தாய்மொழியாக இருக்கலாம். அல்லது இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். அல்லது வெளிநாட்டு மொழியாக இருக்கலாம்.
மூன்றாவது மொழியாக இந்திய மொழிகளில் வேறு ஏதாவது ஒரு மொழியாக இருக்கலாம். அதாவது மூன்று மொழிகளில் ஒன்று வெளிநாட்டு மொழியாக இருக்கலாம். மற்ற இரண்டும் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ்நாட்டில் படிக்கும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட சிபிஎஸ்சி பள்ளி மாணவர்கள் முதல் மொழியாக வெளிநாட்டு மொழியான ஆங்கிலத்தை எடுத்து படிக்கிறார்கள். இரண்டாவது மொழியாக இந்திய மொழிகளில் ஒன்றான தனது தாய்மொழி தமிழை எடுத்து படிக்கிறார்கள். இனி இவர்கள் மூன்றாவது மொழியாக இந்திய மொழிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.
சரி தமிழ்நாட்டில் படிக்கும் சிபிஎஸ்சி பள்ளி மாணவன் தான் விரும்பும் மூன்றாவது மொழியாக மலையாளத்தையோ, தெலுங்கையோ, கன்னடத்தையோ, வங்காளத்தையோ, காஷ்மீரி மொழியையோ எடுத்து படிக்க முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது.
காரணம், இந்திய மொழிகளில் எந்த ஒரு மொழியை வேண்டுமானாலும் மூன்றாவது மொழியாக எடுத்துப் படிக்கலாம் என்ற விதிமுறை உண்மையில் நடைமுறைக்கு வருமா? என்ற மிகப்பெரிய கேள்வி இங்கு எழுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகளில், மூன்றாம் மொழியைத் தேர்வு செய்வது என்பது பள்ளிகளின் வசதி, ஆசிரியர்கள் கிடைப்பது, மற்றும் மாணவர்களின் தேவைகள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும் என்று கூறப்படுகிறது. 30 மாணவர்கள் படிக்கும் ஒரு வகுப்பறையில் மூன்றாவது மொழியாக ஒவ்வொருவரும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று 15 மொழிகளைத் தேர்வு செய்தால் பள்ளி நிர்வாகம் அத்தனை மொழி ஆசிரியர்களையும் நியமித்து மூன்றாவது மொழியை நடைமுறைப்படுத்துமா? இது சாத்தியமா?
ஆகவே உண்மையில் மூன்றாவது மொழியைத் தேர்வு செய்வது என்பது மாணவர்களோ, பெற்றோர்களோ அல்ல. பள்ளி நிர்வாகம் தான் மூன்றாவது மொழியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இந்தப் பள்ளி நிர்வாகமும் அங்கீகாரம் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு சிபிஎஸ்சி கல்வி வாரியத்தை முழுமையாகச் சார்ந்துள்ளது. இந்த சிபிஎஸ்இ கல்வி வாரியமும் வட இந்திய அரசியல்வாதிகளைச் சார்ந்தே இயங்குகிறது.
தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகளில் இன்றைய நிலையில் கூட பொதுவாக கற்பிக்கப்படும் மூன்றாம் மொழிகள் இந்தியும், சமஸ்கிருதமும் தான்.
இந்திய அளவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மொழி இந்தி மொழி என்று பள்ளி நிர்வாகங்கள் கூறுவதால் இந்தி மொழியே பல பள்ளிகளில் கட்டாயமாக அல்லது முதன்மை விருப்பமாக வழங்கப்படுகிறது.
அடுத்த நிலையில் சமஸ்கிருத மொழி உள்ளது. இந்த மொழியைப் படித்தால் தேர்வில் மிக எளிதாக அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்றும், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வேலை வாய்ப்பை பெறலாம் என்றும் நம்ப வைக்கப்படுவதால் இம்மொழியும் முதன்மை விருப்பமாக முன்வைக்கப்படுகிறது.
மேற்கண்ட இரண்டு மொழிகளுக்கும் குறைந்த ஊதியத்தில் அதிக ஆசிரியர்கள் கிடைக்கிறார்கள் என்பதும், வட இந்திய அரசியல்வாதிகளைச் சார்ந்து இயங்குவதால் வேண்டிய சலுகைகளை எளிதில் பெறலாம் என்பதுமே இங்கு உண்மையான காரணம்.
ஆகவே, மூன்றாவது மொழி என்று இந்திய மொழிகள் பலவும் முன்வைக்கப்பட்டாலும் நடைமுறைக்கு வருவது என்னவோ இந்தியும், சமஸ்கிருதமும் தான். இதுதான் மூன்றாவது மொழியை நடைமுறைப்படுத்தத் துடிக்கும், தாய் மொழியின் வளர்ச்சி, இந்திய மொழிகளின் வளர்ச்சி என்று பேசுவோரின் விருப்பமும் ஆகும்.
இதை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்? என்பதைப் பொறுத்தே நமது அடுத்த தலைமுறையின் வளர்ச்சி இருக்கும்.
ஆகவே, அசுர பலம் பொருந்திய மூர்க்கர்களின் சட்டப்படியான வன்முறைகளை, திட்டமிட்டு திணிக்கும் வன்முறைகளைக் கட்டாயம் நாம் எதிர்கொண்டாக வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். ஆகவே, இதற்கான அரசியல் ரீதியான மாற்றங்கள் ஏற்படும் வரை இந்தச் சிக்கலை வேறு வகையாக நம்மால் கையாள முடியும்.
அதில் ஒரு நடைமுறை திட்டம்தான் மாநிலங்களோடு மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு தங்களது தாய் மொழிகளை முன்னெடுக்கும் தாய் மொழித் திட்டம்.
உதாரணமாக தமிழ்நாடு அரசு கேரளா அரசோடு அல்லது ஆந்திரா அரசோடு அல்லது மேற்குவங்க அரசோடு அல்லது காஷ்மீர் அரசோடு என்று ஏதாவது ஒரு மாநில அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அது எவ்வகை புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றால், அங்குள்ள சிபிஎஸ்சி பள்ளிகளில் மூன்றாவது மொழியாக தமிழ் மொழியை கற்றுத் தந்தால் அதற்கான வளங்களையும், ஆசிரியர்களையும் தமிழ்நாடு அரசு தந்து உதவும். ஆசிரியர்களின் ஊதியத்திலும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ்நாடு அரசே வழங்கும். அதுபோல தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட மாநிலத்தின் மொழி கற்பிக்கப்படும். உதாரணத்திற்கு கேரளா அரசோடு தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டால் தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகளில் மூன்றாவது மொழியாக மலையாளம் கற்பிக்கப்படும். இதற்கான வளங்களையும், ஆசிரியர்களையும் கேரளா அரசு தர வேண்டும்.
மூன்றாவது மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாநில அரசுகளே குறிப்பிட்ட சதவீதம் ஊதியம் தருதல், கற்றல் கற்பித்தலுக்கு தேவையான வளங்களை அதாவது பாட நூல்கள், அது சார்ந்த வழிகாட்டுதல்கள், பயிற்சிகள் ஆகியவற்றை இலவசமாகத் தருதல் போன்றன பள்ளி நிர்வாகங்களுக்கு துணையாக இருப்பதால் பள்ளி நிர்வாகங்களும் இத்திட்டத்தை விருப்பத்தோடு ஏற்றுக்கொள்ளும். மூன்றாவது மொழியை தீர்மானிக்கும் முதன்மை சக்தியாக பள்ளி நிர்வாகங்கள் இருப்பதால் அவர்களின் ஆதரவைப் பெற இந்த நிதி உதவி பெரிதும் உதவும்.
இந்தி என்பது இந்தியாவுக்கு வெளியே வேண்டுமானாலும் ஒரு மொழியாக
இருக்கலாம். ஆனால் இந்தியாவிற்குள் இந்தி என்பது ஆதிக்க சக்தி. அழிவு சக்தி.
இந்தியை ஏற்றுக்கொண்ட வட மாநிலங்கள் தங்களின் தாய் மொழியை இழந்தன; பண்பாட்டை இழந்தன; நாகரிகத்தை இழந்தன; அரசு வேலை வாய்ப்புகளை இழந்தன; வணிகத்தை இழந்தன; தொழில்களை இழந்தன; வியாபாரத்தை இழந்தன; தங்கள் மண்ணின் உரிமைகளை இழந்தன; இறுதியில் இன்று உயிர்வாழும் உரிமைக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த மாநிலங்களில் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய இடத்தில் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் வந்து விட்டார்கள். அவர்களின் அடிமைகளாக அந்த மண்ணின் மைந்தர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் மண்ணில் வாழ வழியற்று சொந்த மண்ணின் மக்கள் புலம் பெயர் தொழிலாளர்கள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலை நமக்கு வரவேண்டுமா? நமது எதிர்கால சந்ததிகளுக்கு இதைத்தான் நாம் விட்டுச் செல்லப் போகிறோமா? சிந்திப்போம்; செயல்படுவோம்.
இப்படிக்கு,
ச.மோகனராசு,
வண்ணத்தமிழ் வகுப்பறை.


