#👌இந்த நாள் நல்ல நாள்🤝 இறங்கும் அழகர் உடுத்தும் பட்டு... இந்த வருடம் மதுரைக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன?* 🌹
*மே-1 மதுரை சித்திரைத் திருவிழா!*
மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றது. அந்த அற்புதக் காட்சியைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். அன்றைய தினம் மதுரை மாநகரமே குலுங்கும். கள்ளழகர் ஏன் வைகை ஆற்றில் இறங்க வேண்டும்?
மதுரையில், தங்கை மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரரான சிவபெருமானுக்கும் நடைபெறும் திருமணத்தைக்காண திருமாலின் அம்சமாக, அருகே உள்ள அழகர்கோவிலில் அருள்பாலிக்கும் சுந்தரராஜ பெருமாள் என்ற கள்ளழகர் மதுரைக்கு வருகிறார். அவர் வைகையை கடந்து மதுரை நகருக்குள் வருவதற்குள் திருமணம் முடிந்து விடுகிறது. அதனால் கோபித்துக் கொண்டு மீண்டும் அழகர் கோவிலுக்கே திரும்பி விடுகிறார்.
மதுரை வரும் கள்ளழகர் துர்வாசர் சாபத்தால் தவளை உருவில் இருக்கும் கதபஸ் முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார் என்பது மற்றொரு புராணக்கதை. இந்த இரு நிகழ்ச்சிகளும் மதுரை சித்திரைத் திருவிழாவாக 10 நாட்கள் நடைபெறுகிறது.
சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருப்பார் அழகர். மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கி கள்ளழகர் வேடத்தில் புறப்படுகிறார். அந்தக் காலத்தில் கள்ளழகரின் பாதுகாவலராக வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றுவரை அந்த ஜமீன் வாரிசுகள்தான் கள்ளழகருக்குப் பாதுகாப்பு, இன்றும் ஜமீன்தார் வந்து அவருக்குரிய மரியாதைகள் வழங்கப்பட்ட பிறகுதான் கோயிலைவிட்டு மதுரைக்குக் கிளம்புவார் அழகர்.
கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார். அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டுகிறது.
நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கு நுபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா... என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அதிகாலையில் அழகருக்கு நடக்கும் சிறப்பு அலங்காரத்துக்காக முந்தைய நாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாள் சூடிய மாலை கொண்டு வரப்படும் .அந்த மாலையை ஏற்றுக்கொண்டுதான் அழகர் தங்கக்குதிரையில் அமர்ந்து வைகையில் இறங்குவார்.
ஐந்தாம் நாள் பௌர்ணமியன்று அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது. அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப்பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச்சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது.
ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக்கொள்வார்கள். அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர்.
ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வரும் அழகர். அங்கு தங்க கருட வாகனத்துக்கு மாறுகிறார், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர் ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்கி இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்துகிறார்.
ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் தல்லாகுளத்தில் உள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும். எட்டாம் நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவ சாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவடைகிறது.🙏🌹


