42-வது வயதில் B.Com, 50-ல் CA; 86 வயதிலும் சார்ட்டேர்ட் அக்கௌண்டென்டாக பணியாற்றும் அதிசயம்!
மதுரையைச் சேர்ந்த பத்மாவதி ஹரிஹரன் பற்றிய கதை இது. ஒரு சாதாரண இல்லத்தரசியிலிருந்து அசாதாரண சாதனையாளராக மாறிய வாழ்க்கைப் பயணம்.
தற்போது அவருக்கு 86 வயது. இந்த வயதிலும் சார்ட்டேர்ட் அக்கௌண்டென்டாக செயல்பட்டு வருகிறார்.
இளமையில் பத்மாவதியின் ஆசை ஒரு பட்டதாரியாக வேண்டும் என்பதுதான். ஆனால், 17 வயதிலேயே திருமணம் நடைபெற்றது.
குடும்ப வாழ்க்கையின் பொறுப்புகளில் பல ஆண்டுகள் கழிந்துவிட்டது. இருந்தாலும் அந்த ஆசை மனதில் மங்காமல் இருந்தது. அதனால், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மூலம் 42 வயதில் B.Com பட்டம் பெற்றார்.
இந்த வயதிலும் அவருடைய கல்வி ஆர்வத்தை கவனித்த சார்ட்டேர்ட் அக்கௌண்டென்ட் C.V.S. மணி, அவரை CA படிப்பிற்கு வழிநடத்தினார். இளம் வயதினருக்கே கடினமான இந்தப் படிப்பில், 42 வயதுக்கு மேல் உள்ள ஒரு இல்லத்தரசி இணைவது பெரிய சவாலாக இருந்தது.
ஆரம்பத்தில் தயங்கிய பத்மாவதிக்கு, “இப்போதைக்கு M.Com சேர்ந்து, அதோடு CA-வையும் முயற்சி செய்யலாம்” என்ற ஆலோசனையை அவர் வழங்கினார்.
இறுதியில், 45 வயதில் CA படிப்பில் சேர்ந்தார். 50 வயதில் வெற்றி பெற்றார்!
CA தேர்வின் ஒவ்வொரு பேப்பரும் கடினமானவை. ஆனால், அனைத்தையும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று, வரலாற்றுச் சாதனை படைத்தார்.
அப்போது அவர் மூன்று குழந்தைகளின் தாயாக இருந்தார். குடும்ப பொறுப்புகளையும் கவனித்துக்கொண்டே இந்த கடினமான படிப்பில் வெற்றி பெற்றது இன்று கூட வியப்பூட்டுகிறது.
அவரது படிப்பு முறையும் வித்தியாசமானது. சமையலறையில் வேலை செய்யும் போதும் படிப்பார். சுவற்றில் குறிப்புகளை எழுதிவைத்து, வீட்டில் நடமாடும் போதும் படிப்பை தொடர்ந்தார்.
சில சமயங்களில், அயலவர்களுடன் பேசாமல் இருக்க வீட்டையே பூட்டி வைத்து படித்ததும் உண்டு என்று அவர் கூறியுள்ளார்.
M.Com மற்றும் CA படிப்புகளை ஒரே நேரத்தில் படித்தது மேலும் ஒரு சவாலாக இருந்தது. ஒரே நாளில் இரு தேர்வுகளையும் எழுத வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்பட்டன.
வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தாலும், அவர்களுக்கு உணவு செய்து வைத்து தேர்வுக்கு செல்ல வேண்டியிருந்தது. அதே சமயம் அருகிலிருந்த இசைக்குழுவிலும் அவர் செயல்பட்டார்.
அம்மாவின் பாதையைப் பின்பற்றி, இளைய மகனும் CA தொழிலில் சேர்ந்தார். வருமான வரித்துறையில் Assistant Commissioner ஆக இருந்த அவரது கணவர் E. ஹரிஹரனின் ஆதரவு இல்லாமல் இந்த சாதனைகள் சாத்தியமாகியிருக்காது என்று பத்மாவதி கூறுகிறார்.
73 வயதில் 98% மதிப்பெண்களுடன் சம்ஸ்கிருத பாரதி தேர்வையும் வெற்றி பெற்று, மன உறுதி இருந்தால் வயது ஒரு தடையாகாது என்பதை மீண்டும் நிரூபித்தார்.
“தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்; வெற்றி உங்களை விட்டு போகாது” – இன்றைய இளைஞர்களுக்கு பத்மாவதி கூறும் ஒரே செய்தி இதுதான்.
இதைக் படிக்கும் ஒவ்வொருவரும் உணர வேண்டியது – உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம்.
உங்கள் கருத்து?
#படித்தேன்_பகிர்ந்து_கொண்டேன் #🤩அசத்தலான போஸ்ட்🔥



