சிவ சிவ வணக்கம்!
(எஞ்ஞானம் இல்லாதேன், கண்ணாடிபோல் கண்டதை காட்டுகின்றேனே)
திருமந்திரம்.
பாடல் எண் ; 310.
தோன்றிய எல்லாந் துடைப்பன் அவனன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே.
----- திருமூலர்.
எக்காலத்தும் யாண்டும் எல்லாவற்றையும் ஒருங்கு படைப்பவன் சிவன். அம் முறையான் அவன் அந்தத்தைச் செய்கின்றவன் ஆவன். அதனால் அவனை மெய்கண்ட நூல் அந்தம் என ஓதிற்று. பேரொடுக்கத்தைச் செய்பவன் சிவனே. அவனையன்றி வேறு யாரும் இலர். அவனே ஆண்டான். அவன் திருவடியை ஏன்று நின்றார் நடுவு நின்றாராவர். அவன் திருப் பெயராகிய ‘சிவயநம' என்னும் செந்தமிழ்த் திருவைந்தெழுத்தினைத் திருவருளால் இடையறாது முயன்று உளங்கனிந்து ஓதினவரும், அவ் வைந்தெழுத்தினையே அறிவுபற்றி நின்றவரும் நடுவு நின்றாராவர் என்கின்றார்.
இத் திருமறை நடுவு நின்றார் தன்மையினை நவிலுகின்றது.
நான்று - பற்றி.
திருச்சிற்றம்பலம்... #🙏ஆன்மீகம்


