சித்திரை திருவாதிரை ஸ்வாமி ராமானுஜர் 1009ஆவது திருஅவதார திருநாள்.
ஆழ்வார்கள் அவதரித்த திருநாட்களை விட, உடையவர் அவதரித்த திருநாளை, இன்னும் போற்றுகிறார், மணவாள மாமுனிகள்.
ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் - ஏழ்பாரும்
உய்ய எதிராசர் உதித்து அருளும் சித்திரையில்
செய்ய திரு வாதிரை!
எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா
வந்துதித்த நாள் என்னும் வாசியினால் - இந்தத்
திருவாதிரை தன்னின் சீர்மை தனை நெஞ்சே
ஒருவாமல் எப்பொழுதும் ஓர்!
வரிக்கு வரி, தன் அத்தனை நூல்களிலும், இராமானுசரைக் கண்களால் ஒத்திக் கொள்வார் வேதாந்த தேசிகர்,
இராமானுச முனி இன்னுரை சேர்
சீரணி சிந்தை...
சிந்தியோம் இனி அல் வழக்கே!
அவன் அடியோம், படியோம் இனி அல் வழக்கே...
தமிழில் மட்டுமல்லாது, வடமொழியிலும், உடையவர் வெகுவாகப் போற்றப் படுகிறார்!
யோ நித்யம் அச்சுத பதாம்புஜ யுக்மருக்ம என்று தொடங்கும் துதியில்..
அஸ்மத் குருர் பகவதோஸ்ய, தயைக சிந்தோ
ராமானுஜஸ்ய சரணெள சரணம் ப்ரபத்யே!
என்று "தயைக சிந்தோ"-கருணை வள்ளலான...இராமனுசன் திருவடிகளே தஞ்சம்!
தெலுங்கு மொழியிலும் இராமானுசன் பலவாறு போற்றப் படுகிறார்!
தியாகராஜருக்கும் முந்தைய காலத்தவரான...
அன்னமாச்சார்யர், இராமானுசன் மேல் ஒரு தனிக் கீர்த்தனையே செய்துள்ளார்!
கதுலன்னி கிலமைன கலியுக மந்துனு
என்று துவங்கும் தெலுங்கு கீர்த்தனையில்...
மலசி ராமானுஜுலு
மாடலாடே தெய்வமு..
ஈதடே ராமானுஜூலு
இகபர தெய்வமு..
நயமை ஸ்ரீவேங்கடேசே (அன்னமய்யா) நாக மெக்க வாகி தன்னு
தய சூசி தய சூசி ராமானுஜ தெய்வமு...
என்று சுந்தரத் தெலுங்கில் கொண்டாடப்படும்,
இராமனுஜ பாத பத்மாலு சரணம்!
இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!
திருமங்கை மன்னன் துவங்கிய தமிழ் விழா எல்லாம் திருவரங்கத்தில் காலப் போக்கில் நின்று போக...
அதை இன்று வரை விடாது நடத்தும் படி வகை செய்து கொடுத்த உடையவர்...
அதனால் தான் திருமங்கையாழ்வார் தனியனில் கூட, இராமானுசனே போற்றப் படுகிறார்!
எங்கள் கதியே இராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா - பொங்கு புகழ்
"மங்கையர் கோன்" ஈந்த மறை ஆயிரம் அனைத்தும்
தங்கும்மனம் நீஎனக்குத் தா!
இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!
பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி,
சமூகமே அறியும் வண்ணம், பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புக்கள் கொடுத்து..
அத்துழாய்,ஆண்டாள்,பொன்னாச்சி,
தேவகி,அம்மங்கி,
பருத்திக் கொல்லை அம்மாள்,
திருநறையூர் அம்மாள்,
எதிராச வல்லி...
என்று எத்தனை எத்தனை பெண்கள், அவர் அரங்க கோஷ்டியில்!
பெண் குலம் தழைக்க வந்து பெரும்பூதூர் மாமுனிகள் திருவடிகளே தஞ்சம்!
அன்புக்கும் காதலுக்கும் தோழி கோதையைப் பிடித்துக் கொண்டவர் இராமானுசன் என்றால்...
தத்துவ தமிழ் வேதத்துக்கு, மாறன் என்னும் நம்மாழ்வாரை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட இராமானுசன்!
ஊரெல்லாம் இறைவன் சடாரி நம்மாழ்வார் என்றால்
ஆழ்வார் திருநகரியில் மட்டும், நம்மாழ்வார் காலடிச் சடாரி..."இராமானுசம்"!
இப்படி மாறனை மனத்தால் துய்த்த பிரான்...
பூ மன்னு மாது
மாது பொருந்திய மார்பன்
மார்பன் புகழ் மலிந்த பா
பா மன்னு "மாறன்"
"மாறன்" அடி பணிந்து உய்தனன்....
தாம் மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ..
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே!
மாறன் திருவடி நிலையான இராமானுசன் திருவடி நிலையே தஞ்சம்!
இஸ்லாம் பெண்ணுக்கு, கோயில் கருவறையில் சிலை!
அதுவும், நம்மாழ்வார் இருப்பதாகக் கருதப்படும், இறைவன் காலடியில், துலக்கர் பெண்ணை பிரதிஷ்டை...
கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா, அதுவும் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு?
அரங்கனுக்கு லுங்கி கட்டி, ரொட்டி நைவேத்தியம் செய்வித்தாரே!
எந்த சாஸ்திரத்தில் உள்ளது? எந்த ஆகமத்தில் உள்ளது? எந்த ஆசார்ய விளக்கத்துக்கு மாறாக அமைந்தது?
துலக்கா நாச்சியாரைக் கொண்டாடிய எங்கள் சமரச சன்மார்க்க வள்ளல், இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!
மேலக்கோட்டையில் அனைவரையும், "திருக்குலத்தார்" என்று உள்ளே நுழைத்துக் காட்டிய வள்ளல்...
சாதி இல்லா இறைமையை
சாதித்துக் காட்டிய...
இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!
மத வெறியால், சோழன் வெருட்ட...ஊரை விட்டே ஓடினாலும்...
சமய வெறிக்கு மக்கள் இரையாகி மாளக் கூடாது என்பதை மனதில் வைத்து...
தில்லையிலிருந்து தூக்கி வீசிய பெருமாள் சிலையை, மீண்டும் அங்கேயே தான் வைப்பேன் என்று அடம் பிடிக்காது...அரசியல் செய்யாது...
கீழ்த் திருப்பதியிலேயே வைத்துக் கொள்ளலாம்! இன்னொரு மதப் பூசல் வேண்டாம் என்று சொல்லும் உள்ளம்.
சமயத்தை விடச் சமூகத்தைக் கணக்கில் கொண்ட
எங்கள் இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!
இன்றைக்கும் மடாதிபதிகள் பல்லக்கில் செல்கிறார்கள்! பட்டினப் பிரவேசமாம்!
ஆனால் கால்நடையாகவே அலைந்து அலைந்து பணியாற்றிய கால்கள்!
* சோழன் துரத்த ஓடிய கால்கள்!
* மேலக்கோட்டை செல்வப் பிள்ளை விக்ரகம் பெற, வடநாடு ஓடிய கால்கள்
* திருப்பதியில் பெருமாளா? சிவனா? என் முருகனா? என்று வம்பு வந்த போது, வயதான காலத்திலும், அங்கு ஓடிய கால்கள்
* தி்ருக்கோட்டியூருக்கு 18 முறை நடையாய் நடந்த கால்கள்...
சொகுசான மடாதிபதியாய் இருக்காது...
அலைந்து அலைந்தே திரிந்த அந்தத் திருவடிகளே...
இராமானுசன் திருவடிகளே நமக்குத் தஞ்சம்!
திருமலையில்.....எம்பெருமான் திருவேங்கடமுடையான் மாயோனே என்று
புறநானூறு,கலித்தொகை,சிலப்பதிகாரம்
நக்கீரர் என்று சங்க இலக்கியங்கள் வாயிலாகவும்
பவிஷ்யோத்திர புராணம், ஸ்கந்த புராணம், வராக புராணம்
மற்றும் இதர சம்ஹிதைகள் வாயிலாகவும்...
எடுத்துக் காட்டி நிலை நிறுத்தி, வீண் கும்மிகளை அன்றே ஒழித்துக் கட்டிய பான்மை...
அப்பனுக்குச் சங்காழி அளித்த அண்ணல், நம் இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!
காரேய்க் கருணை இராமானுசா...இக்கடல் நிலத்தில்
யாரே அறிவர், நின் அருளாம் தன்மை? - அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்! என்னை நீ வந்துற்ற போது..
சீரே உயிர்க்கு உயிராம்...அடியேற்கு இன்று "தித்திக்கின்றதே"!
எம்பெருமானார் திருவடிகளே சரணம்!
இன்னும் அள்ள அள்ளக் குறையாத உள்ளம் நம் இராமானுசன்!
ஆன்மீகத்தில், உரைகளை விட, உள்ளமே முக்கியம் என்று ஈடுபடுத்திக் காட்டிய வள்ளல்!
* முன்னுள்ள ஆசார்யர்கள் - நாதமுனி, ஆளவந்தார்
* பின்னுள்ள ஆசார்யர்கள் - நம்பிள்ளை, வேதாந்த தேசிகன், பிள்ளை லோகாசார்யர், மணவாள மாமுனிகள்...
என்று அத்தனை பேர்க்கும் நடு நாயகமாய் விளங்கும்...
குரு பரம்பரைக்கு நடு மணியாய் விளங்கும்...
சீரார் இராமானுசன், எங்கள் இளையாழ்வார் திருவடிகளே சரணம்!
இறைவனைப் போல்...
இராமானுசனுக்கும் பன்னிரு திருநாமங்கள்!
1. பெரிய திருமலை நம்பி சூட்டிய = இளையாழ்வார் திருவடிகளே சரணம்!
2. பெற்றோர் சூட்டிய = இராமானுசன் திருவடிகளே சரணம்!
3. பெரிய திருமலை நம்பி சூட்டிய = பரதபுரீசன் திருவடிகளே சரணம்!
4. காஞ்சி வரதன் சூட்டிய = யதிராசன் திருவடிகளே சரணம்!
5. அரங்கத்தில் நம்பெருமாள் சூட்டிய = உடையவர் திருவடிகளே சரணம்!
6. வேங்கடவன் சூட்டிய = தேசிகேந்திரன் திருவடிகளே சரணம்!
7. அன்னை சாரதா தேவி, சரஸ்வதி சூட்டிய = ஸ்ரீபாஷ்யக் காரர் திருவடிகளே சரணம்!
8. பெரிய நம்பி கொண்டாடிய = திருப்பாவை ஜீயர் திருவடிகளே சரணம்!
9. திருக்கோட்டியூர் நம்பி சூட்டிய = எம்பெருமானார் திருவடிகளே சரணம்!
10. திருமாலை ஆண்டான் சூட்டிய = சடகோபன் பொன்னடி திருவடிகளே சரணம்!
11. திருவரங்கப் பெருமாள் அரையர் சூட்டிய = இலட்சுமண முனி திருவடிகளே சரணம்!
12. என் தோழி கோதையின் கனவை நனவாக்கி வைத்த = நம் கோயில் "அண்ணன்" திருவடிகளே சரணம்!
பல்லாண்டு பல்லாண்டு
அடியார்கள் வாழ
அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ
மறை வாழ, மனம் வாழ,
இன்னும் பல நூற்றாண்டு இரும்!
#RamanujanJayanti #ramanujar #ethirajar #Sriperumbudur #srirangam_temple #Ramanujacharya #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்


