செ.சாா்லஸ் செபஸ்டின்
#இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை #இன்றைய வசனம் சிந்தனை*
*“அவர்தம் ஊழியர்களுக்காக அவர் மனமிரங்கினார்”*
மன்னருக்கு எதிராகக் கலகம் செய்தார்கள் என்று படைவீரர்கள் ஒருசிலரை அவருக்கு முன்பு இழுத்துக்கொண்டு வந்து நிறுத்தினார்கள். மன்னர் அவர்களை விசாரித்துவிட்டு, “இவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம்?” என்று அவையோரைப் பார்த்துக் கேட்டபோது, அவையோர், “இவர்களைத் தூக்கிலிடுங்கள்” என்று கத்தினார்கள்.
அப்போது ஒரு சிறுவன், “இவர்களைத் தூக்கிலிட வேண்டாம்; மன்னியுங்கள்” என்றான். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல, மன்னருடைய மகனே! ‘எல்லாரும் கலகக்காரர்களைத் தூக்கிடுலிடுங்கள் என்று சொன்னபோது, இளவரசர் மட்டும், மன்னியுங்கள் என்று சொல்கிறாரே! மன்னர் யாருடைய குரலைக் கேட்பார்?’ என்று அவையோர் ஆவலோடு காத்திருந்தபோது, மன்னர் தனது பதினொரு வயது மகன் சொன்னதுபோன்று, கலகக் காரர்களை மன்னித்துவிட்டார்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் மன்னர் கலகக்காரர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று நினைத்துபோது, அவரது மகன் சொன்னதுபோன்று, அவர்களைத் தூக்கிலிடாமல் மன்னித்து விட்டார். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில், “அவர்தம் ஊழியர்களுக்காக அவர் மனமிரங்கிடுவார்” என்ற வார்த்தைகள் இடம்பெறுகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.
*திருவிவிலியப் பின்னணி:*
ஆண்டவர் நடுவராய் இருக்கின்றார். அவர் பொல்லாரை, அதிலும் குறிப்பாக, சிலைகளையும், வேற்று தெய்வங்களையும் வழிபடுவோரைத் தண்டிக்கின்றீர். அதே நேரத்தில் அவர் தம் ஊழியர்மீதும் தமக்கு அஞ்சி வாழ்வோர்மீதும் மனமிரங்குகின்றார் என்ற செய்தியை உணர்த்துவதுதான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட இறைவாக்குப் பகுதி.
மோசேயின் பாடலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய பதிலுரைப்பாடல், “அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது ; அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமான்றன” என்கிறது. இவர்கள் யாரென்றால், ஆண்டவரை மறந்து, பிற தெய்வங்களை வழிபட்டவர்கள். மோசே சீனாய் மலைக்குச் சென்றபோது, மலைக்குக் கீழே பொன்னால் ஆன கன்றுக்குட்டியைச் செய்து வழிபட்டார்களே அவர்களைச் சொல்லலாம்.
அதே நேரத்தில், “அவர்தம் ஊழியர்களுக்காக அவர் மனமிரங்கிடுவார்” என்கிறது பதிலுரைப்பாடல். இது ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய வழியில் நடப்போர் ஆண்டவரிடமிருந்து பெறும் இரக்கத்தைக் காட்டுகின்றது. கடவுள் தம் மக்களிடமிருந்து எதிர்பார்ப்பது தன்னை அன்பு செய்வதையும், தனக்கு ஊழியம் புரிவதையும்தான். எனவே, நாம் ஆண்டவருக்கு மட்டுமே அஞ்சி, அவருக்கு மட்டுமே ஊழியம் செய்து வாழ்வோம்.
*சிந்தனைக்கு:*
ஆண்டவரே கடவுள்; அவருக்கு நிகர் யாருமே இல்லை.
சிலைகளால் நம்மைக் காப்பாற்ற முடியாது; ஏனெனில், அவை மனித கை வேலைப்பாடே!
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோர்க்கு அவரது பேரன்பும் இரக்கமும் ஆயிரம் தலைமுறை வரைக்கும் இருக்கும்.
*இறைவாக்கு:*
‘ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ அவருக்குத் தாம் தேர்ந்துகொள்ளும் வழியை ஆண்டவர் கற்பிப்பார்’ (திபா 25:12) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் ஆண்டவருக்கு அஞ்சி வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
*- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*