#நல்லதே பேசு நல்லதே நினை தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முஸ்லிம் மக்கள் கழகம் திடீர் திருப்பமாக “யாருடனும் கூட்டணி இல்லை” என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில், முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச. சு. ஜைனுதீன் தலைமையிலான நிர்வாகிகள், திராவிட முன்னேற்றக் கழகம் மாநில அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி அவர்களை சந்தித்து, 2026 தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
ஆனால் அதன்பிறகு முஸ்லிம் மக்கள் கழகத்தை அதிகாரப்பூர்வமாக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்காதது கட்சிக்குள் அதிருப்தியை கிளப்பியதாக கூறப்படுகிறது. “மரியாதை இல்லாத கூட்டணியில் இடமில்லை” என்ற மனநிலையே இந்த முடிவுக்கு காரணம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, “வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் எவருக்கும் ஆதரவு இல்லை; மாநிலம் முதல் நகரம், ஒன்றியம், மகளிர் அணி வரை அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் பிஜேபி அல்லாத கூட்டணி வேட்பாளர்களுக்கு தனிப்பட்ட விருப்பப்படி வாக்களிக்கலாம்” என முனைவர் ஜைனுதீன் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சிறுபான்மை வாக்குகள் எந்த திசைக்கு செல்லும்? தி.மு.க.வுக்கு இது பின்னடைவு தானா? அல்லது அமைதியான வாக்கு மாற்றம் நிகழுமா? என்ற கணக்குப் போட்டிகள் துவங்கியுள்ளன.
“மக்கள் மக்கள் பணியில்” என்ற கோஷத்துடன் தனித்துப் பாதை வகுக்கும் முஸ்லிம் மக்கள் கழகம், இந்த தேர்தலில் ‘கிங் மேக்கரா’ அல்லது ‘கேம் சேஞ்சரா’ மாறுமா என்பது அரசியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.