#🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ பிறப்பு சான்றிதழ் - ஆதார் தயாரித்தல்.. மாறுவேடத்தில் ஆதார் மையத்திற்கு விசிட் அடித்த தாசில்தார். இருபர் கையும், களவுமாக பிடிபட்டனர்!*
தேனி மாவட்டத்தில் எவ்வளவு பெரிய அக்கிரமம் நடந்துள்ளது பாருங்கள்.. கொடுவிலார்பட்டியில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையத்தில் போலி பிறப்புச் சான்றிதழ் தயாரித்து, அதன் மூலம் ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றித் தந்தது முறைகேடு தொடர்பாக, அந்த மையத்தின் ஊழியர் மயிலாடும்பாறை சின்னபாண்டி என்பவரை நுண்ணறிவு காவல் துறையினரால் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.. இந்த சம்பவம்தான் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் ஒரு குடிமகனுக்குப் பிறப்பின் அடிப்படையில் அரசாங்கத்தால் வழங்கப்படும் முதல் மற்றும் மிக முக்கிய ஆவணமாக திகழ்வது பிறப்புச் சான்றிதழ்தான்..
அதேபோல ஒவ்வொரு குடிமகனின் அன்றாட தேவைகளுக்கும், அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் தவிர்க்க முடியாத முதன்மை அடையாள அட்டையாக திகழ்வது ஆதார் அட்டையாகும்.. கல்வி, வேலைவாய்ப்பு, வங்கிச் சேவைகள் இப்படி எல்லாவற்றிற்குமே இந்த 2 ஆவணங்களும் தவிர்க்க முடியாதவையாகும்..
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அரசாங்க ஆவணங்களிலேயே போலி ஆவணங்களைப் புகுத்தி, ஒரு முறைகேட்டை கன கச்சிதமாக செய்திருக்கிறார் தேனி சின்னபாண்டி..
தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டியில் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் சார்பாக ஆதார் சேவை மையம் ஒன்று தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் ஆதார் தொடர்பான தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய இந்த மையத்தில், முறையான எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமலேயே, போலியாக பிறப்புச் சான்றிதழ்களை தயாரித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஆதார் அட்டைகளில் பிறந்த தேதியைத் திருத்தம் செய்து தருவதாகவும், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வைத்திநாதன், ஐஏஎஸ்-க்கு கிடைத்த ரகசிய புகார்கள்.
இதைக்கேட்டு அதிர்ச்சிடைந்த மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்தியநாதன், ஐஏஎஸ்., இந்த புகாரின் உண்மைத் தன்மையைக் கண்டறியவும், முறைகேட்டில் ஈடுபடுவோரை ஆதாரங்களுடன் கையும், களவுமாக பிடிக்கவும் அதிரடியான உத்தரவைப் பிறப்பித்தார்... அந்த உத்தரவுபடியே, அரசு கேபிள் டி.வி. தாசில்தார் கிருஷ்ணகுமார், உதவி மேலாளர் கார்த்திக் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஆதார் சேவை மையத்திற்கு, மாறுவேடத்தில் சென்று ஆய்வு நடத்த முடிவு செய்தார்கள்.
அதாவது, தாசில்தார் கிருஷ்ணகுமார் பொதுமக்களில் ஒருவரை போல கொடுவிலார்பட்டி ஆதார் சேவை மையத்திற்கு சென்றிருக்கிறார்.. அங்கிருந்த ஊழியர்களிடம், தன்னுடைய ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை மாற்ற வேண்டும் என்றும், ஆனால் அதற்கான முறையான பிறப்புச் சான்றிதழ் தன்னிடம் இல்லை என்றும் சொல்லியுள்ளார்..
அப்போது அந்த மையத்தில் மயிலாடும்பாறையைச் சேர்ந்த சின்னப்பாண்டி மற்றும் பிரியா ஆகிய 2 ஊழியர்கள் பணியில் இருந்திருக்கிறார்கள். .
தாசில்தார் கிருஷ்ணகுமார் முறையான ஆவணங்கள் இல்லை என்று சொன்னதுமே, அந்த 2 ஊழியர்களும், "அதனாலென்ன, பிறப்புச் சான்றிதழ் இல்லாமலேயே பிறந்த தேதியை மாற்றி தருகிறோம், ஆனால் லஞ்சமாக 3000 ரூபாய் மட்டும் தந்தால் போதும்" என்று சொல்லியுள்ளார்.
இதைக்கேட்டு தாசில்தார் கிருஷ்ணகுமார் அதிர்ச்சியடைந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவர்களின் முறைகேட்டை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முயன்றார்.. இதற்காக அவர்கள் கேட்டபடியே ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலம் 3,000 ரூபாயை 2 ஊழியர்களுக்கும் தாசில்தார் கிருஷ்ணகுமார் அனுப்பி வைத்துள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட ஊழியர்கள் சின்னப்பாண்டியும், பிரியாவும், அந்த சேவை மைய கம்ப்யூட்டரிலேயே கிருஷ்ணகுமார் பெயரில் போலியாக ஒரு பிறப்புச் சான்றிதழைத் தயாரித்திருக்கிறார்கள்.. பிறகு தாங்கள் தயாரித்த அந்த போலி ஆவணத்தையே ஆதாரமாகப் பயன்படுத்தி, ஆன்லைன் மூலமாக அவரது ஆதார் அட்டையில் பிறந்த தேதியையும் திருத்தம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
அரசு அதிகாரியான மாவட்ட கேபிள் டி.வி தாசில்தார் முன்னிலையிலேயே போலி ஆவணங்கள் சிறிது நேரத்தில் தயாரித்தது.. உடனே தாசில்தார் கிருஷ்ணகுமார் உடனடியாக இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் முறைப்படி புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் போலி ஆவணங்கள் தயாரித்த குற்றத்திற்காக ஆதார் மைய ஊழியர்கள் சின்னபாண்டி மற்றும் பிரியா ஆகிய இருவரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இந்த மையத்தின் வாயிலாக வேறு யார் யாருக்கெல்லாம் இப்படியான போலி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்தும், இந்த முறைகேட்டில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்தும் புலன் விசாரணையில் காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார்களாம்...!!









