#✝பைபிள் வசனங்கள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
26.04.2026 (ஞாயிறு)
மகிமை நிறை மறையுண்மைகள்.
முதலாவது. ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய ஞாயிறுத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 23:3-4-ல்,
"தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்." என கூறப்பட்டுள்ளது.
நமது துன்ப வேளைகளில் நம்மைக் காத்து வழி நடத்த நம் ஆயனாம் ஆண்டவர் இயேசு நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய் நாம் எப்போதும் திடன் கொண்டிட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
இரண்டாவது. ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில், "நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்." என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
அலகை என்னும் ஓநாய்களிடம் இருந்து மந்தையாகிய நம்மைக் காக்கவந்த இறைவனுக்கு நன்றியாக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
மூன்றாவது. தூய ஆவியின் வருகையைத் தியானித்து
இந்த வாரம் முழுவதும் நமக்குத் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் கிடைக்கப் பெறவேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
நான்காவது. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
உயிர்த்த ஆண்டவர் இயேசு நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் அன்பு, அமைதி, சமாதானம் ஆகியவற்றை கொணர்ந்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஐந்தாவது. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.