ஒருநாள் இமயமலைச் சாரலில் ஒரு சிகரத்தின் மீது நடந்து கொண்டிருந்தார் வால்மீகி, அங்கே சிகரத்தின் சரிவுகளில் இருந்த பாறைகளின் மீதும், கற்களின் மீதும் கல்வெட்டுக்களாகச் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்து அவற்றைப் படிக்க ஆரம்பித்தார் வால்மீகி.
அவற்றை படிக்க படிக்க அவருக்கு மெய்சிலிர்த்தது. அந்த வாசகங்கள் எல்லாம் ஸ்ரீராமனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சித்திரிப்பதை போன்று அமைந்திருந்தன.
அதிலும் ஆச்சரியம் அவை, தான் எழுதிய ராமாயண வரிகளைவிட, கவிதை நயமும் கருத்து வளமும் மிகுந்த ஆழ்ந்த பொருளமைந்து இருப்பதை உணர்ந்து ரசித்து பிரமித்தார் வால்மீகி மகரிஷி.
இந்தக் கல்வெட்டுகளில் ஸ்ரீராமனின் கதையை யார் உருவாக்கியிருப்பார்கள் என்று எண்ணியபடியே, இமயத்தின் சிகரத்தை நோக்கி நடக்க துவங்கிய அவருக்கு அங்கே மற்றொரு பரவச அனுபவம் கிடைத்தது.
ஆமாம் அங்கே, இராமபக்த அனுமன் யோகநிஷ்டையில் இருந்தபடி ஸ்ரீராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார்.
அவரது யோக நிஷ்டையைக் கலைக்க விரும்பாத வால்மீகி மஹரிஷி, தானும் ராம நாமம் ஜெபிக்க ஆரம்பித்தார்.
வால்மீகி முனிவரின் இராம நாம ஜெபத்தைக் கேட்ட ஆஞ்சநேயர் மகிழ்ச்சி அடைந்து தனது யோக நிஷ்டையிலிருந்து விழித்தெழுந்து, வால்மீகியை வணங்கி ஆசி பெற்றார்.
அவரிடம், வால்மீகி பக்த மாருதியே! இராம காவியம் இத்தனை அழகான கல்வெட்டுக்களாக அமைந்த வரலாற்றை பற்றி கூறு என்று கேட்டார்.
அதற்கு அனுமன் மிகுந்த மரியாதையுடன்,
ஐயா மகரிஷி உங்களுக்கு நமஸ்காரங்கள் 🙏
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் கல்யாண குணங்களையும் அவரது பெருமைகளையும் இங்கே காணும் கற்களில் நான்தான் எனது நகத்தால் செதுக்கி வைத்தேன். யுகம் யுகமாக ஸ்ரீராமனின் கதை பேசப்படவேண்டும் என்பதற்காக இந்தக் காரியத்தைச் செய்தேன்.
ஸ்ரீராமனை ரிஷ்யமுக பர்வதத்தில் நான் சந்தித்தது முதல், பட்டாபிஷேகம் வரை எனக்குத் தெரிந்த ராம கதையை உருவாக்கினேன். ஆனாலும், தங்களின் ராமாயணத்துக்கு இது கொஞ்சமும் ஈடாகாது! பிழையை பொறுக்க வேண்டுகிறேன் என்றார் ஆஞ்சநேயர்.
அப்போது தூய்மையான பக்தியின் திருவுருவமாக ஆற்றலில் சிறந்தவனாக தன்னடக்க உணர்வையும் கொண்டு திகழும் அனுமனை கண்டு வால்மீகி மஹரிஷியின் கண்களில் அன்பின் மிகுதியால் நீர் கசிந்தது.
இதை அனுமன் கவனித்தார்!! அதற்கான காரணத்தை தயவு செய்து கூறுங்கள் என்று மஹரிஷியிடம் பணிவோடு கேட்டார்.
தான் கல்லில் செதுக்கிய இராமாயண காவிய வரிகளில் எனது அறியாமை காரணமாக தவறேதும் இருந்தால், எடுத்துச் சொல்லி திருத்தும்படியும் வேண்டி நின்றார்.
வால்மீகியின் கண்களில் மேலும் நீர் பெருகியது. எத்தகைய சிறப்பான காரியத்தைச் செய்து விட்டு, எவ்வளவு தன்னடக்கத்துடன் அனுமன் இருக்கிறார் என்பதை எண்ணிப் பெருமிதமும் உவகையும் அடைந்தார்.
பிறகு அனுமனிடம்... அஞ்சனை புத்திரா!
"நீ ஸ்ரீராமனின் சிரேஷ்டமான சிறந்த பக்தன். உன்னால் கல்லில் பொறிக்கப்பட்ட இராமாயணத்தில் தவறு இருக்க முடியுமா?
அல்லது இதைவிட உயர்வாக எவராலும் எழுதிவிட முடியுமா?
நீ எழுதிய காவிய வரிகளில் காணும் பக்திப் பரவசம் தான் என்னை நெகிழ வைத்துவிட்டது.
இது, என் ஆனந்தக் கண்ணீர்தான்.
நான் எழுதிய ராமாயணம் கூட இதற்கு ஈடு இணையாகாது. உன்னுடைய ராமாயணத்தை உலகோர் படிக்கும்போது, என் ராமாயணம் காலப்போக்கில் மறைந்துவிடும் என்றார்.
அதைக் கேட்ட மாத்திரத்தில், அனுமனின் கண்களில் தாரை தாரையாக நீர் சுரந்தது. உணர்ச்சிவசப்பட்ட அனுமன், பாறைகளில் தான் செதுக்கியிருந்த ராமாயண காவிய வரிகளை எல்லாம் தனது வாலால் துப்புரவாக அழித்துவிட்டார்.
பின்னர் வால்மீகியை வணங்கி, தாங்கள் எழுதிய ஸ்ரீராம காவியமே மிகச் சிறப்பானது! காலத்தால் அழியாதது! நான் செதுக்கியது வெறுமே என் உணர்ச்சிகளின் பிரதிபலிப்புதான். தாங்கள் உருவாக்கியதுதான் ஸ்ரீராமனே பாராட்டிய காவியம். அதற்கு ஈடு இணை எதுவும் இருக்காது என்று அமைதியுடன் கூறினார்.
அனுமனின் பக்தியைப் பற்றி வால்மீகி ஏற்கெனவே தெரிந்துகொண்டிருந்தார். அவரது தியாகத்தை இப்போது புரிந்துகொண்டார். அனுமனை மனதார வாழ்த்தினார்.
ஹனுமானே!
நீ எழுதிய ராமாயண எழுத்துக்களை நீயே அழித்து விட்டாய். ஆனால், அந்தக் கருத்துக்கள் என் மனதில் ஆழப் பதிந்துவிட்டன. எனது இராம காவியத்தில் நீ செதுக்கிய இராம கதையும் இடம் பெறும் என்றுகூறி, மனதார வாழ்த்திச் சென்றார்.
அதன்படி, வால்மீகி ராமாயணத்தின் ஒரு பகுதியாக அமைந்ததுதான் ஹனுமத் ராமாயணம் என்று வழங்கப்படுகிறது 🚩🙏 இராம ஸ்ரீநிவாஸன்
மஹா பண்டித அனுமனே போற்றி 🚩🙏
#🙏ஸ்ரீ ராமரின் ஓவியங்கள்🖌 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏ஜெய் ஆஞ்சநேயா #🏹ராம நவமி வாழ்த்துக்கள்🙏 #🙏சீதா ராமர்