#🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 19.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
*அனைவருக்கும் தெலுங்கு வருடப்பிறப்பு நல்வாழ்த்துகள் 💐.*
.
அகிலம்
========
திருநடன வெண்பா – 1.
=====================
நாதன் முறையார்க்கு நற்பிறவி யொன்றுபத்தாம்
வேதன் றனக்குப்பிறவி ஆயிரமாம் - வெண்டரள
மாதுக்கு மாயிரமாம் மாதுமைக் கோரேழாம்
சீதுக்குப் பத்தெனவே செப்பு.
.
விளக்கம்
=========
பிரபஞசத்தை அழிவு நிலையிலிருந்து மீட்டுகின்ற நாயகனாகிய மகாவிஷ்ணுவுக்குப் பெருமையுடைய பத்துப் பிறப்புகளும், பிரம்மதேவனுக்கு ஆயிரம் பிறப்புகளும், வெள்ளைத் தாமரையை ஆசனமாக்கி, வெண்ணிற அணிகலன்களை அணிந்துகொண்டு இருக்கின்ற சரஸ்வதி தேவிக்கு ஆயிரம் பிறப்புகளும், உமையவளுக்கு ஏழு பிறப்புகளும், மகாலட்சுமிக்குப் பத்துப் பிறப்புகளும் உண்டு என்பதும் முன்பே உரைத்ததாகும்.
.
.
அகிலம்
=======
திருநடன வெண்பா – 2.
====================
இந்திரற்கு மூன்றெனவும் இறையவருக் கேழெனவும்
சந்திரற் கோரேழாம் சாற்று - நன்றியுள்ள
மறையதுக்கு மோரேழாம் மானமுள்ள தொண்டருக்கு
இறப்பிறப்பில் லாப்பேறென் றியம்பு
.
விளக்கம்
=========
தேவேந்திரனுக்கு மூன்று பிறப்புகள் எனவும், விண்ணவர்க்கு ஏழு பிறப்புகள் எனவும், சந்திரதேவனுக்கு ஏழு பிறப்புகள் எனவும் எப்பொழுதும் தன்னிலையில் தடுமாற்றம் இல்லாத நன்றியுள்ள நான்கு வேதங்களுக்கும் ஏழு பிறப்புகள் எனவும், எந்த சூழ்நிலையிலும் தடம்புரளாமல் ஒழுக்கம் ஒன்றையே உயிர் மூச்சாகக் கொண்டு வாழுகின்ற மானமுள்ள தொண்டருக்கு மீண்டும் பிறக்க வேண்டியதில்லாத பெரும்பேறு கிடைக்கும் எனவும் பிரபஞ்ச விதியில் சொல்லப்பட்டுள்ளது.
.
அகிலம்
=======
திருநடன வெண்பா – 3.
=====================
என்றிவகை ளெல்லா மிப்படியே வந்துதென்று
ஒன்றியுள்ள சித்தாதி ஓதினான் - பண்டையுள்ள
தாவடத்தை மேவிடத்திக் கோவிடத்தி லோமிடத்தி
நாவிடத்திப் பூண்டாடி னார்
.
விளக்கம்
=========
இப்படியான பிறப்பு விதிகள் யாவும், காலங்காலமாக தோன்றிக் கொண்டிருக்கும் தர்மயுகத்தோடு நிகழ்ந்த ஒவ்வொரு மகாயுகங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருப்பது மரபு தான் என்று, தனித்தன்மை பெற்ற சித்தர்களுக்கெல்லாம் ஆதியான ஆதிசித்தன் ஒருவன் சொல்லி வைத்துள்ளான் என்பதை, ஞான பீடமாகிய தன் இருப்பிடத்தைச் சமநிலையாக்கி, ஆகாய வெளியில் பிரணவநாதம் எழுப்பி, அண்ட சராசரங்களையும் அணிகலனாகக் கொண்டு திருநடனம் ஆடிக்கொண்டே சிவபெருமான் பாடினார்.
.
அகிலம்
=======
திருநடன வெண்பா – 4.
=====================
தன்னாலே முளைத்த சற்கணையின் றண்வாங்கிப்
பின்னாலே யோர்கணைப் பீறி - பின்னாளே
பீறுங் கணையதினால் பெரும்புவியெல் லாந்தோன்றிச்
சீறுங் கலிவயதால் சென்றுதோ
.
விளக்கம்
=========
தானாகத் தோன்றிய ஓம் என்ற பிரணவப் பேரொலியின் கனைப்பினால் உண்டான பிரபஞ்சப் படைப்புகள் யாவும் இறுதியாகவும் படைக்கப்பட்டதினால், மிகவும் வேகமாக வியாபித்துள்ள கோபம் மிகுந்த கொடிய கலியினுள் இந்தப் பூலோகம் அகப்பட்டுக் கொண்டதோ?
.
.
அகிலம்
=======
திருநடன வெண்பா – 5.
=====================
வானத்தளவில் வளர்ந்த கம்பத் தண்ணருளால்
சேனைச் செகம்படைத்த செல்வமோ - மானத்த
மாகலிய னேதுவினால் வாழ்விழந் திவ்வுகமும்
போகத்தருணம் வந்து பூட்டினதிப் போது
.
விளக்கம்
=========
வானளாவிய இறைவனின் அளப்பரிய ஆராய்ச்சியாலும், அருளினாலும் ஆக்கப்பெற்றது இவ்வுலகமும் உயிரினங்களும் ஏனைய செல்வங்களுமாயிற்றே! இவை யாவும், மானங்கெட்ட மாபாதகமாகிய கலியின் வஞ்சகமான செய்கைகளினால் வாழ்விழந்து விட்டதே. அதனால் இந்தக் கலியுகமும் அழிந்து போகும் காலம் வந்து விட்டது. ஆகவே, கலியின் வாழ்வென்னும் வாசல் அடைத்து விட்டது.
.
.
தொடரும்... அய்யா உண்டு.