வால் புலியை ஆட்டுகிறது!
ஊகம் (Speculation) என்றால் என்ன? அது ஒரு இடைவெளியை நிரப்பும் சக்தி. பள்ளத்தை நோக்கி ஓடும் நீர் போல, அது தானாகவே குறைபாடுகள் உள்ள இடங்களில் பாய்ந்து வெற்றிடத்தை நிரப்புகிறது. அரசியல் உலகில் இந்த ‘இடைவெளிகள்’ என்பது ரகசியங்களால் உருவாகின்றன.
உண்மைகள் வெளியில் தெரியாமல் மறைக்கப்படும்போது, மக்கள் மனதில் ஊகங்கள் பிறக்கின்றன. ஆரம்பத்தில் அவை வெறும் சந்தேகங்களாக இருக்கலாம்; ஆனால் காலப்போக்கில் அவை நம்பிக்கைகளாக மாறிவிடுகின்றன. அப்போதுதான் பிரச்சினை தொடங்குகிறது. ஒரு சமயத்தில் உண்மையை கண்டுபிடிக்க முயன்றவர்கள் கூட, அந்த ஊகங்களை உடைக்கமுடியாமல் அதிலேயே சிக்கிக்கொள்கிறார்கள்.
இன்றைய உலக அரசியலைப் பார்க்கும்போது, “வால் புலியை ஆட்டுகிறது” என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. அதிகாரம் எங்கு இருக்கிறது, அதை யார் பயன்படுத்துகிறார்கள் அல்லது இயக்குகிறார்கள் என்ற கேள்விகள் இப்போது மிகவும் சிக்கலானவையாக மாறியுள்ளன. கூட்டணிகள், இரகசிய உடன்படிக்கைகள், மறைமுக அழுத்தங்கள் — இவை எல்லாம் சேர்ந்து உலக அரசியலை ஒரு குழப்பமான சதுரங்கமாக மாற்றிவிட்டன.
இதில் மிகப்பெரிய தவறு —ரகசியத்தையும், ராஜதந்திரத்தையும் ஒன்றாகக் கருதுவது. ரகசியம் என்பது மறைப்பது. ராஜதந்திரம் (Diplomacy) என்பது மனிதர்களை காயப்படுத்தாமல், அவர்களை புரிந்து கொண்டு, உரையாடலின் மூலம் தீர்வை கண்டுபிடிக்கும் கலை. ஒருவரை அழுத்தி, மிரட்டி, திணிக்க முயல்வது — அது பேச்சுவார்த்தை அல்ல, அது அதிகாரத்தின் தவறான பயன்பாடு.
இன்று உலக அரசியலில் நாம் காணும் மிகப்பெரிய குறைபாடு இதுதான். குறிப்பாக ஈரான் போரின் பின்னணியில், உலக தலைவர்களின் செயல்பாடுகள் ராஜதந்தித்திலிருந்து விலகி நிற்பதை தெளிவாகக் காட்டுகின்றன. வார்த்தைகள் பொறுப்புடன் பயன்படுத்தப்படவில்லை. பொய்கள் சாதாரணமாகச் சொல்லப்படுகின்றன. அதன் விளைவாக மக்கள் அந்த உரைகளைக் ‘பிரச்சாரம்’ என்று பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
ஒரு நாட்டின் தலைவர் மற்ற நாடுகளை மிரட்டும் மொழியில் பேசும்போது, அது அந்த நாட்டின் வலிமையை காட்டுவதில்லை; அதன் பலவீனத்தைக் காட்டுகிறது. மரியாதை இழக்கப்படுகிறது. நட்பு உறவுகள் மெதுவாக சிதற ஆரம்பிக்கின்றன. வெளிப்படையாக எதுவும் நடக்காதது போல தோன்றினாலும், உள்ளுக்குள் நாடுகள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டிருக்கின்றன.
ஒரு வல்லரசு நாட்டின் தலைவரின் மீது இன்னொரு நாட்டின் தலைவர் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தும்போது அது பல்வேறு சர்வதேசப் பிரச்சினைகளுக்கு வழி கோலுகிறது. இந்த சூழலில், “வால் புலியை ஆட்டுகிறது” என்ற கருத்து மிகவும் பொருத்தமானதாகிறது.
ஒரு சக்திவாய்ந்த நாடு, அதன் கூட்டாளியின் தாக்கத்தில் செயல்படும்போது, அது தனது சொந்த மதிப்பையும், சுயாதீனத்தையும் இழக்கிறது. வெளியில் பார்த்தால் அது இன்னும் வலிமையான புலியாகத் தெரிந்தாலும், அதை இயக்குவது வேறு ஒரு சக்தி என்ற உண்மை வெளிப்பட ஆரம்பிக்கிறது.
இதன் விளைவாக, உலக மேடையில் அந்த புலியே விமர்சனத்திற்கு உள்ளாகிறது. செயல்களை தூண்டியது யார் என்பது மறைந்து போகிறது; செயல்களை செய்தது யார் என்பதுதான் கண்களுக்கு தெரிகிறது. அதனால் தான் குற்றச்சாட்டு முழுவதும் அதன்மேல் விழுகிறது. இது ஈரான் போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் செயல்பாடுகளுக்குப் பொருந்தும்.
முடிவில், ஒரு விஷயம் தெளிவாகிறது: ரகசியம் அதிகமான இடத்தில் ஊகம் பெருகும். ஊகம் நம்பிக்கையாக மாறும்போது, உண்மை பலவீனமாகிறது. ராஜதந்திரம் இல்லாத இடத்தில், அதிகாரம் மட்டுமே இருக்கும். ஆனால் அதிகாரம் மட்டும் எந்தப் பிரச்சினைக்கும் நீண்டநாள் தீர்வாக இருக்க முடியாது.
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை