காகங்களின் கூட்டம்
ஒரு காகம் தனது கூட்டத்தை விட்டு விலகிவிட்டால், மீண்டும் அதற்குள் போக முடியாது. அப்படிப் போனால் மற்ற காகங்கள் அதைக் கொத்திக் கொத்தி கொன்று விடும் என்று சொல்லப்படுவது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்று தெரியவில்லை. ஆனால், "A Murder of Crows" என்ற ஆங்கிலச் சொற்றொடரே காகங்கள் ஒன்று சேர்ந்து ஒரு காகத்தைத் தண்டிப்பதிலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
மிருகங்கள் மட்டுமல்லாமல் மனித குலத்திலும் யூதர், ஆரியர், திராவிடர், சீனர், மங்கோலியர் போன்ற பல்வேறு இனங்கள் உள்ளன. அதே சமயத்தில் பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்களை மதம் இணைக்கிறது. பிரிவினைகளுக்காக இனவாதம் பேசும் மனிதகுலம் சகோதர மனப்பான்மையுடன் உதவுவதற்கும் ஒத்துழைப்தற்கும் இன ஒற்றுமை பற்றிப் பேசுவதில்லை.
இனமும் மதமும் மனிதனுக்கு பிறப்பிலேயே விழுந்த முத்திரைகள். இருப்பினும் இனம் என்பது ஆழமானது. இனத்திற்கும் மதத்திற்கும் என்ன தொடர்பு? உதாரணமாக, எல்லா ஜெயின்களும் மார்வாடிகள். ஆனால் எல்லா மார்வாடிகளும் ஜெயின்கள் இல்லை. அதே போல, எல்லா அராபியர்களும் முஸ்லிம்கள் என்றாலும் எல்லா முஸ்லிம்களும் அரேபியர்கள் இல்லை.
இஸ்லாம் என்று மதத்தை அடிப்படையாக வைத்து அரபு நாடுகளால் இஸ்ரேலை எதிர்த்து ஒன்று திரள முடியாததற்கு பல காரணங்கள் உள்ளன. அதற்கு இன ரீதியான பிரிவினை மட்டுமல்லாமல், சன்னி மற்றும் ஷியா பிரிவுகள், ஆட்சிமுறை, பொருளாதார நிலை போன்று பல்வேறு காரணிகள் உள்ளன. எண்ணெய் வளமிக்க நாடுகள் பொருளாதார பலத்துடன் விளங்குகின்றன. ஆனால், எல்லா நாடுகளிலும் எண்ணெய் வளம் இல்லை.
மத்திய கிழக்கில் சவுதி அரேபியா, UAE, ஓமன் போன்ற பல்வேறு நாடுகளில் மன்னராட்சியே நடைபெறுகிறது. மன்னராட்சி நடக்கிற நாடுகளில் மன்னர் அல்லது அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுடையை செல்வத்திலும் பாதுகாப்பிலும்தான் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தங்கள் இன்று கைகொடுக்கவில்லை. சவுதி அரேபியா பாகிஸ்தானுடன் போட்ட ஒப்பந்தம் வேஸ்ட்!
எண்ணெய் வளமற்ற ஏமன், ஜோர்டான் போன்ற நாடுகளின் மனித வளத்தை பரஸ்பர நன்மைக்காக திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்ளவில்லை. தொலைநோக்குப் பார்வையுடன் இதைச் செய்யாதவர்கள் எப்படி பாலஸ்தீனத்திற்கு முழுமனதுடன் ஆதரவு அளிப்பார்கள்? எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளிடம் பொது எதிரியான இஸ்ரேலை எதிர்த்துப் போராடுவதில் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை.
தொடக்கத்தில் அரேபியாவில் வாழ்ந்து, தற்பொழுது மையக் கிழக்கு நாடுகளில் வாழும் மக்கள் அரேபிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். எகிப்து அரபு லீக்கில் உறுப்பினராக இருப்பதாலும், அரபு மொழி பேசப்படுவதாலும், மற்றும் கலாச்சார ரீதியாக ஒருங்கிணைந்திருப்பதாலும் அது ஒரு "அரபு நாடு" என்று கருதப்படுகிறது; கடந்த 1,400 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்த அரபுமயமாக்கலால் இந்த நிலை பெருமளவில் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
உலகில் பெரும்பாலான போர்களுக்கு இனவெறி காரணமாக இருக்கிறது. இன்று மத்திய கிழக்கில் நிகழ்ந்து வரும் போரிலும் நாடுகளிடையே நிலவும் பகைக்கு இனவெறியும் ஒரு காரணம் என்று கூறலாம். இனவெறி நிலவும் நாடுகளில் பரஸ்பர நம்பிக்கை இருப்பதில்லை. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள ஆட்சியாளர்களே இனவெறியைத் தூண்டி விடுவதும் உண்டு.
காக்கைக்கூட்டம் என்பது சமூக ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் கூர்மையான அறிவுத் திறனுக்குப் பெயர் பெற்ற காகங்களின் கூட்டமைப்பாகும். அவை ஆபத்து காலங்களில் ஒன்றிணைந்து செயல் படக்கூடியவை மற்றும் உணவு தேடுவதில் குழுவாகவே இயங்கும். அந்த உணர்வு மனிதர்களிடம் இல்லை.
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴