தேர்தல் 1967 to 2026 மாறாத விஷயங்களின் மாறிய கோணங்கள்!
1967 தேர்தல் முடிவுகள் ஒலிபரப்பாகிறது. தி. நகர் பனகல் பார்க்கில் அமைந்துள்ள ரேடியோவில் இரவு 7-00 மணி செய்தியைக் கேட்க திருவிழா போல் கூட்டம். "ஆகாசவாணி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி" என்று செய்தி ஆரம்பித்ததும் 'பின் ட்ராப்' சைலன்ஸ். "நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விருதுநகர் தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை தொடர்கிறது. முடிவு பின்னர் அறிவிக்கப்படும்" என்று செய்தி வரும்போது மக்களுக்கு சப்பென்று இருக்கும்.
சுதந்திரா கட்சியும் கம்யூனிஸ்டுகளும் திராவிட இயக்கத்துடன் கைகோத்து களத்தில் நின்றன. பச்சைத் தமிழன் காமராஜருக்கு ஓட்டுப் போடுங்கள் என பெரியார் பிரச்சாரம் செய்தார்!பூவராகன் ஒருவரைத் தவிர மற்ற மந்திரிகள் எல்லாம் தோற்ற போது, காமராஜர் என்ன ஆனார் என்ற கேள்வியே ரேடியோ செய்திகளை கேட்டுக் கொண்டிருந்த மக்கள் மனதில் பிரதானமாக இருந்தது. கடைசியில் காமராஜரும் தோற்றார்.
1967 தேர்தல் தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஓர் யுகப்புரட்சி ஆகும். அது, அகில இந்திய அளவில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த மாநிலமான தமிழகத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்த வரலாறு. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற இருக்கும் 2026 தேர்தலில் அதே பிரச்சினைகள் பேசப்பட்டாலும், அவற்றின் கோணங்கள் மாறுபட்டுள்ளன.
இந்தி எதிர்ப்பு: இந்தியை எதிர்த்து தமிழை காப்போம், தமிழரைக் காப்போம் என்ற அதே 1967 பல்லவியை 2026 லும் திமுகவினர் பாடுகிறார்கள். இவர்கள் காப்பாற்ற வேண்டிய நிலையில் தமிழ் என்றுமே இருந்தில்லை. இலங்கைத் தமிழர் விவகாரதில் கருணாநிதியை வசைபாடிய வைகோவும் திருமாவும் இன்று திமுக பக்கம்.
தமிழ் தானே வளர்ந்த மரம், தனியாக நின்ற மரம். இன்று கூகுள், சமூக ஊடகங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) போன்றவை மொழிபெயர்ப்பு, புதிய தமிழ் சொற்கள், பிழை திருத்தல் போன்று பல்வேறு வேலைகளை திறம்பட செய்து தமிழ் மட்டுமல்லாமல், அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கின்றன. திமுக தமது குடும்ப நிறுவனங்களின் பெயர்களில் தமிழை வளர்த்த இலட்சணத்தை தமிழர்கள் அறிவார்கள்.
ஊழல்: 67இல் காங்கிரஸ் மந்திரிகளை ஊழல் பெருச்சாளிகள் என திமுக பிரச்சாரம் செய்தது. ஆனால், உண்மை நிலை என்ன?பக்தவத்சலம், கக்கன் போன்ற தலைவர்களின் வழித்தோன்றல்கள் யாரும் இன்று இருக்கிற இடம் தெரியவில்லை. காமராஜர் ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டிருக்கிறார், காங்கிரஸ் ஆட்சி என்பது தொழிலதிபர்கள் மற்றும் மிட்டா மிராசுகளின் ஆட்சி என்றெல்லாம் பிரச்சாரம் செய்து திமுக ஆட்சியை பிடித்தது.
ஓட்டுக்கு துட்டு: காங்கிரஸ் ஓட்டுக்கு துட்டு தந்தால், அதை வாங்கிக் கொண்டு ஓட்டை எங்களுக்குப் போடுங்கள் என்று திமுக பிரச்சாரம் செய்தது. அப்படி செய்ததில் ஒரு சூட்சுமம் இருந்தாக சொல்வார்கள். அதாவது, ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்றாலும், "காங்கிரஸ் பணம் தருவதாக சொல்லப்படுகிறதே, நமக்கு ஏன் வரவில்லை" என்ற கோபத்தில் மக்கள் திமுகவிற்கு போடட்டும் என்ற நல்லெண்ணம்தான்!
இன்று, பணத்தை தேர்தல் கமிஷனுக்குத் தெரியாமல் எப்படி மக்களுக்கு வினியோகிப்பது என்று "திருமங்கலம்" போன்றபல பார்முலாக்களை கண்டுபிடித்து விட்டனர்! வேட்பாளர் தேர்வில் கேட்கப்படும் முதல் கேள்வியே "உங்களால் தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்?" என்பதுதான். இன்றைய தேர்தலில் காமராஜர், கக்கன்களுக்கு இடமில்லை.
வாரிசு அரசியல்: இந்தியாவில் நேரு குடும்பத்தின் வாரிசு அரசியல் நடக்கிறது என்று 1967 தேர்தலில் மேடைதோறும் திமுக தலைவர்கள் முழங்கினார்கள். இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. திமுகவில் வாரிசு அரசியல் என்று எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்வதை திமுக தலைமையினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தொழில் வளர்ச்சி: தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருந்தாலும் 1967 தேர்தலில் "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது. இன்றைய நிலை என்ன? 16-வது நிதிக் குழுவின் அறிக்கையின் படி, 2022-23 ஆம் ஆண்டில், மாநில பொதுத்துறை நிறுவனங்களின் (SPSEs) கடும் நஷ்டத்தில், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக, தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. அதற்கு காரணம் நிர்வாகச் சீர்கேடுகளும் ஊழலும்தான்.
சினிமா கவர்ச்சி: 1967 இல் திமுகவின் வளர்ச்சிக்கும் பிரச்சாரத்திற்கும் பத்திரிகை மற்றும் சினிமா துறை பக்கபலமாக இருந்தது. இன்று, பத்திரிகை, டிவி, சினிமா, சமூக ஊடகங்கள் அனைத்திலும் கட்சித் தலைமையின் 'குடும்ப' ஆதிக்கமே கோலோச்சுகிறது! இன்று மீண்டும் 'பராசக்தி'!
1967 தேர்தலில் பேசப்பட்ட அதே விஷயங்களே 2026 தேர்தலில் மீண்டும் பேசப்படுகின்றன. அவற்றின் கோணங்கள்தான் வேறாக இருக்கின்றன. பிரச்சார பலத்தை வைத்தும், பண பலத்தை வைத்தும் ஆட்சியை பிடிக்கமுடியுமா என்ற கேள்விக்கு எதிர்வரும் சட்டட மன்றத் தேர்தலில் மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
மற்றப்படி, மதுவிலக்கு, சட்டம் ஒழுங்கு, சாதி வன்கொடுமை, பெண்கள் பாதுகாப்பு, பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புழக்கம், மணல் கொள்ளை, வணிகமயமான கல்வி, அரசு கல்வி நிலையங்களில் ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பல்வேறு சமாச்சாரங்களைப் பற்றி யாராவது பேசிவிட்டால், அவர்கள் மதவாதிகள், பிற்போக்குவாதிகள்!
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை