செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன் கிராம நிர்வாக உதவியாளர்கள் சாலை மறியல்!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.
செங்கம் வட்டத்தில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக உதவியாளர்கள் (Village Assistants), தங்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் செங்கம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், கோரிக்கைகள் குறித்து முறையான உறுதிமொழி கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மறுத்த ஊழியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
சாலை மறியலால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலை 6 மணிக்கு விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டனர். #📺வைரல் தகவல்🤩