கடவுளின் பேரால் ஓர் உலகப் போரா?
அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத், பெண்டகனில் நடந்த ஒரு பிரார்த்தனையில், ஈரானுக்கு எதிரான போரில் “அளவுக்கதிகமான வன்முறை” தேவைப்படுவதாகக் கூறியது, ஒரு சாதாரண அரசியல் கருத்தாக இல்லை.
மேலும் இந்தப் போரை ஒரு தெய்வீகத் திருப்பணி (Divine Mission) என வர்ணிப்பது ஓர் ஆபத்தான மாற்றத்தின் அறிகுறி — போரைக் கடவுளின் பேரால் நியாயப்படுத்தும் முயற்சி.
இந்த கருத்தை தொடர்ந்து, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், “அமெரிக்கா 250 ஆண்டுகளுக்கு முன்பு யூத-கிறிஸ்தவ மதிப்புகளின் அடிப்படையில் உருவானது” என்று கூறி, இந்த அணுகுமுறைக்கு மத ரீதியாக முட்டுக் கொடுத்தார். அவர் இதை ஒரு “நல்ல விஷயம்” என்றும் தேசிய நெருக்கடியின் நேரத்தில் பிரார்த்தனை செய்வது அவசியம் என்றும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
ஆனால், இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக வாடிகனிலிருந்து ஒரு செமையான பதில் வந்தது. போப் லியோ XIV, “வன்முறையைத் தேர்வு செய்பவர்களின் பிரார்த்தனைகளை கடவுள் கேட்பதில்லை” என்று கடுமையாக எச்சரித்தார்.
போப் மேலும், “மரணத்தை உருவாக்கும் முடிவுகளை கடவுளின் பேரில் நியாயப்படுத்துபவர்களின் கைகள் இரத்தத்தில் தோய்ந்திருக்கின்றன” என்று சொல்லி இயேசுவின் போதனைகளை நினைவு படுத்தினார். “உன் வாளை எடுத்த இடத்திலேயே திருப்பி வை” என்ற அந்த செய்தி, வன்முறைக்கு எதிரான தெளிவான மறுப்பு ஆகும்.
ஓரு வல்லரசு நாட்டின் பாதுகாப்பு செயலாளர், ஓர் ஊடக தொடர்பு உயரதிகாரி, மற்றும் ஓர் ஆன்மீகத் தலைவர் ஆகியோருடைய இந்த மூன்று விதமான நிலைப்பாடுகள் இன்று உலகம் எங்கு நிற்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.
பிரார்த்தனை என்பது ஒரு மனிதனை அமைதி வழிக்கு இட்டுச் செல்லும் ஒரு உள்ளார்ந்த செயல். ஆனால், அதையே வன்முறைக்கான ஆதரவாக மாற்றுவது, அதன் அர்த்தத்தையே சிதைக்கும் செயல்.
“ஜூடியோ-கிறிஸ்தவ மதிப்புகள்” என்று கூறுவது எளிது; ஆனால் அந்த மதிப்புகள் உண்மையில் என்ன சொல்லுகின்றன? அன்பு, இரக்கம், பொறுமை — இவையே அதன் மையம். அதற்கு மாறான செயல்களை அதன் பேரில் செய்வது, ஒரு முரண்பாடு மட்டுமல்ல — அது ஒரு ஆபத்தான ஏமாற்று நடைமுறை.
ஒரு போரை “தெய்வீக கடமை” என்று மாற்றும் போது, அதை எதிர்ப்பது “தவறு” என்று காட்டப்படும் அபாயம் உள்ளது. இது மிகவும் ஆபத்தான போக்கு. ஏனெனில், அப்போது விவாதத்திற்கும் தர்க்கத்திற்கும் வேலை இல்லாமல் போய்விடுகிறது!
இது ஒரு சாதாரண அரசியல் விவாதம் அல்ல. இது மதத்தின் பெயரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படை கேள்வி.
கடவுள் அமைதியின் மொழியில் பேசுகிறார். மனிதன் அதை வன்முறையின் மொழியாக மாற்றும் போது — அங்கே தான் உண்மையான பிரச்சினை தொடங்குகிறது.
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴