ShareChat
click to see wallet page

செத்தும் கெடுத்தான் எப்ஸ்டீன் "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" (இறந்த பிறகும் பிறருக்கு உதவியவர்) என்பது ஒரு சொலவடை ஆகும். இறப்பிலும் தாராளமாகத் தானம் செய்த சீதக்காதியை கொடைக்கு உதாரணமாகச் சொல்வார்கள். "செத்தும் கெடுத்தான்" என்பது, உயிர் இழந்த பிறகும், தனது தீய குணங்களாலோ அல்லது செயல்களாலோ குடும்பத்தினருக்கு அல்லது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பவரைக் குறிக்கும் ஒரு எதிர்மறைச் சொல்லாடல். செத்தும் கெடுத்த சோமநாதன் கதை: வாழ்நாளெல்லாம் பிறருக்கு தீங்கு செய்த சோமநாதன் என்பவன், சாகும் தருவாயில் ஊரைக்கூட்டி, தான் செய்த செயல்களுக்கு வருந்துவதாகவும், அதற்கு பிராயச்சித்தமாக தான் செத்தபின் கழுதையை வைத்து தனது பிணத்தை தெருத் தெருவாக இழுத்துக் கொண்டு சுடுகாட்டுக்கு போனால்தான் ஆத்மா சாந்தியடையும் என்று ஊராரிடம் வேண்டிக் கொண்டான். சோமநாதனின் விருப்பத்தை ஊரார் நிறைவேற்றினர். ஆனால், சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் போலீஸ் ஊர்க்காரர்களை மறித்து கைது செய்தது. காரணம்? சாவதற்கு முன் "ஊர்க்காரர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது" என்று போலீஸ் ஸ்டேஷனில் சோமநாதன் பிராது கொடுத்திருக்கிறான். "பாவி இருந்த போது கெடுத்தவன் செத்தும் கெடுத்தானே" என ஊரார் புலம்பினார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த  ஜெஃப்ரி எப்ஸ்டீன் (JeffreyEpstein) ஒரு நிதி ஆலோசகர் மற்றும் பெரும் கோடீஸ்வரர் ஆவார். அவர் நியூயார்க்கில் ஒரு நடுத்தர வர்க்க யூதக் குடும்பத்தில் பிறந்தார்.  பின்னாளில் உலக அளவில் அரசியல், பொருளாதாரம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் உள்ள பல சக்திவாய்ந்த நபர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இவர், பிறகு ஒரு பாலியல் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.  2002 முதல் 2005 வரையிலான காலப்பகுதியில், நியூயார்க் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது இல்லங்களில் டஜன் கணக்கான மைனர் சிறுமிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பாலியல் தொழிலில் ஒரு பெரிய வலைப் பின்னலையே எப்ஸ்டீன் நடத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. 2019-ல் எப்ஸ்டீன் சிறையில் தற்கொலை செய்துகொண்ட பிறகு, அவர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் (எப்ஸ்டீன் கோப்புகள்) வெளிவரத் தொடங்கின. இதில் டிரம்ப், நேதன்யாகு, இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ போன்ற உலகின் பல முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக சொல்லப் படுவது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. செத்தும் கெடுத்தான் எப்ஸ்டீன்: எத்தனையோ சிறுமிகளின் வாழ்க்கையை சீரழித்த ஓர் உலக மகா அயோக்கியனான எப்ஸ்டீன் செத்தபின் அவனுடன் தொடர்பில் இருந்த உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், அரசர்கள், தொழிலதிபர்கள் இன்று கலக்கத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே பலர் பதவிகளை இழந்திருக்கிறார்கள். வழக்கில் ஆஜராக வேண்டிய நிலையில், ஆகஸ்ட் 10, 2019 இல் சிறையில் வைத்து எப்ஸ்டீன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டாலும், அவனது சாவில் மர்மம் இருப்பதாகவே கருதப்படுகிறது. இதுவரை செத்தும் கெடுத்த மகானுபாவர்களில், இவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் உலகில் இருந்ததில்லை என்றுதான் சொல்லவேண்டும்! #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴

616 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்