ShareChat
click to see wallet page

நாம் வாழும் உலகம் - டான்டலஸின் நரகமா? எதிர் பாராமல் லாட்டரி அடித்த மாதிரி அக்கவுண்டில் வந்து சுளையாக 5000 ரூபாய் விழுந்ததில் மக்கள் எல்லாம் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள். ஒரு நாள் காலைப் பொழுதில் நாடே நரி முகத்தில் விழித்தது மாதிரி இருந்தது! அடுத்து 10000 (கருணைத் தொகை) பற்றி பேச்சாக இருக்கிறது. எனவே, முதலில் மேற்கண்ட கேள்வியை இந்த சமயத்தில் கேட்டதே தவறு. அது சரி, யாரந்த டான்டலஸ்? பண்டைய கிரேக்கக் கதையில் வரும் டான்டலஸ் என்பவன், செழிப்பின் நடுவில் தண்டனை அனுபவித்த மனிதன். கழுத்தளவு தண்ணீரில் நின்றாலும் தாகம் தீர்க்க முடியாமல் தவித்தான். தலைக்கு மேல் பழங்கள் தொங்கின; ஆனால் எட்டினால் அவை விலகின. அருகிலேயே இருந்தும் அனுபவிக்க முடியாத தண்டனை! இன்று அந்த 'டான்டலஸ் நரகம்' கதையல்ல. அது உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் நடைமுறை உண்மை. இன்றைய உலகில் செல்வத்திற்கு குறைவில்லை. உணவு உற்பத்தி அதிகம். தொழில்நுட்பம் எல்லையை தாண்டி வளர்ந்துள்ளது. ஆனால் மக்களில் பெரும்பான்மையினர் அடிப்படை தேவைகளுக்கே போராடுகின்றனர். ஒரு பக்கம் அபரிமிதம், மறுபக்கம் பற்றாக்குறை. காரணம் இயற்கையல்ல — மனிதனால் உருவாக்கப்பட்ட தடைகள். அரசு தரும் இலவசங்கள் எல்லாம் எத்தனை நாட்களுக்கு வரும்? அரசியல் போர் நடத்துகிறது; போர் அரசியலை இயக்குகிறது. சூப்பர் பவர்களின் ஆயுதங்கள் இன்று துப்பாக்கிகள் அல்ல — பொருளாதார தடைகள். * 100%, 300%, 500% வரி விதிப்புகள் – யாருக்காக? * முழுமையான இறக்குமதி தடை – யாரை பாதிக்கிறது? * பாதுகாப்பு கொள்கை, எதிர் பாதுகாப்பு திட்டங்கள், அதனால் ஆகும் செலவுகள் – இதன் முடிவில் பாதிக்கப்படுவது யார்? பணம் என்பது பரிமாற்றத்தின் சின்னம். ஆனால் அதன் சுதந்திரம் மறுக்கப்படும் போது, பணமே தனது அர்த்தத்தை இழக்கிறது. உதாரணமாக, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் டாலர் முதலீடுகள் முடக்கப்பட்டுள்ளன, வர்த்தம் தடைசெய்யப் பட்டுள்ளது. வாங்க முடியாத பணம், வாழ முடியாத மனிதனை உருவாக்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, உலகப் புகழ்பெற்ற ஒரு ஆடைகள் தயாரிப்பு நிறுவனம், கோடிக்கணக்கான மதிப்புள்ள விற்கப்படாத உடைகளை அழித்தது. காரணம் – பிராண்டு மதிப்பு காக்கப்பட வேண்டும் என்ற கொள்கை. அதே நேரத்தில், கோடிக்கணக்கான மக்கள் உடுத்த உடையின்றி தவிக்கின்றனர். அந்த அழிப்பு சட்டவிரோதமல்ல; ஆனால் மனிதத்துக்கு எதிரான குற்றம். இயற்கை மனிதனுக்கு பாகுபாடின்றி எல்லாவற்றையும் கொடுக்கிறது. ஆனால் அரசுகளின் சட்டங்களும், நிறுவனங்களின் கொள்கைகளும் அதை மறுக்கின்றன. பழம் தொங்குகிறது — எட்ட முடியவில்லை. தண்ணீர் உள்ளது — தாகம் தீரவில்லை. கம்யூனிசம், காபிடலிசம், சோஷலிசம் போன்ற எண்ணற்ற சித்தாந்தங்கள். எதுவும் மனிதனை முழுமையாக்கவில்லை. காரணம் அவை அரசமைப்புகளை மாற்றின; மனித மனங்களை மாற்றவில்லை. அதனால்தான் இன்று மேற்கத்திய உலகின் பார்வை வேதாந்தத்தின் பக்கம் திரும்புகிறது. வேதாந்தம் கடவுளைப் பற்றியது மட்டுமல்ல. அது அறிவின் உச்சம். ஆசை, உரிமை, பிரிவினை ஆகிய அனைத்தும் மாயை என்று அது சொல்கிறது. மனிதகுலத்திற்கு இன்றைய தேவை ஒரு புதிய சித்தாந்தம் அல்ல; மன மாற்றம், உலகளாவிய பண்பாட்டு மாற்றம். ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக அமைப்புகள் புறக்கணிக்கப்படும் வரை, இது கனவாகவே இருக்கும். ஆனால் நம்பிக்கை என்னும் ஓர் ஒளிக்கீற்று இருக்கிறது. இணையம், மொபைல் போன், சமூக ஊடகங்கள் போன்ற அறிவியல் வளர்ச்சிகள் எல்லைகளை உடைத்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியம் பல நாடுகளை ஒரே சந்தையாக மாற்றியது. பறவைகளுக்கு எல்லைகள் இல்லை, மனிதர்களுக்கு ஏன்? உலகம் ஒரே சந்தையாக மாற வேண்டும். உலகமே ஓர் உயிரினமாக மாறும்போது, ஓர் இடத்தில் வலி என்றால், மற்ற இடங்களிலும் அதிர்வு ஏற்படும். அந்த நாளில், தீர்வுகள் அரசுகளிடமிருந்து அல்ல — பொறுப்புள்ள நிறுவனங்களிடமிருந்து வரும். உலகத் தலைவர்கள் அணுகுண்டுகள் மற்றும் பாதுகாப்புக் கேடையங்கள் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் பேச வேண்டியது “அமைதியான மனிதகுலம்” பற்றி. இன்றைய கல்வி திறமைகளை கற்றுத் தருகிறது; நெறிகளை அல்ல. மனிதன் செல்வத்தை நாடுகிறான் — மன மகிழ்ச்சிக்காக, அமைதிக்காக. ஆனால் மற்ற மனிதர்களின் மகிழ்ச்சிசயையும் அமைதியையும் பலியிட்டு அதைப் பெற முயல்கிறான். நரகம் டான்டலசுக்கு கிட்டிய தண்டனை. நாம் வாழும் நரகம் — நாம் எடுத்துக் கொண்ட தேர்வு. தண்ணீர் இங்கேயே உள்ளது. பழமும் அருகிலேயே உள்ளது. அவற்றை அனுபவிக்க தடையாக நிற்கும் சுவர்களை இடிப்பதே இன்றைய மனிதனின் உண்மையான அறிவு. #tn #TNPolitics #Tantalus #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴

443 ने देखा