பள்ளிக்கு செல்வதே பார்ட் டைம் வேலைதான்.
60-70 கள் வரை கிராமங்களில் கூட்டுக் குடும்பங்கள் மிகவும் பெரிதாக இருந்தன. சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை, சித்தி, தாத்தா, பாட்டி என்று ஒரு டஜனுக்கு குறையாமல் வீட்டில் ஆட்கள் இருப்பார்கள்; இருபது முப்பது பேர்கள் இருப்பது சாதாரணம். அனைவருக்கும் ஒரே உலைதான். விவசாய குடும்பங்களில் அத்தனை பேருக்கும் வேலை இருக்கும். குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்வதே பார்ட் டைம் வேலைதான்.
குழந்தைகள் காலையில் எழுந்து குடங்களை தூக்கிக்கொண்டு ஊர் கிணற்றடிக்கு சென்று தண்ணீரை எடுத்து வந்து தொட்டியில் நிரப்ப வேண்டும். பருத்திக் காலம் என்றால் வெள்ளென எழுந்து பருத்தி எடுக்கப் போகவேண்டும். நல்ல தண்ணீருக்கு தூரத்தே உள்ள கிணற்றுக்கோ அல்லது மலை மீதுள்ள ஊற்றுக்கோ போய் வரவேண்டும்.
சில வீடுகளில் தொழுவத்தை பெருக்கி குப்பையை அள்ளுவது மூத்தவனுடைய வேலையாக இருக்கும். சின்னவன் கடைக்குட்டி குழந்தையை தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும். சாயங்காலம் மறுபடியும் தண்ணீர் எடுக்கப் போக வேண்டும், சில குழந்தைகள் சுள்ளி பொறுக்கப் போதுண்டு. பெண் குழந்தைகளுக்கு வீட்டு வேலைகளே சரியாக இருக்கும். படுத்தவுடன் தூங்கிவிடுவார்கள்.
ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் ஆடு மாடு மேய்க்க வேண்டும். அப்போது பெரியவர்கள் சந்தைக்கு அல்லது வேறு முக்கியமான வேலைக்கு போவார்கள். எனவே, குழந்தைகளுக்கு விளையாட நேரம் கிடைப்பதே அபூர்வம். அப்படியும் மாடு மேய்க்கப் போகும்போது பம்பரம், சில்லாங்குச்சி என்று விளையாடுவது உண்டு. கோலி, பம்பரம் போன்ற விளையாட்டு சாமான்கள் எப்போதும் பையில் ரெடியாக இருக்கும்.
இன்று இருப்பது ஒரு குழந்தை. அதைப் பார்த்துப் பார்த்து ஒரு விருந்தாளியைப் போல உபசரித்து வளர்க்கிறோம். வீட்டு வேலை என்று எதுவும் இல்லை. விளையாட்டு என்றால் கம்ப்யூட்டர் கேம்ஸ்தான். முதலில் நகர்ப்புறங்களில் விளையாட்டு மைதானங்களே இல்லை. தனியார் பள்ளிகளிலும் அதே கொடுமை. தனியார் பயிற்சி மையங்களில் விளையாட பணம் கட்டவேண்டும்! அது வெறும் விளையாட்டு சமாச்சாரம் இல்லை!
இன்றைய காலகட்டத்தில், நம்மை அறியாமேலேயே, நாம் குழந்தைகளை பெரும்பாலும் சோம்பேறிகளாகவும் மன அழுத்தம் மிக்கவர்களாகவும் வளர்த்து வருகிறோம். அவர்களுக்கு கோபம் என்றால் சாப்பிட அடம் பிடிக்கிறார்கள். முன்பெல்லாம் "அய்யா சாப்பிடு, ராசா சாப்பிடு" என்று தாய்மார்கள் கெஞ்சுவது இல்லை. பசிச்சா கழுதை தானா வந்து கொட்டிக்கிடும் என்று விட்டு விடுவார்கள்.
பெரியவர்களைப் போல் இல்லாமல் குழந்தைகள் எந்த வேலையை கொடுத்தாலும் அதில் மனதொன்றி செய்வார்கள். நாம்தான் கொடுப்பதில்லை. என் குழந்தைக்கு ஒரு வேலையும் செய்யத் தெரியாது என்று சொல்லிக்கொள்வதில் தாய்மார்களுக்கு ஒரு பெருமை! குனிந்து நிமிர்ந்து வேலை பார்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மனதொன்றி வேலை செய்வது தியானத்திற்கு ஒப்பானது.
அது மட்டுமல்ல, வேலை என்று வந்துவிட்டால் பொறுப்புணர்ச்சி தானாக வருகிறது. எதை எப்படி செய்ய வேண்டும் என்ற பிராக்டிகல் அனுபவம் கிடைக்கிறது; அதனால் குழந்தைகள், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்கிற பக்குவத்தை அடைகிறார்கள். செய்கிற வேலையில் ஆர்வம் (Curiosity) தூண்டப்படும்போது அவர்களுடைய சிந்தனைத் திறன் அதிகமாகிறது.
இயங்கிக்கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை என்பதை குழந்தைகள் உணரத் தலைப்படும்போது, அவர்கள் வாழ்கைக்கு தயாராகிவிட்டார்கள் எனலாம். செம்மையான இயக்கத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியாகிறது. இயக்கம் இல்லையென்றால் தேக்கம். அந்த நிலையே நோயின் அடித்தளம். அது உடல் நோயாகவும் இருக்கலாம், மனநோயாகவும் மாறலாம்.
வீட்டில் அப்படி என்ன வேலை இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். "ஒரு சம்சாரி வீட்டில் - வேலை இருக்கிறது என்று நினைத்தால் வேலைக்குப் பஞ்சமில்லை. வேலை இல்லை என்று நினைத்தால் வேலை இல்லை" என்று என் அம்மா சொல்வதுண்டு. இங்கே 'சம்சாரி' என்பது விவசாயி என்ற பொருளில் வந்தாலும், சம்சாரம் என்றால் இல்லறம் அல்லது குடும்பம் என்பது பொருள். ஆகவே, இது எல்லோருக்கும் பொருந்தக் கூடியதே!
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴