#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - ஆனாய நாயனார் புராணம்* ஆனாய நாயனார் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட பெரியபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள, அறுபத்து மூன்று சைவ நாயன்மார்களில் ஒருவரான ஆனாய நாயனாரின் புனிதமான வரலாறு ஆகும். இவர் தனது வேய்ங்குழல் (புல்லாங்குழல்) இசையினால் சிவபெருமானின் ஐந்தெழுத்து மந்திரமான "ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை" வாசித்து, அதன் மூலம் இறைவனின் திருவருளைப் பெற்று முக்தியடைந்தவர் ஆவார். இசையினால் நிகழ்ந்த அற்புதம்: ஒருநாள், காட்டில் கொன்றை மரத்தின் அடியில் நின்றுகொண்டு ஆனாய நாயனார் தனது புல்லாங்குழலில் பஞ்சாக்ஷர மந்திரத்தை வாசித்தார். அந்த இசையமுதம் காடு முழுவதும் பரவியபோது பெரும் அற்புதங்கள் நிகழ்ந்தன :பகை மறந்த விலங்குகள் இயற்கையிலேயே ஒன்றோடொன்று பகைகொண்ட விலங்குகளான பாம்பும்-மயிலும், சிங்கமும்-யானையும், புலியும்-மானும் தங்களின் பகைமையை மறந்து ஒன்றாக நின்றன.அசைவற்ற இயற்கை: காற்றில் மரங்கள் அசையவில்லை; மலை அருவிகளும் காட்டாறுகளும் ஓடாமல் நின்றன; கடலும் மேகமும் அசைவற்று ஸ்தம்பித்தன. தேவர்கள் வருகை: பாதாள உலக நாகர்களும், விஞ்சையர்களும், தேவர்களும் இந்த இசையைக் கேட்கத் தத்தம் உலகங்களில் இருந்து பூமியை நோக்கி வந்தனர். கைலாச முக்தி: நிறைவாக, உலக உயிர்கள் அனைத்தையும் உருகவைத்த அந்த புல்லாங்குழல் இசை கைலாசத்தில் வீற்றிருந்த சிவபெருமானின் திருச்செவிகளை எட்டியது. இதனால் மகிழ்ந்த சிவபெருமான், உமையம்மையோடு இடப வாகனத்தில் தோன்றி, "மெய்யன்பனே! உன் குழலிசையை எப்போதும் கேட்கும் பொருட்டு இதே நிலையோடு என்னுடன் வா" என்று அருளினார். ஆனாய நாயனாரும் குழல் வாசித்தபடியே சிவபெருமானின் திருவடி நிழலை (கைலாசத்தை) அடைந்தார். பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - ஆனாய நாயனார் புராணம்* சந்தக் கலிநிலைத்துறை மாடு விரைப் பொலி சோலையின் வான் மதிவந்து ஏறச் சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்தேற நீடு வளத்தது மேன்மழ நாடெனும் நீர் நாடு. 1 நீவி நிதம்ப உழத்தியர் நெய்க் குழல் மைச் சூழல் மேவி உறங்குவ மென் சிறை வண்டு விரைக் கஞ்சப் பூவில் உறங்குவ நீள் கயல் பூமலி தேமாவின் காவின் நறுங் குளிர் நீழல் உறங்குவ கார் மேதி. 2 வன்னிலை மள்ளர் உகைப்ப எழுந்த மரக்கோவைப் பன் முறை வந்து எழும் ஓசை பயின்ற முழக்கத்தால் அன்னம் மருங்குறை தண் துறை வாவி அதன் பாலைக் கன்னல் அடும் புகையால் முகில் செய்வ கருப்பாலை. 3 பொங்கிய மாநதி நீடலை உந்து புனற் சங்கம் துங்க இலைக் கதலிப் புதல் மீது தொடக்கிப் போய்த் தங்கிய பாசடை சூழ் கொடி யூடு தவழ்ந்தேறிப் பைங்கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ பாளையென. 4 அல்லி மலர்ப் பழனத்து அயல் நாகிள ஆன் ஈனும் ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழக்கன்று கொல்லை மடக்குல மான் மறியோடு குதித்து ஓடும் மல்கு வளத்தது முல்லை உடுத்த மருங்கோர்பால். 5 கண் மலர் காவிகள் பாய இருப்பன கார் முல்லைத் தண் நகை வெண் முகை மேவும் சுரும்பு தடஞ் சாலிப் பண்ணை எழுங்கயல் பாய இருப்பன காயாவின் வண்ண நறுஞ்சினை மேவிய வன் சிறை வண்டானம். 6 பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் மேல் ஓடும் வெங்கதிர் தங்க விளங்கிய மேன்மழ நன்னாடாம் அங்கது மண்ணின் அருங்கலமாக அதற்கேயோர் மங்கல மானது மங்கலம் ஆகிய வாழ் மூதூர். 7 ஒப்பில் பெருங்குடி நீடிய தன்மையில் ஓவாமே தப்பில் வளங்கள் பெருக்கி அறம்புரி சால்போடும் செப்ப உயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர் மேவும் அப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர். 8 ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார் தூய சுடர்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார் வாயினின் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப் பாலில் பேயுடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார். 9 ஆனிரை கூட அகன் புற வில் கொடு சென்று ஏறிக் கானுறை தீய விலங்குறு நோய்கள் கடிந்து எங்கும் தூநறு மென்புல் அருந்தி விரும்பிய தூ நீருண்டு ஊனமில் ஆயம் உலப்பில பல்க அளித்து உள்ளார். 10 கன்றொடு பால் மறை நாகு கறப்பன பாலாவும் புன்றலை மென்சினை ஆனொடு நீடு புனிற்றாவும் வென்றி விடைக் குலமோடும் இனந்தொறும் வெவ்வேறே துன்றி நிறைந்துள சூழல் உடன் பல தோழங்கள். 11 ஆவின் நிரைக் குலம் அப்படி பல்க அளித்தென்றும் கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும் காவலர் தம் பெருமான் அடி அன்புறு கானத்தின் மேவு துளைக் கருவிக் குழல் வாசனை மேற்கொண்டார். 12 வேறு - கொச்சகக் கலிப்பா முந்தை மறை நூன்மரபின் மொழிந்த முறை எழுந்தவேய் அந்த முதல் நாலிரண்டில் அரிந்து நரம்புறு தானம் வந்ததுளை நிரையாக்கி வாயு முதல் வழங்கு துளை அந்தமில் சீர் இடை ஈட்டின் அங்குலி எண் களின் அமைத்து. 13 எடுத்த குழற் கருவியினில் எம்பிரான் எழுத்து அஞ்சும் தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்துத் தடுத்தசரா சரங்களெலாம் தங்கவருந் தங்கருணை அடுத்த இசை அமுது அளித்துச் செல்கின்றார் அங்கு ஒரு நாள். 14 வாச மலர்ப் பிணை பொங்க மயிர் நுழுதி மருங்கு உயர்ந்த தேசுடைய சிகழிகையிற் செறி கண்ணித் தொடை செருகிப் பாசிலை மென் கொடியின் வடம் பயில நறு விலி புனைந்து காசுடை நாண் அதற்கயலே கருஞ்சுருளின் புறங்கட்டி. 15 வெண் கோடல் இலைச் சுருளிற் பைந்தோட்டு விரைத் தோன்றித் தண் கோல மலர் புனைந்த வடி காதின் ஒளி தயங்கத் திண் கோல நெற்றியின் மேல் திரு நீற்றின் ஒளி கண்டோர் கண் கோடல் நிறைந்தாராக் கவின் விளங்க மிசை அணிந்து. 16 நிறைந்த நீறு அணி மார்பின் நிரை முல்லை முகை சுருக்கிச் செறிந்த புனை வடம் தாழத் திரள் தோளின் புடை அலங்கல் அறைந்த சுரும்பு இசை அரும்ப அரையுடுத்த மரவுரியின் புறந்தழையின் மலி தானைப் பூம் பட்டுப் பொலிந்து அசைய. 17 சேவடியில் தொடு தோலும் செங்கையினில் வெண் கோலும் மேவும் இசை வேய்ங்குழலும் மிக விளங்க வினை செய்யும் காவல்புரி வல்லாயர் கன்றுடை ஆன் நிரை சூழப் பூவலர் தார்க் கோவலனார் நிரை காக்கப் புறம் போந்தார். 18 வேறு - அறுசீர் விருத்தம் நீலமா மஞ்ஞை ஏங்க நிரைக் கொடிப் புறவம் பாடக் கோல வெண் முகையேர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட ஆலு மின்னிடைச் சூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள் ஞால நீடு அரங்கில் ஆடக் கார் எனும் பருவ நல்லாள். 19 வேறு - கொச்சகக் கலிப்பா எம்மருங்கு நிரை பரப்ப எடுத்த கோலுடைப் பொதுவர் தம்மருங்கு தொழுது அணையத் தண் புறவில் வருந்தலைவர் அம்மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மதுவுண்டு செம்மருந்தண் சுரும்பு சுழல் செழுங் கொன்றை மருங்கு அணைந்தார். 20 சென்றணைந்த ஆனாயர் செய்த விரைத் தாமம் என மன்றல் மலர்த்துணர் தூக்கி மருங்குதாழ் சடையார் போல் நின்ற நறுங் கொன்றையினை நேர் நோக்கி நின்று உருகி ஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர் பால் மடை திறந்தார். 21 அன்பூறி மிசைப் பொங்கும் அமுத இசைக் குழல் ஒலியால் வன்பூதப் படையாளி எழுத்து ஐந்தும் வழுத்தித் தாம் முன்பூதி வரும் அளவின் முறைமையே எவ்வுயிரும் என்பூடு கரைந்து உருக்கும் இன்னிசை வேய்ங் கருவிகளில். 22 ஏழு விரல் இடை இட்ட இன்னிசை வங்கியம் எடுத்துத் தாழுமலர் வரிவண்டு தாது பிடிப்பன போலச் சூழுமுரன்று எழ நின்று தூய பெரும் தனித் துளையில் வாழிய நந்தோன்றலார் மணி அதரம் வைத்தூத. 23 முத்திரையே முதல் அனைத்தும் முறைத் தானம் சோதித்து வைத்த துளை ஆராய்ச்சி வக்கரனை வழி போக்கி ஒத்த நிலை உணர்ந்து அதற்பின் ஒன்று முதல்படி முறையாம் அத்தகைமை யாரோசை அமரோசைகளின் அமைத்தார். 24 மாறுமுதற் பண்ணின் பின் வளர் முல்லைப் பண்ணாக்கி ஏறிய தாரமும் உழையும் கிழமை கொள இடுந்தானம் ஆறுலவுஞ் சடை முடியார் அஞ்செழுத்தின் இசை பெருகக் கூறிய பட்டடைக் குரலாங் கொடிப் பாலையினில் நிறுத்தி. 25 ஆய இசைப் புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்து மேய துளை பற்றுவன விடுபனவாம் விரல் நிரையிற் சேய வொளியிடை அலையத் திருவாளன் எழுத்தஞ்சும் தூய இசைக் கிளை கொள்ளுந் துறையஞ்சின் முறை விளைத்தார். 26 மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன் முறையால் தந்திரிகள் மெலிவித்தும் சமங்கொண்டும் வலிவித்தும் அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்தியக்கிச் சுந்தரச் செங்கனிவாயும் துளைவாயும் தொடக்குண்ண. 27 எண்ணிய நூல் பெருவண்ணம் இடை வண்ணம் வனப்பென்னும் வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில் நண்ணிய பாணியும் இயலும் தூக்கு நடை முதற்கதியில் பண்ணமைய எழும் ஓசை எம் மருங்கும் பரப்பினார். 28 வள்ளலார் வாசிக்கும் மணித் துளைவாய் வேய்ங் குழலின் உள்ளுறை அஞ்செழுத்தாக ஒழுகியெழு மதுர ஒலி வெள்ளநிறைந்து எவ்வுயிர்க்கும் மேல் அமரர் தருவிளை தேன் தெள்ளமுதின் உடன் கலந்து செவி வார்ப்பது எனத் தேக்க. 29 ஆனிரைகள் அறுகருந்தி அசை விடாது அணைந்து அயரப் பால் நுரை வாய்த் தாய் முலையில் பற்றும் இளங்கன்று இனமும் தான் உணவு மறந்து ஒழியத் தட மருப்பின் விடைக் குலமும் மான் முதலாம் கான் விலங்கும் மயிர் முகிழ்த்து வந்து அணைய. 30 ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கணுக ஊடுசெவி இசை நிறைந்த உள்ளமொடு புள்ளினமும் மாடுபடிந்து உணர்வு ஒழிய மருங்கு தொழில் புரிந்து ஒழுகும் கூடியவண் கோவலரும் குறை வினையின் துறை நின்றார். 31 பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார் மணிவரை வாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார் தணிவில் ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர் அணிவிசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார். 32 சுரமகளிர் கற்பகப் பூஞ்சோலைகளின் மருங்கிருந்து கர மலரின் அமுது ஊட்டும் கனி வாய் மென் கிள்ளையுடன் விரவு நறுங்குழல் அலைய விமானங்கள் விரைந்து ஏறிப் பரவிய ஏழிசை அமுதம் செவி மடுத்துப் பருகினார். 33 நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்திலினால் மலிவாய்வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும் சலியாத நிலை அரியும் தடம் கரியும் உடன் சாரும் புலி வாயின் மருங்கு அணையும் புல்வாய புல்வாயும். 34 மருவிய கால் விசைத்து அசையா மரங்கள் மலர்ச் சினை சலியா கருவரை வீழ் அருவிகளும் கான்யாறும் கலித்து ஓடா பெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழியப் புனல் சோரா இரு விசும்பின் இடை முழங்கா எழுகடலும் இடை துளும்பா. 35 இவ்வாறு நிற்பனமும் சரிப்பனவும் இசை மயமாய் மெய் வாழும் புலன் கரண மேவிய ஒன்று ஆயினவால் மொய்வாச நறுங்கொன்றை முடிச் சடையார் அடித் தொண்டர் செவ்வாயின் மிசை வைத்த திருக்குழல் வாசனை உருக்க. 36 மெய்யன்பர் மனத்து அன்பின் விளைந்த இசைக் குழல் ஓசை வையம் தன்னையும் நிறைத்து வானம் தன் வயமாக்கிப் பொய் அன்புக்கு எட்டாத பொற் பொதுவில் நடம் புரியும் ஐயன் தன் திருச் செவியின் அருகணையப் பெருகியதால். 37 ஆனாயர் குழல் ஓசை கேட்டு அருளி அருள் கருணை தானாய திரு உள்ளம் உடைய தவ வல்லியுடன் கானாதி காரணராம் கண்ணுதலார் விடையுகைத்து வானாறு வந்தணைந்தார் மதி நாறுஞ் சடை தாழ. 38 திசை முழுதுங் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கி மிசை மிடைந்து வரும் பொழுது வேற்று ஒலிகள் விரவாமே அசைய எழுங்குழல் நாதத்து அஞ்செழுத்தால் தமைப் பரவும் இசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர் நின்றார். 39 முன் நின்ற மழவிடை மேல் முதல்வனார் எப்பொழுதும் செந்நின்ற மனப் பெரியோர் திருக் குழல் வாசனை கேட்க இந்நின்ற நிலையே நம்பால் அணைவாய் என அவரும் அந்நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திரு மருங்கு அணைந்தார். 40 விண்ணவர்கள் மலர் மாரி மிடைந்து உலகமிசை விளங்க எண்ணில் அருமுனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்லப் புண்ணியனார் எழுந்து அருளிப் பொற் பொதுவின் இடைப் புக்கார். 41 வேறு - அறுசீர் விருத்தம் (சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி) தீது கொள் வினைக்கு வாரோம் செஞ்சடைக் கூத்தர் தம்மைக் காது கொள் குழைகள் வீசும் கதிர் நிலவு இருள் கால் சீப்ப மாது கொள் புலவி நீக்க மனையிடை இரு கால் செல்லத் தூது கொள்பவராம் நம்மைத் தொழும்பு கொண்டு உரிமை கொள்வார்.42 *இத்துடன் இலை மலிந்த சருக்கம் முற்றிற்று* திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

861 views • 5 days ago
00:00
00:55

என் மகன் வரைந்த ஓவியம் முருகனுக்கு அரோகரா ##@ #🙏ஆன்மீகம் #🪔கார்த்திகை விரதம்🙏🏻 #🙏🏻கார்த்திகை விரதம்

569 views • 3 days ago
00:00
00:25