காதறுந்த ஊசி
"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்பது பட்டினத்தடிகளின் வாக்கு. மனிதர்கள் கொடுக்கிற வாக்குறுதிகளும்கூட அப்படித்தான். "கண்டிப்பாகச் செய்கிறேன்" என ஒருவர் வாக்குறுதி கொடுத்தாலும், அந்த இரண்டு வார்த்தைகளுக்கு முன், 'முடிந்தால்' அல்லது 'கடவுள் விரும்பினால்' (God wiiling) என்பதை சேர்த்துக் கொள்வது நல்லது. தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.
வாக்குறுதி என்பது ஒப்பந்தம் இல்லை. எனவே அது எதுவரை செல்லும் என்று சொல்ல முடியாது. "நான் இருக்கிறேன் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொன்னவர் நாளை இருப்பாரா, இருந்தாலும் நம்மை பாத்துக் கொள்ளும் நிலையில் இருப்பாரா என்று சொல்வதற்கில்லை.
கிராமப்பறங்களில் "அவன் அப்படியா சொன்னான்? அவனுடைய வார்த்தைகள் நீர்மேல் எழுதி வைத்தது மாதிரிதான்" என்று சாதாரணமாகக் கூறுவார்கள். காகிதத்தில் எழுதியதே காற்றில் பறக்கும்போது, எழுதும்போதே அழிகிற நீரில் எழுதுகிற எழுத்து நீடிக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
நீரில் எழுதுவதாவது எழுதிய கணத்தில் மறைகிறது. சொல்கிற வார்த்தைக்கு சொல்லும்போதே உயிர் இல்லை என்றால் அது எவ்வளவு தூரம் வரும்? சரி, உயிருள்ள மனிதர்தானே சொல்கிறார்? பிறகு ஏன் இந்தக் கேள்வி?
உள்ளத்தில் ஒன்றை வைத்து, உதடுகள் அதை மறைத்து, பொய்யான வார்த்தைகளை உதிர்ப்பதுண்டு. அதாவது, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொடுத்த க்ஷணத்திலேயே இருப்பதில்லை. அப்போதைக்கு அவை சும்மா சமாதானத்திற்காக சொல்லப்படும் வார்த்தைகள்.
வாக்குறுதிகளை கேட்பவர் நம்பினாலும் சொல்பவர் நம்பாத நிலையில், அவை பொய்யாகும் போது அதற்கான அதற்கான வியாக்கியானங்கள் பெரிதாக இருக்கும். 100 வாக்குறுதிகளில் 90ஐ நிறைவேற்றிவிட்டோம் என மேடைகளிலே அரசியல் கட்சிகள் அலப்பறை செய்வதுண்டு.
90% வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு 10% பணம்கூடத் தேவைப்படாது. ஆனால், அந்த 10% வாக்குதிகளுக்கு 90% பணம் தேவைப்படும். பல அரசுகள் கடந்த காலங்களில் கவைக்கு உதவாத வாக்குறுதிகளை வதவதவென்று அள்ளி விட்டதன் சூட்சுமம் இதுதான்.
முதல்வர் விஜய் தனது பதவியேற்பு விழாவில் பேசும்போது, "முந்தைய அரசு கஜானாவை காலி செய்துவிட்டு போயுள்ளது … மக்கள் எனக்கு கொஞ்சம் அவகாசம் தந்தால் (கொடுத்த வாக்குறுதிகளை
நிறைவேற்றுவதற்கு) உதவியாகவும்
ஒத்துழைப்பாகவும்
இருக்கும்” என பேசியுள்ளது அவவரது வெளிப்படைத் தன்மையை காட்டுகிறது.
தேர்தலுக்கு முன் இன்றைய முதல்வர் விஜய் அளித்த சில வாக்குறுதிகள் நீண்டகால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டியவை. அது வளர்ச்சியை முன்னிட்ட ஒரு மாபெரும் பயணம். அதற்கு நம்பிக்கையே மூலதனம்.
விஜய் தந்த வாக்குறுதிகள் கடன்களை வாங்கி நிறைவேற்றக் கூடியவை அல்ல. அதற்கு அரசின் வருவாயை பெருக்க வேண்டும். அதனால், எதிர்க்கட்சிகள் இது விஷயமாக விமர்சனங்களை முன்வைக்கும் போது மக்கள் அவர்களுடைய உண்மையான நோக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴