கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 12ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 06.07.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் –
.
அகிலம்:
========
கலியரசனுக்குப் பூவண்டர் உபதேசம் தொடர்ச்சி
===================================================
காரண மான மாயன் கலியுகம் வருகென் றெண்ணி
நாரணன் பயந்து வோடி நல்மலை யேறி மானாய்
வாரண நாத னம்பால் வல்வேட னெய்து செத்தான்
தாரணி வாறே னென்று தவலோகஞ் சேர்ந்தான் மாயன்
.
விளக்கம்:
=========
எல்லாவற்றுக்கும் காரணமான நாராயணர் கலியுகம் தோன்றி விட்டது என்று எண்ணிப் பயந்து ஓடிக் கடைசியில் ஓர் உயர்வான மலையிலே ஏறி மானாக உருவெடுத்து ஓடினார். அப்பொழுது அழகு பொருந்திய நாராயணரை ஒரு வலிமை பொருந்திய வேடன் ஒருவன் தனது அம்பால் எய்த காரணத்தால் அக்கண்ணன் இறந்தார். இவ்வாறு இறப்பு எய்திய கண்ணன் பூலோகத்திற்கு வர மாட்டேன் என்று கூறித் தவலோகத்தை அடைந்தார்.
.
.
அகிலம்:
========
அப்படிக் கொத்த மாயன் அவனியில் மனுப்போல் வாரான்
இப்படி யிவன்தான் சொன்ன இகழ்ச்சியை எங்கே கண்டோம்
கப்பிடிச் சாணான் கையில் கைக்கூலி வேண்டிக் கொண்டு
இப்படி மழுப்ப வந்தாய் ஏதடா செய்தி யென்றான்
.
விளக்கம்:
=========
அப்படிப்பட்ட மாயன் பூமியில் மனிதனைப் போல் வரமாட்டான். எனவே, இப்படி இவன் சொன்ன இகழ்ச்சி மொழியை நாம் எங்குக் கண்டோம்? கருப்புக்கட்டி செய்யும் சாணானின் கையிலிருந்து கைக்கூலியை வாங்கிக் கொண்டு இப்படிக் கூறி என் பேச்சினைப் புரட்ட வந்து விட்டாயே. அப்படி அல்லாமல் வேறு காரணம் உண்டா? உடனே சொல் என்று வினவினான்.
.
.
அகிலம்:
========
மழுப்பில்லைக் கேளுங் கேளும் மாண்டுநான் போனா லென்ன
வழுப்பில்லை யுனக்குத் தூண்டல் வளருதே யவரி டத்தில்
கழுத்திலே யுனது கையால் கத்தியை வாங்கி வைப்பாய்
முழுத்தில்லை யானா லென்சொல் மேல்வீசை யரிந்து தாறேன்
.
விளக்கம்:
=========
ஆயிடையன் சீற்றத்துடன் மன்னனே, உன் பேச்சைப் புரட்டவில்லை. என் உயிரே போனால் என்ன? கேள். வைகுண்டரிடம் குற்றம் இல்லை. உன் உயிரை அழிப்பதற்குரிய தூண்டில் அவரிடமே வளர்ந்து கொண்டிருக்கிறது. அறிந்து கொள். உன் கழுத்தில் உன் கையாலே உன்னை அழிக்கும் கத்தியை வாங்கி வைத்து உள்ளாய். இது முழுவதும் உண்மை ஆகாவிடில் என் உதட்டின் மேலிருக்கும் மீசையை அரிந்து தருவேன் என்று சபதமிட்டான்.
.
.
அகிலம்:
========
ஆனையும் படையு முன்றன் அரண்மனைக் கோவில் காலும்
சேனையுங் குடையும் வியாழச் செல்வமுஞ் சிறப்போ டெல்லாம்
ஏனமு மிகவே தோற்று எரிந்துநீ கரிந்து சாவாய்
நானிதைச் சொல்ல வில்லை நாரண ருரைத்தா ரென்றான்
.
விளக்கம்:
=========
உன் ஆனைப்படை அரண்மனை, கோவில் தேர்ச்சக்கரம், சேனை, வெற்றிக்குடை, யானைச் செல்வம், ஆகியவற்றின் சிறப்புகள் எல்லாமும், ஆயுதங்களும் விரைவாக உன்னை விட்டு நீங்கி மனம் எரிந்து துன்பப்பட்டுச் சாவாய். நான் இதைச் சொல்லவில்லை. நாராயணர் உரைத்ததைச் சொல்லுகிறேன் என்று கூறி முடித்தான்.
.
.
அகிலம்:
========
என்றிவன் சொன்ன போது ஏங்கியே வுளறிப் பின்னும்
பொன்னுற வகையி னாலே புத்தியி லறியா வண்ணம்
கொண்டிவன் தன்னைப் போடுங் கொடுவிலங் கதிலே சிங்கத்
தண்டிகை யெடுத்து வாரும் சாணெனச் சாமி பார்க்க
.
விளக்கம்:
=========
இவ்வாறாக ஆயிடையன் அரசனிடம் சொன்னபொழுது, கலியரசன் இவற்றை எல்லாம் கேட்டு மனம் ஏங்கி வாய் உளறி, தன்னுடைய அழியப் போகின்ற விதியினால் உண்மை நிலையைத் தனது புத்தி மூலம் அறியாமல் அங்கு நின்ற தளபதியை நோக்கி, இந்த ஆயிடையனை அழைத்துக் கொண்டு கடுமையான விலங்கிட்டுச் சிறையிலே போடுங்கள் என்று கட்டளை இட்டு, சேவர்களை நோக்கி, சேவர்களே, நான் சாணாச் சுவாமி என்று கூறப்படுகின்ற அந்தச் சாணானைப் பார்க்க வேண்டும். எனவே உடனடியாகச் சிங்க முகப் பல்லக்கை எடுத்து வாருங்கள் என்று கட்டளை இட்டான்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008}
5K views • 1 months ago • Made with AI