மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை...
மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு, வைரமுத்துவின் வரிகளில் 'மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை' போன்ற சின்னச்சின்ன ஆசைகளே போதும். அந்த ஆசைகளில் பிற மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், பிற உயிர்களுக்கும் கேடு விளைவிக்க நினைக்காத ஆசை - ஒரு சராசரி ஆசைதான் இருக்கிறது. அதில்தான் உலகமே சுழல்கிறது.
ஆனால், மனிதர்களை உய்விக்க வந்த அரசியல்வாதிகளும் சரி, ஆன்மீகவாதிகளும் சரி, மனிதர்களைக் குட்டிச் சுவர்கள் ஆக்கிவிட்டார்கள். குட்டிச் சுவர்களுக்கு ஏது மனிதாபிமானமும், அடுத்த தலைமுறையைப் பற்றிய அக்கறையும்?
* அமைதிக்காக போர் தொடுக்க வேண்டும்
* இயற்கையை அழித்து ஆதாயம் தேட வேண்டும்
* தனது இனத்தின் எதிர்கால நன்மைக்காக பிற இனங்களை பூண்டோடு அழிக்க வேண்டும்
* போரினை தடுப்பதற்காக (Nuclear Deterrent!) அணு ஆயுதங்களை உருவாக்க வேண்டும்
* போரில் வெல்வதற்காக பள்ளிக் குழந்தைகளை தீயில் பொசுக்க வேண்டும்
* மருந்துகள் கண்டு பிடிப்பதற்காக ஏழை ஆப்பிரிக்கனை சோதனைப் பொருளாக்க வேண்டும்
* 'நீயா நானா' என்பதை ஒரு போரினால் இன்றே முடிவு செய்து விட வேண்டும்
* சரித்திரத்தில் எப்படியாவது ஓர் இடத்தைப் பிடித்துவிட வேண்டும்
வானத்திலுள்ள நட்சத்திரங்களை எண்ணி விடலாம். ஆனால், வன்மங்களின் பரிமாணங்களையும், அதன் பரிணாம தத்துவங்களையும் விளக்குவது சாதாரணமான காரியம் இல்லை. டிரம்ப், நேதன்யாகு போன்றவர்கள் பிணக்குவியல்களின் மேலிருந்து வேதம் ஓதுகின்றனர்.
புத்தர், மகாவீரர், ஏசு, நபிகள் நாயகம், சங்கராச்சாரியார் போன்ற பெருமக்கள் தோன்றி உலக மக்களுக்கு நேரான பாதைகளை அமைத்துக் கொடுத்து உலகத்தில் சுபிட்சம் ஏற்பட பாடுபட்டார்கள். எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்த பின்பும் இன்று அவர்களின் பேரால் மக்கள் சண்டையிட்டு மடிவது பேரவலம். அது மட்டுமல்ல, அதன் பின்னர் உலகை வழி நடத்தக்கூடிய மகான்களும் இன்று வரை தோன்றவில்லை.
ஜிகாத், அகண்ட யூத சாம்ராஜ்ஜியம் போன்ற இனவாதம் என்ற குண்டுச் சட்டிகளுக்குள் மனிதகுலம் இன்றும் குதிரைகளை ஓட்டிக் கொண்டிருக்கிறது. இது செயற்கை நுண்ணறிவின் காலம். மனிதன் நிலவினையும் செவ்வாய் கிரகத்தையும் ஆக்கிரமித்து காலனிகளை அமைப்பதற்கு முயற்சி செய்கிறான். ஆனாலும், காலம் மாறி வருவதை, காலன் ஏகி வருவதை மனித குலம் உணர்வதில்லை.
எப்போதும் இல்லாத ஒரு புதிய கவலை நமக்கு இப்போது உதித்திருக்கிறது. மொழி, இனம் என்று பேசி புதிய கிரகங்களுக்கு பூமியின் பிரச்சினைகளை ஏற்றுமதி செய்து விடுவார்களோ என்ற கவலைதான்.
நமது கவலை நியாயமானதுதானே?
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴