ShareChat
click to see wallet page

ஐக்கிய நாடுகள் சபையின் வீட்டோ அதிகாரம்: உலக இறையாண்மைக்கு ஒரு சவாலா? இன்றைய சர்வதேச அரசியல் அமைப்பில் மிக முக்கியமானதும், அதே நேரத்தில் அதிக விமர்சனத்திற்குள்ளாகியதும் ஐக்கிய நாடுகள் சபையில் (UN) சில வல்லரசுகளுக்கு இருக்கும் “வீட்டோ அதிகாரம்” ஆகும். பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அதிகாரம், உலக அமைதியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டாலும், பல நேரங்களில் அது உலக நாடுகளின் இறையாண்மைக்கு நேரடியான சவாலாக மாறுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நிரந்தர உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள “வீட்டோ அதிகாரம்” என்பது, எந்த தீர்மானமும் அவர்கள் விருப்பத்திற்கு எதிராக இருந்தால் அதை ஒரே ஒரு 'வீட்டோ' நாட்டினால் தடுத்து நிறுத்த முடியும். இதனால் உலகின் பெரும்பான்மையான நாடுகள் ஆதரிக்கும் நியாயமான சில தீர்மானங்களைக் கூட நிறைவேற்ற முடியாமல் போகிறது. இந்த அதிகாரம், அனைத்து நாடுகளும் சமமானவை என்ற சர்வதேச கொள்கைக்கு முரணாக உள்ளது. குறிப்பாக சிறிய மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் குரல் பலவீனப்படுத்தப் படுவதோடு, வல்லரசுகள் தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்க இந்த அதிகாரத்தை பயன்படுத்துகின்றன. அதன் விளைவாக, உலக அமைதியை நிலைநிறுத்த வேண்டிய அமைப்பே பல நேரங்களில் செயலிழந்து விடுகிறது என்ற விமர்சனம் எழுகிறது. ஆசிய நாடுகள், குறிப்பாக இந்தியா, சீனா, ஈரான், ஈராக் போன்றவை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அரசியல், கலாச்சாரம் மற்றும் வாணிகத்தில் சிறப்பான பாரம்பரியத்தை கொண்டுள்ளன. இந்நாடுகளின் அடித்தளம் மதம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றில் இருந்தது. ஆனால் மேற்கத்திய நாடுகளின் எழுச்சி, குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள், கடந்த சில நூற்றாண்டுகளில் காலனித்துவ ஆதிக்கத்தின் மூலம் உருவானது என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றைய உலக அரசியலில் அமெரிக்காவின் அணுகுமுறை, உலகின் எண்ணெய் வளங்களை கையகப்படுத்தி, அதன் மூலம் உலக பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அமைந்திருப்பதாக பொதுவாக கருதப்படுகிறது. பொருளாதாரத் தடைகள் விதித்தல், ஆயுத சக்தியை காட்டி மிரட்டுதல், அல்லது அரசியல் தலையீடுகள் மூலம் பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல் போன்ற செயல்களால் நீடித்த அமைதியை உருவாக்க முடியாது. இதற்கு உதாரணமாக வியட்நாம் போர், ஈராக் போர், ஆப்கானிஸ்தான் போர் போன்றவற்றை குறிப்பிடலாம். இந்தப் போர்களில் ஏற்பட்ட மனித இழப்புகளும், அரசியல் குழப்பங்களும் வல்லரசுகளின் தலையீட்டின் விளைவுகளே என்றால் அது மிகையில்லை. இது சம்பந்தப்பட்ட வல்லரசுகளையும் பாதித்தது. “வினை விதைத்தவன் வினையை அறுப்பான்” என்ற தத்துவம் இங்கு பொருந்துகிறது. மேலும், சர்வதேச நீதி மன்றம் போன்ற அமைப்புகள் மற்றும் ஐ.நா. வின் தீர்மானங்களை வல்லரசுகள் தங்கள் அரசியல் நலனுக்காக புறக்கணிக்கும் போது, சர்வதேச சட்டத்தின் மதிப்பு குறைகிறது. இதனால் சிறிய மற்றும் பலவீனமான நாடுகள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றன. முடிவாக, வல்லரசு நாடுகளுக்கான வீட்டோ அதிகாரம் நீக்கப்படாமல் அல்லது சீர்திருத்தம் செய்யப்படாமல் இருக்கும் வரை, உலக அமைதி ஒரு கனவாகவே இருக்கும். சமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையிலான சர்வதேச அமைப்பு அமைய வேண்டுமெனில், அனைத்து நாடுகளுக்கும் சில அடிப்படை அம்சங்களின் பேரில் சம உரிமை வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், உலகம் தொடர்ந்து கேள்வி கேட்பாடில்லாத மோதல்களும், போர்களும் நிறைந்த இடமாகவே நீடிக்கும். #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை

533 ने देखा
3 दिन पहले