#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
*பன்னிரெண்டாம் திருமுறை*
*பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.*
*சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.*
*பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.*
*காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.*
*முதற் காண்டத்தில்,
திருமலைச் சருக்கம்,
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்,
இலை மலிந்த சருக்கம்,
மும்மையால் உலகாண்ட சருக்கம்,
திருநின்ற சருக்கம்
என்ற ஐந்து சருக்கங்களும்,*
*இரண்டாம் காண்டத்தில்,
வம்பறா வரிவண்டுச் சருக்கம்,
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்,
பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்,
கறைக்கண்டன் சருக்கம்,
கடல்சூழ்ந்த சருக்கம்,
பத்தராய்ப் பணிவார் சருக்கம்,
மன்னிய சீர்ச் சருக்கம்,
வெள்ளானைச் சருக்கம்
என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.*
*இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.*
இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர்
இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி
அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம்
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
*பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - தில்லை வாழ் அந்தணர் புராணம்*
*சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணத்தின் (பெரியபுராணம்) முதற்காண்டம், தில்லை வாழ் அந்தணர் சருக்கத்தில் உள்ள தில்லை வாழ் அந்தணர் புராணம், சிவபெருமானின் நடனத் தலமான சிதம்பரத்தில் வாழும் அந்தணர்களின் தொன்மையையும், அவர்களின் சிவபக்தியையும் சிறப்பித்துக் கூறுகிறது.*
*சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டத்தொகையில், "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று முதன்முதலில் வைத்துப் பாடப்பட்ட அடியார்கள் இவர்களாவர்.*
*மூவாயிரவர்:சிவபெருமானின் திருவுருவமான 'சிதம்பர ரகசியத்தை' தினமும் பூசித்து வழிபடக்கூடிய, முப்பத்து மூவர் (மூவாயிரம்) என்கின்ற சிறப்பு வாய்ந்த அந்தணர்கள் ஆவர்.*
*மறைவழக்கினர்: வேதங்கள், ஆகமங்கள் மற்றும் அறுதொழில்களில் சிறந்து விளங்கும் இவர்கள், தங்களை நாடி வரும் அடியார்களை வணங்கி உபசரிப்பதையே தங்கள் தலையாய கடமையாகக் கொண்டு வாழ்ந்தவர்கள்.*
*சேக்கிழாரின் வாழ்த்துஇந்நூலின் தொடக்கமாக சேக்கிழார் பெருமான், தில்லைப் பொது நடராஜப் பெருமானை "ஆதியாய் நடுவும் ஆகி அளவு இலா அளவும் ஆகிச் சோதியாய் உணர்வும் ஆகித் தோன்றிய பொருளும் ஆகிப்..." எனப் போற்றிப் பாடியுள்ளார். தில்லை வாழ் அந்தணர்கள் இந்த நடராஜப் பெருமானின் திருவடிகளைத் தினமும் வணங்கி, அதன் அருள் வழியில் நீடு வாழ்ந்து வந்தவர்கள் என்று சிறப்பிக்கப்படுகின்றனர்.*
பாடல் வரிகள் :
*பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - தில்லை வாழ் அந்தணர் புராணம்*
அறுசீர் விருத்தம்
ஆதியாய் நடுவுமாகி அளவு
இலா அளவுமாகிச்
சோதியாய் உணர்வுமாகித்
தோன்றிய பொருளுமாகிப்
பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய்
ஆணும் ஆகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொது
நடம் போற்றி போற்றி. 1
கற்பனை கடந்த சோதி
கருணையே உருவம் ஆகி
அற்புதக் கோலம் நீடி அரு
மறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமம் ஆகும் திருச்
சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங்
கழல் போற்றி போற்றி. 2
போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர்
திறம் புகலல் உற்றேன்
நீற்றினால் நிறைந்த கோல
நிருத்தனுக்கு உரிய தொண்டாம்
போற்றினார் பெருமைக்கு எல்லை
ஆயினார் பேணி வாழும்
ஆற்றினார் பெருகும் அன்பால்
அடித்தவம் புரிந்து வாழ்வார். 3
பொங்கிய திருவில் நீடும்
பொற்புடைப் பணிகள் ஏந்தி
மங்கலத் தொழில்கள் செய்து
மறைகளால் துதித்து மற்றும்
தங்களுக்கு ஏற்ற பண்பில் தகும்
பணித் தலை நின்று உய்த்தே
அங்கணர் கோயில் உள்ளா அகம்
படித் தொண்டு செய்வார். 4
வரு முறை எரி மூன்று ஓம்பி
மன்னுயிர் அருளால் மல்க
தருமமே பொருளாக் கொண்டு
தத்துவ நெறியில் செல்லும்
அருமறை நான்கினோடு ஆறு
அங்கமும் பயின்று வல்லார்
திரு நடம் புரிவார்க்கு ஆளாம்
திருவினால் சிறந்த சீரார். 5
மறுவிலா மரபின் வந்து
மாறிலா ஒழுக்கம் பூண்டார்
அறு தொழில் ஆட்சியாலே
அருங்கலி நீக்கி உள்ளார்
உறுவது நீற்றின் செல்வம் எனக்
கொளும் உள்ளம் மிக்கார்
பெறுவது சிவன் பால் அன்பாம்
பேறு எனப் பெருகி வாழ்வார். 6
ஞானமே முதலாம் நான்கும் நவை
அறத் தெரிந்து மிக்கார்
தானமும் தவமும் வல்லார்
தகுதியின் பகுதி சார்ந்தார்
ஊனமேல் ஒன்றும் இல்லார்
உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையும் தாங்கி
மனை அறம் புரிந்து வாழ்வார். 7
செம்மையால் தணிந்த சிந்தைத்
தெய்வ வேதியர்கள் ஆனார்
மும்மை ஆயிரவர் தாங்கள்
போற்றிட முதல்வனாரை
இம்மையே பெற்று வாழ்வார் இனிப்
பெறும் பேறு ஒன்று இல்லார்
தம்மையே தமக்கு ஒப்பான
நிலைமையால் தலைமை சார்ந்தார். 8
இன்றிவர் பெருமை எம்மால்
இயம்பலாம் எல்லைத்தாமோ
தென் தமிழ்ப் பயனாய் உள்ள திருத்
தொண்டத் தொகை முன் பாட
அன்று வன் தொண்டர் தம்மை
அருளிய ஆரூர் அண்ணல்
முன் திரு வாக்கால் கோத்த முதல்
பொருள் ஆனார் என்றால். 9
அகல் இடத்து உயர்ந்த தில்லை
அந்தணர் அகிலம் எல்லாம்
புகழ் திரு மறையோர் என்றும்
பொது நடம் போற்றி வாழ
நிகழ் திரு நீல கண்டக்
குயவனார் நீடு வாய்மை
திகழும் அன்புடைய தொண்டர்
செய் தவம் கூறல் உற்றாம். 10
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
2K views•1 months ago
00:00
01:03
#🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ