கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 09.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
ஒருவருந் தாங்கரிது உன்கை குவித்தாக்கால்
குருதெய்வம் நீயே கோவே குலக்கொழுந்தே
இன்ன முனக்கு இயம்புகிற விஞ்சையதும்
பொன்னம் மகனே பூராய மாய்க்கேளு
.
விளக்கம்
==========
நீ கைக்குவித்துக் கும்பிட்டால் ஒருவராலும் பொறுக்க முடியாது. குரு தெய்வம் எல்லாம் நீயே. அரசே, என் குலக்கொழுந்தே, என் மகனே, இன்னும் சில உபதேசங்கள் கூறுகிறேன் முழுவதுமாகக் கேள்.
.
.
அகிலம்
========
சாதி பதினெட்டும் தலையாட்டிப் பேய்களையும்
வாரி மலையதிலும் வன்னியிலுந் தள்ளிவிடு
வரத்தை மிகவேண்டி வைத்துக்கொள் ளென்மகனே
.
விளக்கம்
==========
பதினெட்டுச் சாதிகளின் பெயர்களையும் தலையாட்டும் பேய்களையும், அள்ளியெடுத்து மலைகளிலும் தீயிலும் தள்ளி அழித்துவிடு. அவற்றின் வரங்களையும் சக்தியையும் வாங்கி வைத்துக்கொண்டு அவற்றை அழித்து விடு.
.
.
அகிலம்
========
சரத்தை மிகவாங்கித் தானனுப்புப் பேய்களையும்
உட்கோள் கிரகம் உறவுகெட்ட பேர்முதலாய்க்
கட்கோள் கருவைக் காணாதே சாபமிடு
செல்வம் பொருந்திச் சிறந்திரு என்மகனே
.
விளக்கம்
==========
என்மகனே, உபக்கிரகங்களையும், கிரகங்களையும் அவற்றிற்குத் தொடர்பில்லாத பெயர்களையும், கிரகநிலை கண்டு உருவாக்கும் மந்திரப் பொருள்களையும் காணாது ஒதுங்கிவிடச் சாபம் கொடு. மகனே, நீ சகல விதமான செல்வங்களையும் பெற்று சிறந்து வாழ்வாயாக.
.
.
அகிலம்
========
கொல்லென்ற பேச்சுக் கூறாதே என்மகனே
ஒவ்வொன்றைப் பார்த்து ஊனு ஒருசாபம்
செவ்வென்ற பேச்சுச் செப்பியிரு என்மகனே
உரைத்த விஞ்சையெல்லாம் உனக்குப்போது மோமகனே
.
விளக்கம்
==========
கொல் என்னும் சொல்லைப் பயன்படுத்தாதே மகனே. கொல்லப்படுகின்ற உயிர்கள் கொல்லப்படாதிருக்க அல்லது பலியிடப் படாதிருக்க ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சாபம் கொடுத்து நீக்கிவிடு. தூய்மையான பேச்சையே நீ பேசிக் கொண்டு வாழ்ந்து வா. இதுவரை நான் உனக்குக் கூறிய உபதேசங்கள் போதுமா மகனே.
.
.
அகிலம்
========
விரைத்தமுள்ள வைகுண்டா விற்பனவா நீகேளு
நீபோ யிருக்கும் இடங்களில் என்மகனே
அன்பான பஞ்சவர்கள் அங்கேவுண் டென்மகனே
முன்னே பிறந்த உகத்துக் குகங்களெல்லாம்
என்னைவிட் டகலாது இருந்தார்கள் பஞ்சவர்கள்
ஆனதா லிப்போது யானும்நீ யானதினால்
மானமுள்ள பஞ்சவரை மகனேமுன் விட்டுக்கொள்ளு
.
விளக்கம்
==========
இன்னும் தேவையானால் நல்ல மக்களை உருவாக்கப் போகின்ற வைகுண்டா கேட்பாயாக.
என் மகனே, நீ போயிருக்கும் எல்லா இடங்களிலும் அன்பு பூண்ட பஞ்சபாண்டவர் துணை இருப்பர். முன்பு நான் பிறந்த எல்லா யுகங்களிலும் என்னைவிட்டு அகலாது என்னுடன் வாழ்ந்தவர்கள் அந்த பஞ்சவர்கள். வைகுண்டராகிய இந்தப் பிறவியிலும் நான் நீயாக இருப்பதால் அந்த மானமுள்ள பஞ்சவர்களை உனக்குப் பாதுகாப்பாக உன் முன்பாக நிறுத்திக் கொள்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩