#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான விறன்மிண்ட நாயனார் புராணம் என்பது அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான விறன்மிண்ட நாயனாரின் தூய்மையான சிவனடியார் பக்தியையும், அவரே சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகை பாடுவதற்கு மூல காரணமாக அமைந்த வரலாற்றையும் விவரிக்கும் ஒரு முக்கியப் பகுதியாகும். இவர் சேர நாட்டுத் திருச்செங்குன்றூரில் (தற்போதைய செங்கணூர்) வேளாளர் குலத்தில் அவதரித்தார். சிவபெருமானை வணங்குவதற்கு முன்பாக, அவரது அடியார்களை (சங்கம வழிபாட்டை) வணங்க வேண்டும் என்ற தீவிர அடியார் பக்தி கொண்டவர். சேர நாட்டிலிருந்து சோழ நாட்டுத் திருத்தலங்களை தரிசிக்கப் புறப்பட்டு, இறுதியில் திருவாரூர் திருத்தலத்தை வந்தடைந்தார். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 'தேவாசிரியன் மண்டபத்தில்' எந்நேரமும் ஏராளமான சிவனடியார்கள் வீற்றிருப்பார்கள். ஒருநாள் சுந்தரமூர்த்தி நாயனார் தியாகராஜப் பெருமானை தரிசிக்க அவசரமாக வந்தபோது, தேவாசிரிய மண்டபத்தில் இருந்த அடியார்களை வணங்காமல் நேராகக் கோயிலுக்குள் சென்றார். இதைக் கண்ட விறன்மிண்டர் பெரும் கோபமுற்று, "அடியார்களை வணங்காமல் செல்லும் இவன் (சுந்தரன்) திருக்கூட்டத்திற்குப் புறம்பானவன்; அவனுக்கு அருள் செய்யும் தியாகேசனும் புறம்பானவன்!" எனப் பிரகடனம் செய்தார். அடியார் பக்தியின் மேன்மையை உலகிற்கு உணர்த்த விரும்பிய தியாகராஜப் பெருமான், சுந்தரரின் கனவில் தோன்றி சிவனடியார்களின் பெருமைகளைப் பாடுமாறு பணித்தார். இறைவனே "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று அடியெடுத்துக் கொடுக்க, சுந்தரர் 63 நாயன்மார்களின் பெருமைகளைப் போற்றி 'திருத்தொண்டத் தொகை' பதிகத்தைப் பாடி அருளினார்.சுந்தரரின் அடியார் பக்திப் பாடலைக் கேட்டு நெகிழ்ந்த விறன்மிண்ட நாயனார், தன் பிழையை உணர்ந்து சுந்தரரை ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தார்.விறன்மிண்ட நாயனார் தன் வாழ்நாள் முழுவதும் அடியார் தொண்டையே சிவத் தொண்டாகச் செய்து, இறுதியில் சிவபெருமானின் திருவடி நிழலை அடைந்து கணநாதராகும் பேற்றினைப் பெற்றார். தமிழ் மாதமான சித்திரை மாத அசுவினி (அல்லது திருவாதிரை) நட்சத்திரத்தில் இவருக்கு குருபூஜை கொண்டாடப்படுகிறது. பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - விறன்மிண்ட நாயனார் புராணம்* அறுசீர் விருத்தம் விரை செய் நறும் பூந் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவிப் பரசுபெறு மா தவ முனிவன் பரசு ராமன் பெறு நாடு திரை செய் கடலின் பெருவளனும் திருந்து நிலனின் செழு வளனும் வரையின் வளனும் உடன் பெருகி மல்கு நாடு மலை நாடு. 1 வாரி சொரியும் கதிர் முத்தும் வயல்மென் கரும்பில் படு முத்தும் வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும் மூரல் எனச் சொல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும் சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர். 2 என்னும் பெயரின் விளங்கி உலகேறும் பெருமை உடையது தான் அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமைத் தலை நின்றார் மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபிற் பெரியோர் வாழ் பதியாம். 3 அப் பொற் பதியினிடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார் செப்பற்கு அரிய பெரும் சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி எப் பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார் மெய்ப் பத்தர்கள் பால் பரிவுடையார் எம்பிரானார் விறன் மிண்டர். 4 நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த பதிகள் எங்கும் கும்பிட்டுப் படரும் காதல் வழிச் செல்வார் முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திருக் கூட்டத்து எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப் பெற்றார். 5 பொன் தாழ் அருவி மலைநாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும் சென்று ஆள் உடையார் அடியவர் தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி வன் தாள் மேருச் சிலை வளைத்துப் புரங்கள் செற்ற வைதிகத் தேர் நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார். 6 திருவார் பெருமை திகழ்கின்ற தேவாசிரிய னிடைப் பொலிந்து மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்து அணையாது ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகென்று உரைப்பச் சிவன் அருளால் பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார். 7 சேண் ஆர் மேருச் சிலை வளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம் பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரானாம் தன்மைப் பிறை சூடிப் பூணார் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர் பால் கோணா அருளைப் பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார். 8 ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நன் னெறியின் சீலம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பாடச் செழு மறைகள் ஓலம் இடவும் உணர்வு அரியார் அடியா ருடனாம் உளது என்றால் ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தாரார். 9 ஒக்க நெடு நாள் இவ் உலகில் உயர்ந்த சைவப் பெருந் தன்மை தொக்க நிலைமை நெறி போற்றித் தொண்டு பெற்ற விறன் மிண்டர் தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழற்கீழ் மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார். 10 வேறு பிறிதென் திருத் தொண்டத் தொகையால் உலகு விளங்க வரும் பேறு தனக்குக் காரணராம் பிரானார் விறன் மிண்டரின் பெருமை கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேற் கொண்டே ஆறை வணிகர் அமர் நீதி அன்பர் திருத் தொண்டு அறைகுவாம். 11 *"விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கு அடியேன்"* திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

2K views • 26 days ago
00:00
01:59

#🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ

3K views • 5 days ago
00:00
00:47