ShareChat
click to see wallet page

எண்ண அலைகள் என்றும் ஓய்வதில்லை... அலையலையாக, அலைமேல் அலையாக மனித மனங்களில் உணர்ச்சிகள் எழுவதும் வடிவதுமாக தொடர்கிறது. ஓர் அலை எந்தப் புள்ளியில் இருந்து எழுகிறது என்பதைச் சொல்வதற்கில்லை. கிட்டத்தட்ட மன உணர்ச்சிகளும் அப்படித்தான். உணர்ச்சிகள் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. இவை நம் எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளை வடிவமைக்கின்றன. நரம்பியல் ரீதியிலான மாற்றங்களால் ஏற்படும் மன நிலைகளே உணர்ச்சிகள் எனப்படும். உளவியலாளர் பால் எக்மான் மனிதர்களிடம் மகிழ்ச்சி, சோகம், கோபம், பயம், வெறுப்பு, ஆச்சரியம் என ஆறு அடிப்படை உணர்ச்சிகள் காணப்படுவதாக கூறுகிறார். தமிழில் நவரசம் என அவை 9 வகைப்படுகின்றன. நவரசங்கள் என்பது மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒன்பது வகையான சுவைகள் (பாவனைகள்) ஆகும். அவை: நகை (மகிழ்ச்சி), அழுகை  (சோகம்), இளிவரல் (அருவருப்பு),  மருட்கை (வியப்பு), அச்சம் (பயம்),  பெருமிதம் (வீரம்), வெகுளி  (கோபம்), உவகை  (பேரின்பம்) மற்றும்  சாந்தம் (நடுநிலை). பரத நாட்டியம் முகபாவனைகள் மற்றும் உடல் அசைவுகள் மூலம் இவற்றை வெளிப்படுத்துகிறது. உணர்ச்சிகள் பலவாறாக வெளிப்படுவதையும், மாற்றங்கள் அடைவதையும் காண்கிறோம். அனுதாபம் என்ற அலை காதலாக மாறலாம். இரக்கம் அன்பாக மலரலாம். அனுதாபம், காதல், இரக்கம், அன்பு ஆகியவை தனித்தனியான உணர்வுகள் என்றாலும் எதிலிருந்து எது கிளைத்தது என்று கூற முடியாது. மனதில் எழும் உணர்வுகள் உடலையும் பாதிக்கிறது. சில நேரங்களில் உணர்ச்சிகள் சண்டமாருதமாக, ஆழிப்பேரலையாக, காட்டாறு போல பிரவாகம் எடுத்துச் செல்லும். சில சமயங்களில் அவை அமைதியான கடலில் எழும் மெலிதான அலைகளைப்போல மனதில் லேசான சலனங்களை ஏற்படுத்திக் கொண்டு செல்லும். காலத்திற்குக் காலம், இடத்துக்கு இடம், மனிதருக்கு மனிதர் அதன் வீரியம் வேறுபடும். உதாரணமாக, மாமியார் உடைத்தால் மண்குடம். அதையே மருமகள் உடைத்தால்? உணர்ச்சிகள் நாம் முடிவெடுப்பதற்கும், ஆபத்துக்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும் உதவுகின்றன. உதாரணமாக, 'பயம்' என்பது ஒருவரைத் தற்காத்துக் கொள்ளத் தூண்டுகிறது, கோபம் தண்டிக்கத் தூண்டுகிறது. உணர்ச்சிகள் நம் சமூகத் தொடர்புகளையும், மற்றவர்களுடன் நாம் பழகும் விதத்தையும் பாதிக்கின்றன. உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) என்பது தற்காலத்தில் அதிகம் பேசப்படும் உளவியல் சார்ந்த ஒரு கருத்தாகும். தன்னுடைய உணர்ச்சிகளை, மற்றவர்களின் உணர்ச்சிகளை சரியாகப் புரிந்துகொண்டு நிர்வகிக்கும் திறனே உணர்ச்சி நுண்ணறிவு எனப்படும். உணர்ச்சி நுண்ணறிவுத் திறனை வளர்ப்பது ஆரோக்கியமான உறவுகளை உருவாக்கவும், சவால்களை எதிர்கொள்ளவும் உதவுகிறது. உணர்ச்சிகள் நம் வாழ்க்கைக்குச் சுவையையும் அர்த்தத்தையும் தருகின்றன. அவற்றை அடக்குவதை விட, முறையாகப் புரிந்துகொண்டு கையாள்வதே சிறந்தது. மனம் உணர்வற்றுப் போகும்போது எண்ணங்களும் சிந்தனைகளும் எழுவதில்லை. மனிதன் நடைப்பிணம் ஆகிறான். உணர்ச்சிகள் புயலாக மாறும்போது மனம் கட்டுப்பாட்டை இழக்கிறது. உணர்ச்சிகளை பண்படுத்தி முறையாக மேலாண்மை செய்வதற்கு பயிற்சி செய்வது அவசியம். #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை

465 காட்சிகள்
13 மணி நேரத்துக்கு முன்