Fakir Mohamed Lebbai
559 views
பெண் குழந்தைகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி! பெண்களின் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தும் தமிழக அரசின் மகத்தான திட்டம் வரவேற்க்கத் தக்கது! - எஸ்டிபிஐ இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும் காக்கும் உன்னத நோக்கத்துடன், மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் (ஹெச்பிவி) தடுப்பூசி வழங்கும் முன்னோடித் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலில் இந்தப் புரட்சிகரமான தடுப்பூசித் திட்டத்தை தொடங்கியுள்ள தமிழக அரசின் நடவடிக்கையை எஸ்டிபிஐ கட்சி வரவேற்று பாராட்டுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு சில நிமிடங்களிலும் ஒரு பெண் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவது என்பது கொடூரமான உண்மை. பெரும்பாலான சமயங்களில் நோய் மேம்பட்ட நிலையில் கண்டறியப்படுவதால், சிகிச்சை சவாலாகிறது. இத்தகைய பின்னணியில், தமிழக அரசு தொடங்கியுள்ள இந்த (HPV) இலவச தடுப்பூசித் திட்டம் வெறும் சுகாதாரத் திட்டமாக மட்டுமின்றி, பெண்களின் வாழ்வைப் பாதுகாக்கும் மாபெரும் சமூகப் புரட்சியாகவே விளங்குகிறது. உலக அளவில் தடுப்பூசி மூலம் முழுமையாகத் தடுக்கக்கூடிய ஒரே புற்றுநோய் கருப்பை வாய் புற்றுநோய் மட்டுமே என கூறப்படுகிறது. ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) இதற்கான முதன்மை காரணியாகும். இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன்பே, குறிப்பாக இளம் வயதில் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நீண்டகால பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கூட ஆயிரக்கணக்கில் விலை போகும் இத்தடுப்பூசி, பொருளாதார வசதி உள்ளோருக்கு மட்டுமே அணுகக்கூடியதாக இருந்தது. ஆனால், தமிழக அரசின் இந்த இலவசத் திட்டம் ஏழை எளிய மக்களின் பெண் குழந்தைகளுக்கும் இதை அடையக்கூடியதாக மாற்றியுள்ளது. இதன்மூலம் சுகாதாரத்தில் சமத்துவத்தை நிலைநாட்டியுள்ளது; பெண்களின் உரிமைகளை வலுப்படுத்தியுள்ளது. ஆரோக்கிய உரிமை என்பது பணக்காரர்களுக்கு மட்டுமானது அல்ல என்பதை இத்திட்டம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும், பெண்களின் உயிர் மற்றும் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தும் எந்த முயற்சியும் பாராட்டுக்குரியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி சார்பாக தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, தகுதியுடைய அனைத்து பெண் குழந்தைகளும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். #📺அரசியல் 360🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📷வாட்ஸப் DP #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்