#பத்தி #ஆன்மீக #🚹உளவியல் சிந்தனை #😍குட்டி கதை📜 வியாபாரி ஒருவர் ராமகிருஷ்ண பரமஹம்சரை தரிசிப்பதற்காக வந்திருந்தார்.
அவர் நெடுநேரம் குருதேவரின் செயல்பாடுகளை பார்த்தபடியே பேசாமல் அமர்ந்திருந்தார். குரு தேவரின் தீர்க்கமான பார்வை அவரது மௌனத்தை கலைத்தது.
"குருதேவா, நான் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தேன். நல்ல முறையில் வியாபாரம் நடந்ததால் பெரும் பொருள் சேர்ந்தது. வயது ஏற ஏற தெய்வ தரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.
சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதி வைத்துவிட்டு, வியாபாரத்தையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டேன். ஆனாலும் எனக்கு இன்று வரை தெய்வ தரிசனம் கிடைக்கவில்லையே, ஏன்?" என்று கேட்டார்.
ராமகிருஷ்ணர் வியாபாரியிடம், "நீர் ஒரு வியாபாரி. நேற்று வரை வியாபாரத்தில் அக்கறை காட்டினீர். இந்த விஷயத்தில், உமக்குத் தெரியாத தொழில் நுட்பத்தையா நான் சொல்லித் தரப் போகிறேன்.
நேற்று கடையில் இருந்த ஒரு எண்ணை குடத்தை எடுத்துக் கொள்வோம். அதில் இருந்த எண்ணெயை இன்று காலி செய்ததாக வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து எண்ணெய் தான் போகுமே ஒழிய எண்ணெய் வாசனை அவ்வளவு எளிதில் போய்விடுமா?" என்று அவர் பாணியிலேயே பதில் கேள்வி கேட்டார்.
வியாபாரி குருவிடம், "என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. நான் தான் அவசரப்பட்டு விட்டேன். எண்ணெய் குடம் போல் தான் நானும் என்பதை மறந்து விட்டேன்.
சொத்துக்களை வேண்டுமானால் பிள்ளைகளுக்கு எழுதி வைக்கலாம். ஆனால் அதில் உள்ள பற்றை அவ்வளவு எளிதில் போக்க முடியவில்லை. பிறவிக் குணம் ஒரே நாளில் மாறி ஞானம் வருவதில்லை என்ற உண்மையை உணர்ந்து விட்டேன்" என்று சொல்லி குரு தேவரை வணங்கினார்.
பக்தியில் ஈடுபட பொருட்களை மட்டும் துறந்தால் போதாது. அதன் மீது வைத்த பற்றையும் துறக்க வேண்டும் என்பது இந்த சம்பவம் மூலம் நமக்கு விளக்கப்படுகிறது.