குறிப்பாக ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், சிறுநீரகப் பிரச்சனை போன்ற நீண்டநாள் நோய்கள் கொண்டவர்கள் நோன்பு நோற்க முன்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். தினமும் கட்டாயம் மூன்று வேளை மாத்திரை உட்கொள்ள வேண்டியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் முதல் ஆறு மாதம் பாலூட்டும் அன்னைகள் ஆகியோர் நோன்பு கடைபிடிப்பதற்கு முன் தங்களின் உடல்நிலையை மதிப்பீடு செய்து மருத்துவரின் பரிந்துரையைப் பெற வேண்டும்.
ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் முறையான ஆலோசனையுடன் நோன்பு நோற்கலாம். ஆனால் கட்டுப்பாடின்றி இருக்கும் ரத்த கொதிப்பு நோயாளிகள், தங்களின் மாத்திரை அளவை மாற்றிக் கொள்ள வேண்டியிருப்பதால் முன்கூட்டியே மருத்துவரை சந்திக்க வேண்டும். குறிப்பாக 'Accelerated Hypertension' எனப்படும் அதீத ரத்த கொதிப்பு நிலை கொண்டவர்கள் நோன்பைத் தவிர்ப்பது பாதுகாப்பானதாகும். மேலும், ஆரம்ப நிலையில் சிறுநீரக பாதிப்பு (Early Stage Kidney Disease / Albuminuria) உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் நீர் இழப்பு (Dehydration) ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்; ஏனெனில் நோன்பின் போது நீண்ட நேரம் தண்ணீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரக செயல்பாட்டை மேலும் பாதிக்கக் கூடும்.
நோன்பு நோற்கும் ரத்த அழுத்த நோயாளிகள் உப்பு பயன்பாட்டை கடுமையாகக் குறைக்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவுகள், பாக்கெட் உணவுகள், உப்புக் காரங்கள், ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அதே சமயம், பழங்கள், காய்கறிகள், முழுதானிய உணவுகள், குறைந்த கொழுப்பு கொண்ட புரதச்சத்து உணவுகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சஹர் (வைகறை உணவு) நேரத்தில் அதிக உப்பு அல்லது காரம் உள்ள உணவுகளைத் தவிர்த்து, நீண்ட நேரம் பசியைத் தாங்க உதவும் சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ரத்த கொதிப்பின் அபாய அறிகுறிகளான தலைசுற்றல், கடுமையான தலைவலி, குமட்டல், பார்வை மங்குதல், மார்வலி, மூச்சுத்திணறல், தடுமாற்றம் போன்றவை இருந்தால் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். அவசரமாக ரத்த அழுத்தமானியில் பரிசோதனை செய்து, அழுத்தம் அதிகமாக இருந்தால் நோன்பை முறித்து விட்டு தேவையான மாத்திரையை உட்கொள்ள வேண்டும். தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது உயிர் பாதுகாப்புக்கு அவசியம்.
யாரெல்லாம் நோன்பு கடைபிடிப்பது ஆபத்தில் முடியும் என்ற கேள்விக்கு மருத்துவர்கள் தெளிவாக சில பிரிவினரைச் சுட்டிக்காட்டுகின்றனர். டைப் 1 நீரிழிவு நோயாளிகள், இன்சுலின் கட்டாயமாக தேவைப்படும் டைப் 2 நீரிழிவு நோயாளிகள், கட்டுப்பாடற்ற நீரிழிவு அல்லது ரத்த கொதிப்பு உள்ளவர்கள், தீவிர இதய செயலிழப்பு நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் ஆகியோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும், கடந்த 3 மாதங்களுக்குள் ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டெண்ட் பதித்தல் அல்லது பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்தவர்கள், சமீபத்தில் இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டவர்கள், இதய தசை தடிமன் (Cardiomyopathy), இதயத் துடிப்பு கோளாறுகள் (Arrhythmia), இதய வால்வு நோய்கள் கொண்டவர்கள், அடிக்கடி வலிப்பு ஏற்படுபவர்கள் ஆகியோரும் நோன்பு குறித்து நிபுணர் ஆலோசனை பெற வேண்டும்.
இதய நோயாளிகள் தங்களின் கார்டியாலஜி நிபுணரை அணுகி ஈசிஜி (ECG), எக்கோ (ECHO) போன்ற பரிசோதனைகள் மேற்கொண்டு, உடல்நிலை ஸ்திரமாக உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே நோன்பு இருக்க வேண்டும். சில சமயங்களில் மாத்திரை எடுத்துக்கொள்ளும் நேரத்தை சஹர் மற்றும் இஃப்தார் நேரங்களுக்கு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஆனால் இதனை மருத்துவரின் ஆலோசனையின்றி செய்வது தவறு.
மேலும், நோன்பு காலத்தில் போதிய ஓய்வு எடுத்துக் கொள்ளுதல், கடுமையான வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்த்தல், லேசான உடற்பயிற்சி மட்டும் மேற்கொள்ளுதல், மன அழுத்தத்தை குறைத்தல் போன்றவை அவசியம். இஃப்தார் நேரத்தில் அதிகமாக உணவு உட்கொள்ளாமல், மெதுவாக உணவைத் தொடங்கி, தண்ணீர் மற்றும் திரவப் பானங்களை போதுமான அளவு அருந்த வேண்டும். கஃபீன் அதிகம் உள்ள பானங்களைத் தவிர்ப்பதும் நல்லது.
மொத்தத்தில், ரமலான் நோன்பு ஆன்மீக நன்மைகளை வழங்கினாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் சுயமாக முடிவு எடுக்காமல்
#🌙ரம்ஜான் ஸ்பெஷல்🥘🥻 #🌙ரம்ஜான் வரலாறு📕 #💊சர்க்கரை நோய் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் மருத்துவரின் ஆலோசனையுடன் செயல்படுவது அவசியம். சரியான திட்டமிடலும், மருத்துவ கண்காணிப்பும் இருந்தால் பலர் பாதுகாப்பாக நோன்பை கடைபிடிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
#🌱 இயற்கை மருத்துவம்