#பத்தி #பத்திஸ்டேட்ஸ் பகவத் பக்தியில் முயற்சியும் கருணையும்*
பகவத் பக்தியை பயிற்சி செய்பவரில் சிலர் தமது சொந்த முயற்சியினால் கிருஷ்ணரைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும், வேறு சிலர் கிருஷ்ணரே கருணை கொண்டு நம்மைக் கொண்டு செல்வார் என்றும் நம்புகின்றனர்.
“நான் சரணடைந்து விட்டேன், இனிமேல் அவன் பார்த்துக் கொள்வான்,” என முயற்சி செய்யாமல் இருப்பதா?
அல்லது, “எனது சொந்த முயற்சியினால் நானே பகவானைப் பற்றிக் கொள்வேன்,” என்று கர்வத்துடன் இருப்பதா?
உண்மை என்னவெனில், கிருஷ்ண பக்தியில் நாம் நமது விரும்பிய பலனை அடைய இரண்டும் அவசியம்.
நமது முயற்சியும் அவசியம், பகவானின் கருணையும் அவசியம். பகவானின் கருணை காரணமற்றது என்றபோதிலும், பொதுவாக அந்த கருணையைப் பெறுவதற்காக முயலும் பக்தனிடம் அவர் கருணை கொள்கிறார்.
இதனை ஓர் உதாரணம் கொண்டு விளக்கலாம்.
கிணற்றினுள் விழுந்த நபரைக் காப்பாற்ற நினைத்து யாரேனும் ஒரு கயிற்றைக் கொடுத்தால், கிணற்றினுள் இருப்பவன் என்ன செய்ய வேண்டும்?
மேலே இருப்பவர் கிணற்றில் இருப்பவனை இழுத்து வெளியே கொண்டு வருவதற்கு தயாராக இருந்தாலும், கிணற்றினுள் இருப்பவன் கயிறை இறுக்கமாகப் பற்றினால் மட்டுமே அவன் வெளியே வர முடியும்.
அதுபோல, கிருஷ்ணர் கருணையைக் கொடுக்கின்றார், அந்த கருணையை ஜீவன் பற்றிக் கொள்ளுதல் அவசியம்.
பகவான் கருணை அளிக்கத் தயாராக இருக்கிறார். நாமும் பக்தியுடன் அவரை பற்றிக் கொண்டால் வாழ்க்கை உயர்வு நிச்சயம்.🌹