சுரேஷ் குமாரா
565 views
எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்க டாலர் வெறும் பணமாக மட்டும் இருக்கவில்லை, அது உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருந்து வந்தது. “Exorbitant Privilege” என்று வர்ணிக்கப்பட்ட இந்த வலிமையால், அமெரிக்கா உலக நாடுகளின் வர்த்தகத்தை விரல் நுனியில் வைத்து ஆட்டியது. தான் விரும்பாத நாடுகளின் பொருளாதாரத்தை ஒரே ஒரு 'கிளிக்' மூலம் முடக்கும் அதிகாரத்தை அது வைத்திருந்தது. ஆனால், 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அந்த அசைக்க முடியாத அடித்தளத்தில் நினைத்து பார்க்காத வகையில் விரிசல்கள் விழத் தொடங்கியுள்ளன. "De-dollarization” என்ற பேச்சு, சில காலத்திற்கு முன்பு வரை வெறும் மேடைப் பேச்சாகவும், கனவாகவும் மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் இன்று, அது ஒரு நிதர்சனமான உண்மையாக மாறியுள்ளது. உலகப் பொருளாதாரம் "Greenback Hegemony" என அழைக்கப்படும் டொலரை ஒவ்வொரு நாடுகளாக தூக்கி எறிந்துவிட்டு, டாலர் இல்லாத ஒரு புதிய பாதையை நோக்கிச் துணிச்சலாக நடைபோடுகிறது. நாம் ஒரு பொருளாதார மாற்றத்தைக் காணவில்லை, ஒரு உலகளாவிய அதிகாரப் பகிர்வைக் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலரின் மதிப்பு உலக சந்தையில் சரிவைச் சந்தித்துள்ளது. இதற்கு முக்கியமான சில காரணங்கள், பல நாடுகள் காகிதப் பணமான டாலரை விட, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது ஆர்வம் காட்டுகின்றன. தங்கம் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சங்களை எட்டியுள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற BRICS நாடுகள் தங்களுக்குள் நடக்கும் வர்த்தகத்தில் 50% மேல் தங்கள் நாட்டுச் சொந்தக் கரன்சிகளிலேயே (ரூபாய், யுவான் போன்றவை) செய்யத் தொடங்கியுள்ளன. பெட்ரோ-டாலர்" (Petrodollar) சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. சவுதி அரேபியா போன்ற நாடுகள் தற்போது சீனாவுடன் யுவானிலும், இந்தியாவுடன் ரூபாயிலும் எண்ணெய் வர்த்தகம் செய்யத் துணிந்துவிட்டன. இந்த மாற்றங்களுக்கு என்ன காரணம்? உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவின் டாலர் கையிருப்பை அமெரிக்கா முடக்கியது, ( Weaponization of Finance ) மற்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்தது. "நாளை நம்மிடம் அமெரிக்கா முரண்பட்டால் நம் பணமும் முடக்கப்படுமா?" என்ற பயம் பல நாடுகளை டாலரை விட்டு வெளியேறத் தூண்டியது. சீனாவின் CIPS மற்றும் இந்தியாவின் UPI போன்ற தொழில்நுட்பங்கள் சர்வதேச பணப் பரிமாற்றத்திற்கு டாலரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தைக் குறைத்துள்ளன. அமெரிக்காவின் தேசியக் கடன் கட்டுக்கடங்காமல் வளர்ந்து வருவது,( 37 trillions dollars) அந்த நாட்டின் பொருளாதார வலிமை மீது உலக நாடுகளுக்கு இருந்த நம்பிக்கையைச் சற்று தளர்த்தியுள்ளது. சீனா இன்று ஒரு ஆபத்தான விளையாட்டைத் தொடங்கியுள்ளது. தன்னிடம் இருந்த பில்லியன் கணக்கிலான அமெரிக்கக் கடன் பத்திரங்களை (Credit Bonds) சுருட்டி எறிந்துவிட்டு, அதற்குப் பதிலாக நிஜமான தங்கத்தை (Gold) மூட்டை மூட்டையாகத் தன் லாக்கர்களில் குவிக்கத் தொடங்கியுள்ளது. இத்தனை காலம் உலகம் முழுவதும் சுற்றி வந்த டாலர்கள், இப்போது சீனா போன்ற நாடுகள் அதைக் கைவிடுவதால் மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்புகின்றன. விளைவு- ஒரு நாட்டில் அளவுக்கு அதிகமாகப் பணம் புழங்கினால், அந்தப் பணத்தின் மதிப்பு தானாகவே குறையும். இதைத்தான் 'Hyperinflation' என்கிறோம். இன்று நூறு டொலருக்கு வாங்கும் பொருள், நாளை ஆயிரம் டொலராக மாறும் ஒரு பயங்கரமான சூழல் அமெரிக்காவிற்குள் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அமெரிக்காவிடம் பணம் இல்லை என்றால், அது கடன் பத்திரங்களை விற்றுத்தான் நாட்டை நடத்தும். சீனா போன்ற பெரிய வாடிக்கையாளர்கள் அந்தப் பத்திரங்களை வாங்க மறுப்பதோடு, தன்னிடம் இருப்பதையும் சந்தையில் விற்றால், அமெரிக்கப் பத்திரங்களின் மதிப்பு பாதாளத்திற்குச் செல்லும். இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர, அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்த்த வேண்டியிருக்கும். வட்டி உயர்ந்தால், அமெரிக்கத் தொழிலதிபர்கள் முதல் சாமானிய மக்கள் வரை கடன் வாங்க முடியாமல் முடங்குவார்கள். இதுதான் Economic Crash-க்கு (பொருளாதார வீழ்ச்சி) முதலாவது படிக்கல்லாக அமையும். சீனா ஏன் தங்கத்தை வாங்குகிறது? தங்கம் என்பது அழியாத செல்வம். ஆனால் டாலர் என்பது அமெரிக்கா கொடுக்கும் வாக்குறுதி (Promise). "அமெரிக்காவின் வாக்குறுதியை விட, கையில் இருக்கும் தங்கமே மேலானது" என்று சீனா உலகுக்கு உரக்கச் சொல்கிறது. இது மற்ற நாடுகளுக்கும் ஒரு 'ஆரோக்கியமான தொற்று வியாதி' போல பரவும்போது, உலக நாடுகள் அனைத்தும் டாலரை விட்டு வெளியேறும். அப்போது, அமெரிக்காவின் "வல்லரசு" என்ற அந்தஸ்து காணாமல் போய்விடும். சீனா செய்வது ஒரு 'பொருளாதார Ambush'. அமெரிக்கா தன்னிடம் வைத்திருக்கும் டாலர்களை வைத்து உலகையே மிரட்டிய காலம் போய், இப்போது சீனா தன்னிடம் இருக்கும் கடன் பத்திரங்களை வைத்து அமெரிக்காவை மிரட்டிக் கொண்டிருக்கிறது. வரலாற்றில் பல பேரரசுகள் போர்முனையில் வீழ்ந்ததை விட, தவறான பொருளாதார முடிவுகளாலும், அதீத தன்னம்பிக்கையாலும் (Overconfidence) வீழ்ந்ததே அதிகம். America First என்ற கொள்கை, பல தசாப்தங்களாக அமெரிக்காவிற்குப் பக்கபலமாக இருந்த நேட்டோ (NATO) மற்றும் ஐரோப்பிய நாடுகளை அந்நியப்படுத்தியுள்ளது. ஒரு தலைவன் என்பவன் கூட்டத்தோடு இருப்பவன், ஆனால் ட்ரம்ப்பின் போக்கு அமெரிக்காவைத் தனிமரம் ஆக்கிவிட்டது. சீனா மீது அதிக வரி விதிப்பதன் மூலம் அமெரிக்காவை வளப்படுத்தலாம் என்று அவர் நினைத்தார். ஆனால், அது சீனாவின் 'தங்க வேட்டைக்கும்', டாலருக்கு மாற்றாக அவர்கள் உருவாக்கிய The Unit என்ற புதிய நாணயத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்தது போல ஆகிவிட்டது. சர்வதேசப் பணப் பரிமாற்ற அமைப்பான SWIFT-ல் இருந்து ரஸ்யா ஈரான், வடகொரியா போன்ற நாடுகளை நீக்குவது போன்ற 'அவசரக்குடுக்கி' முடிவுகள், உலக நாடுகளுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தின. விளைவு? இன்று ஆப்பிரிக்கா முதல் ஆசியா வரை "எங்களுக்கு டாலர் வேண்டாம்" என்று சொல்லும் துணிச்சலை ட்ரம்ப் தந்துவிட்டார். அப்படியானால் ஒரு வல்லரசு 'கடைக்கோடி' நாடுகளில் ஒன்றாக மாறுமா? ஆம், நிச்சயமாக, வரலாறு இத்தகைய வீழ்ச்சிகளைச் சந்தித்துள்ளது. பிரிட்டிஷ் பேரரசு சூரியன் மறையாத நாடாக இருந்தது, ஆனால் இன்று அது ஒரு தீவு நாடாகச் சுருங்கிவிட்டது. அமெரிக்காவிற்கு அது போன்ற நிலை ஏற்பட்டால், அதற்குக் காரணம் பின்வருவனவாக இருக்கும், ட்ரம்ப்பின் அரசியல் பாணி அமெரிக்க மக்களை இரண்டாகப் பிளந்துள்ளது. ஒரு நாடு தனக்குள்ளேயே அடித்துக்கொள்ளும்போது, வெளியே இருந்து யாரும் அதைத் தோற்கடிக்கத் தேவையில்லை. டாலர் மீதான நம்பிக்கை குறையும்போது, அமெரிக்கா தனது ராணுவத்திற்கும், அரசு திட்டங்களுக்கும் பணம் செலவழிக்க முடியாமல் போகும். ஒரு காலத்தில் உலகையே மிரட்டிய அமெரிக்கா, தனது கடனைத் தீர்க்க முடியாமல் திணறும் ஒரு சாதாரண நாடாக மாறும் சூழல் வரலாம். "வலிமையான ஆயுதங்களை விட, வலிமையான பொருளாதாரமே ஒரு நாட்டைப் பாதுகாக்கும். அந்தப் பொருளாதாரத்தின் ஆணிவேரான டாலரைத் தன் கைகளாலேயே சிதைக்கும் ஒரு தலைவராக ட்ரம்ப் வரலாற்றில் பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது." டாலர் வீழ்ச்சி (Dedollarization) என்பது வெறும் பணத்தின் மதிப்பு குறைவது மட்டுமல்ல, அது வாஷிங்டன் இதுவரை உலகை ஆட்டிப்படைக்கப் பயன்படுத்திய அந்த 'ஆயுதம் ' செயலிழந்து போவதைக் குறிக்கிறது. டாலரின் பலத்தால் இத்தனை காலம் அமெரிக்கா அனுபவித்து வந்த 'அசுரத்தனமான அதிகாரம்', இன்று அதன் சொந்தத் தலைவர்களின் முட்டாள்தனத்தாலும், அவசர முடிவுகளாலும் சிதைந்து வருகிறது. உலக நாடுகள் டாலரை உதறிவிட்டுத் தங்கத்தையும், உள்ளூர் கரன்சிகளையும் கையில் எடுக்கும்போது, அமெரிக்கா தனது வீட்டுக் கடன் வட்டியைக் கூடக் கட்ட முடியாமல் திணறும் ஒரு நாடாக மாறும். ஒரு காலத்தில் உலக நாடுகளுக்குக் கடன் கொடுத்த அமெரிக்கா, இன்று தனது கடனைத் தீர்க்க காகிதங்களை அச்சிட்டுப் பணவீக்கத்தில் மூழ்கி வருகிறது. எதிர்கால வரலாற்றுப் புத்தகங்களில், "உலகையே தன் விரல் நுனியில் வைத்திருந்த ஒரு வல்லரசு, எப்படித் தன் கர்வத்தினாலும், தவறான தலைமைத்துவத்தினாலும் ஒரு சாதாரண நாடாகச் சுருங்கியது" என்ற அத்தியாயத்திற்கு ட்ரம்ப் மற்றும் டாலர் வீழ்ச்சி ஆகியவையே முதன்மையான சான்றுகளாக இருக்கும். அமெரிக்கா அழியப்போவது ஆயுதங்களால் அல்ல, உலக நாடுகள் அதன் மீது கொண்டிருந்த 'நம்பிக்கையின்மை” என்ற ஒரே காரணத்தால். ஒரு மாபெரும் சகாப்தம் முடிவுக்கு வருகிறது, புதியதொரு உலக ஒழுங்கு உதயமாகிறது! #🤔 Unknown Facts