#மார்ச்_10,
சமூக சீர்திருத்தவாதி,"இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை" சாவித்திரிபாய் பூலே நினைவு தினம் இன்று.
தேசிய அளவிலும், மகாராஷ்டிரத்திலும் சமூக சீர்திருத்த இயக்கத்தைத் தொடங்கியவர்களில் முதன்மையானவர்கள் மகாத்மா ஜோதிராவ் பூலே என்றழைக்கப்பட்ட ஜோதிபா பூலேயும் அவருடைய மனைவி சாவித்திரி பாய் பூலேயும்.
தாழ்த்தப்பட்ட குழந்தைகள், குறிப்பாக பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதை இழுக்காக நினைத்த சமூகத்தில், கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பெரும் பணியைச் செய்தார்கள் பூலே தம்பதியினர். இதனால் ஆத்திரம் அடைந்த சமூகத்தின் மேல்தட்டு மக்கள், தொடர்ந்து வசைபாடினர். ஒரு கட்டத்தில், சொந்த குடும்பமே இவர்களை ஒதுக்கி வைத்தது. 1849ஆம் ஆண்டில், வீட்டை விட்டு இருவரும் வெளியேற்றப்பட்டனர். கொண்ட கொள்கையில் இருந்து விலகாது, வீட்டை விட்டு வந்த பிறகும், சமுதாயத்திற்கான இவர்கள் சேவை தொடர்ந்தது. உஸ்மான் ஷேக் வாடாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பள்ளியைத் தொடங்கினர். இப்பள்ளியில், வேலைக்குச் செல்பவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் கற்றனர். இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியர், ஃபாத்திமா ஷேக் உடன் இணைந்து இப்பள்ளியை நடத்தினார் சாவித்திரிபாய்.
1897ம் ஆண்டில் ஏற்பட்ட பிளேக் நோய்ப் பரவலின் போது, பொதுமக்களுக்கு உதவ, சாவித்திரிபாய் மற்றும் அவரது மகன் யஷ்வந்த் இணைந்து ஒரு மருத்துவமனையை அமைத்தனர். அங்கு சாவித்திரிபாய், பலருக்கு அவரே முன்வந்து உதவினார். அனைவரும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல பயந்து போய் இருந்தபோது சாவித்திரிபாயே நேரில் சென்று கொண்டுபோய் சேர்த்திருக்கிறார். அப்படி ஒரு குழந்தைக்கு உதவியதில் நோய்த்தொற்று ஏற்பட்டு மார்ச் 10ஆம் தேதி இறந்துபோனார் சாவித்திரிபாய்
#life #lifes