நீதிபதியா அல்லது சனாதனவாதியா? தொழிற்சங்கங்கள் குறித்த கூற்றும் அதன் உள்நோக்கமும்.
'தொழிற்சங்கங்களால்தான் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன' என்று இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அண்மையில் குறிப்பிட்டிருப்பது, ஒரு தனிநபரின் சாதாரணக் கருத்தாகக் கடந்து போக முடியாத அளவுக்கு, இந்திய ஜனநாயக அமைப்பில் மிகுந்த ஆபத்தான அரசியல் தாக்கம் கொண்டதாகும். நீதித்துறையின் உச்சப் பொறுப்பில் இருப்பவர் சொல்லும் இத்தகைய கூற்றுகள், வெறும் அபிப்பிராயங்களாக அன்றி, சமூகத்தின் மீது திணிக்கப்படும் ஒரு வழிகாட்டும் அரசியல் சிந்தனையாகவே மாற்றப்படுகின்றன.
குறிப்பாகத் தொழிலாளர் உரிமைகள் தொடர்பான வழக்குகளில், கீழ்நிலை நீதிமன்றங்கள் இந்த வகையான கருத்துகளை ஒரு மறைமுக வழிகாட்டுதலாக (Judicial Guidance) எடுத்துக்கொள்ளும் சூழலில், இது உழைக்கும் வர்க்கத்தின் மீது சட்டபூர்வமான அழுத்தமாக மாறும் அபாயம் உள்ளது.
ஒரு நீதிபதியாகத் தரவுகளைப் பார்க்க வேண்டிய இடத்தில் இருப்பவர், தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கான உண்மையான பொருளாதாரக் காரணங்களைக் கவனிக்கத் தவறுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புள்ளிவிவரங்களின்படி, 95 சதவீதத்திற்கும் அதிகமான தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு நிர்வாகக் குறைபாடுகள், நிதி நெருக்கடி மற்றும் சந்தைப் போட்டி ஆகியவையே காரணங்களாக உள்ளன.
தொழிலாளர் போராட்டங்களால் மூடப்படும் தொழிற்சாலைகள் வெறும் 3 சதவீதத்திற்கும் குறைவானவை. இத்தகைய தெளிவான தரவுகள் இருக்கும்போது, ஒரு நீதிபதி ஒட்டுமொத்தப் பழியையும் தொழிற்சங்கங்கள் மீது சுமத்துவது, அவர் நீதியின் தரப்பிலிருந்து பேசுகிறாரா அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களின் தரப்பிலிருந்து பேசுகிறாரா என்ற ஐயத்தை எழுப்புகிறது.
நீதிமன்றத்தின் வாயிலாகப் பேசப்படும் இத்தகைய மொழி, உண்மையில் அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிகளின் குரலாகவே ஒலிக்கிறது. இது நீதியின் பார்வையல்ல; மாறாக, மூலதனவாதத்தின் தோல்விகளை மறைத்து உழைப்பவர்களையே குற்றவாளிகளாக்கும் ஒரு முயற்சியாகும். ஒரு நீதிபதி வரலாற்றையும் தொழிலாளர் சட்டங்களின் சமூகத் தேவையையும் அறிந்திருக்க வேண்டும்.
ஆனால், இங்குத் தொழிலாளர் உரிமைகளை ஒரு சுமையாகச் சித்தரிப்பது என்பது, நீதியின் அடிப்படைப் பண்பான "பலவீனமானவர்களின் பக்கம் நிற்கும் அறத்தை" கைவிட்டு, வலிமையான அதிகார மையங்களுக்குச் சேவை செய்வதாகவே அமைகிறது.
இந்தக் கூற்றில் ஒளிந்திருக்கும் மற்றொரு ஆபத்தான பக்கம், இது ஒரு சனாதனவாதச் சிந்தனையின் நவீன வடிவமாகத் தெரிவதுதான்.
உழைப்பவனுக்கு உரிமை இல்லை, அவனுக்குக் கடமை மட்டுமே உண்டு என்ற மனுஸ்மிருதி காலத்துச் சிந்தனையைத் தான் இன்றைய தொழிலாளர் கொள்கைகளும் நீதிபதியின் கூற்றும் பிரதிபலிக்கின்றன.
சனாதனப் பொருளாதாரக் கொள்கையின்படி, உழைப்பவன் என்பவன் ஒரு குடிமகனாக அல்ல, அதிகாரத்திற்குக் கட்டுப்பட்ட ஒரு சேவகனாகவே பார்க்கப்படுகிறான்.
"ஷிரம் ஷக்தி நிதி – 2025" போன்ற திட்டங்களும், 44 தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு நான்கு சட்டத்தொகுப்புகளைக் கொண்டு வந்ததும் இந்தச் சனாதனச் சிந்தனையின் சட்டபூர்வமான வெளிப்பாடுகளே ஆகும்.
சனாதன மனோபாவம் என்பது உழைக்கும் மக்களை அதிகாரமற்றவர்களாகவும், கேள்வி கேட்கும் உரிமையற்றவர்களாகவும் வைத்திருக்க விரும்புகிறது.
தொழிற்சங்கங்கள் என்பது தொழிலாளர்களின் உரிமையைக் காக்கும் அரண் மட்டுமல்ல, அது நவீன அடிமைத்தனத்திற்கு எதிராகக் குரல் எழுப்பும் ஜனநாயகக் கேடயமாகும்.
அத்தகைய ஒரு அமைப்பைப் பிரச்சனையாகச் சித்தரிப்பது என்பது, இந்தியாவை மீண்டும் ஒரு வர்ணாசிரமப் பொருளாதாரக் கட்டமைப்பிற்குள் தள்ளும் முயற்சியே தவிர வேறில்லை.
உழைப்பவரின் கைகளில் இருக்கும் தொழிற்சங்கம் எனும் வலிமையான ஆயுதத்தைப் பறிப்பதன் மூலம், அவர்களைப் பெருமுதலாளிகளின் தயவில் வாழும் அடிமைகளாக மாற்ற இந்தச் சிந்தனை வழிவகுக்கிறது.
இந்தியா இன்று ஒரு ஜனநாயக நாடாகத் திகழ்வதற்கு இடதுசாரி இயக்கங்களும் தொழிற்சங்கங்களும் செய்த போராட்டங்களே அடிப்படை.
8 மணி நேர வேலை முதல் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் வரை அனைத்தும் இந்தப் போராட்டங்களின் விளைவே.
தொழிற்சங்கங்கள் இல்லையென்றால், இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருந்திருக்காது; அது ஒரு பெரும் கார்ப்பரேட் கம்பெனியாக மட்டுமே இருந்திருக்கும்.
தொழிற்சங்கங்களை உடைக்க நினைப்பது இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பை உடைப்பதற்குச் சமமாகும்.
இடதுசாரிகள் இல்லையென்றால் இந்தியா சமத்துவமில்லை, இடதுசாரிகள் இல்லையென்றால் இந்தியா மனிதநேயமில்லை.
இடதுசாரிகள் இல்லையென்றால்
தொழிற்சங்கம் இல்லையென்றால்
மனிதநேயமில்லை.
சமத்துவமில்லை
ஜனநாயகமில்லை.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்! இந்தியாவைக் காப்போம்!
இரா.தமிழ் பெருமாள்
30.01.2026 - தேனி.
#👨மோடி அரசாங்கம்