அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம், 'வெற்று விளம்பர மாடல்' தி.மு.க ஆட்சியில் அச்சமூட்டும் கொலைக்களமாக மாறி இருக்கிறது. நரகத்தில் வாழ்வதைப்போல, தினம்தோறும் மனம் பதைபதைத்து வாழும் கொடுந் துயரத்தில் சிக்கி இருக்கின்றனர் தமிழக மக்கள். பாதுகாப்பான சூழலில், அமைதியாக வாழ வேண்டிய பொதுமக்கள் ஒவ்வொரு நிமிடமும் பயந்து பயந்து... பதைபதைத்து வாழும்போது, ஆளும்கட்சியின் ஆதரவோடு இருக்கும் குற்றவாளிகள் தைரியமாக வலம்வரும் அவலமும் நடக்கிறது.
திறனற்ற தி.மு.க அரசாங்கத்தில் சட்டம்-ஒழுங்கு எவ்வாறு சீர்குலைந்து - சீழ்பிடித்துப் போய் இருக்கிறது என்பதற்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நடைபெற்ற சம்பவங்களையே சாட்சியாகக் காட்டலாம்!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியிலும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மக்கும்பல்கள் பொதுமக்களை சரமாரியாக வெட்டி சாய்த்தது; அதில், இரண்டு பேர் பலியானது.
சென்னை திரிசூலத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலை.
கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரை கொலைசெய்துவிட்டு, அவரது 60 வயது மனைவிக்கு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது.
சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பணிபுரிந்த பணிப்பெண், தி.மு.க கவுன்சிலர் ஒருவரால் பலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது.
நாமக்கல்லில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது.
சென்னை காசிமேட்டில் தி.மு.க நிர்வாகி ஒருவரால், இளம்பெண் வயிற்றிலும் பிறப்புறுப்பிலும் எட்டி உதைக்கப்பட்ட கொடூரம் - என நாள்தோறும் தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. காவல்துறை என ஒன்று இருக்கிறதா? அது செயல்படுகிறதா? என்ற சந்தேகத்தைத்தான் இந்த தொடர் சம்பவங்கள் எழுப்புகின்றன.
2 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை... எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல், ஒரு வன்முறை சம்பவம் ஏற்படுத்திய பேரதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், அடுத்த வன்முறைச் சம்பவம் இன்னும் கொடூரமாக நடைபெறும் ஆபத்து என கொலைக்களமாகவும், பாலியல் கொடுமைக்காடாகவும், போதையில் தள்ளாடும் நிலைக்கும் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. ஆனால், இவற்றைக் குறித்து, எந்தக் கவலையும் இல்லாத, தமிழக முதலமைச்சர் வேறொரு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிக்கிறார்.
தமிழக மக்களின் பாதுகாப்பில் கொஞ்சமும் அக்கறை காட்டாத முதலமைச்சர், தினம்தோறும் எந்த ரியாலிட்டி ஷோ-வில் கலந்து கொள்ளலாம் என்பதையே திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். அப்படிக் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில், தனக்கு நெருக்கமான துதிபாடிகளை வைத்து, "அற்புதமான ஆட்சி, அமைதியான ஆட்சி, வளர்ச்சியை நோக்கிய ஆட்சி" என பொய்யைப் பேச வைத்து, போலியாக மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்.
ஆனால், எதார்த்தத்தில் தமிழகத்தில் நடப்பது, "அவலமான ஆட்சி, அச்சமூட்டும் ஆட்சி, ஆபத்தான ஆட்சி, சீர்குலைந்த ஆட்சி, சீழ்பிடித்த ஆட்சி" என்பதுதான் நிதர்சனம். இப்படிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் எதிரான திமுக ஆட்சியை ஒட்டுமொத்தத் தமிழக மக்களும் தூக்கி எறியும் நாள் தூரத்தில் இல்லை!
#🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றி கழகம் #தமிழக வெற்றி கழகம் (TVK)