தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் நடிப்பால் ரசிகர்களிடம் அறிமுகமான நடிகர் முத்துக்காளை தற்போது மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளார். அவரது மனைவி மாலதி (47) கடந்த 19 நாட்களாக சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மாலதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மனைவியை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் மருத்துவமனையில் 19 நாட்களாக போராடிய முத்துக்காளை, சமீபத்தில் மருத்துவ செலவுகளுக்காக உதவி கோரி வீடியோவிலும் மனவேதனை பகிர்ந்திருந்தார். அந்த கோரிக்கையை தொடர்ந்து சில அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் உதவிக்கரம் நீட்டியிருந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மாலதி உயிரிழந்த செய்தி குடும்பத்தினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனது மனைவியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சங்கம்பட்டி திருக்கோதையாபுரம் பகுதிக்கு முத்துக்காளை எடுத்துச் சென்றுள்ளார். இன்று இரவு அங்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சோகமான செய்தி வெளியாகியதையடுத்து திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் பலரும் முத்துக்காளைக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவியின் சிகிச்சைக்கு உதவி கேட்டு முத்துக்காளை வீடியோ வெளியிட்டதை அடுத்து, இந்த விவகாரம் முதலமைச்சர் விஜய்யின் காதுகளுக்கு சென்றிருக்கிறது. அவர் உடனடியாக அமைச்சர் ராஜ்மோகனை மருத்துவமனைக்கு அனுப்பி, அவர்களுக்கு தேவையான உதவியை செய்து தரும்படி அறிவுறுத்தி இருந்தார். ராஜ்மோகன் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் முத்துக்காளை மனைவிக்கு தேவையான சிகிச்சையை துரிதமாக அளிக்க உத்தரவிட்டு இருந்தார். உயரிய சிகிச்சை அளித்தும், முத்துக்காளை மனைவி மாலதி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
#இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴