நடேசன் S
4.9K views
11 hours ago
இந்திய சினிமாவில் முதல்முறை ZOOM லென்ஸ் பயன்படுத்தப்பட்ட சிவாஜி படம்! இன்றைக்கு ஸும் லென்ஸ்கள் மானாவாரியாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், 60 வருடங்களுக்கு முன்னால் இந்திய சினிமாவில் ஸும் லென்ஸ் என்ற ஒன்று இல்லை. ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருக்கும் பொருளை அல்லது நடிகர்களை அந்தத் தொலைவு காட்டும் உருவத்தில் மட்டுமே படம் பிடிக்க முடியும். ஸும் செய்து அந்த பொருளின், நடிகர்களின் உருவத்தை பெரிதாக காண்பிக்க வழியில்லை. சுமார் 64 வருடங்களுக்கு முன் முதன் முதலில் தமிழ்ப் படம் ஒன்றில் ஸும் லென்ஸ் ஒரேயொரு காட்சியில் படமாக்கப்பட்டது. அது சிவாஜி இரு வேடங்களில் நடித்த தமிழ் படம் என்பது தமிழர்களுக்கு பெருமைக்குரிய விஷயம். உத்தம புத்திரன் 1940-ல் பி.யூ.சின்னப்பா, கன்னட நடிகை எம்.வி.ராஜம்மா நடிப்பில் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய படம். பிற்காலத்தில் நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்த பாலையா இதில் வில்லனாக நடித்தார். பி.யூ.சின்னப்பா இதில் இரண்டு வேடங்களில் நடித்தார். தமிழில் ஒரு நடிகர் இரண்டு வேடங்களில் நடித்த முதல் படம் இதுவாகும். 1939-ல் ஹாலிவுட்டில் வெளியான தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க் திரைப்படத்தை தழுவி உத்தம புத்திரனை எடுத்தனர். பி.யூ.சின்னப்பாவின் உத்தம புத்திரனை தழுவி எடுப்பது என ஸ்ரீதரும், சிவாஜியும் முடிவு செய்தனர். ஸ்ரீதர் திரைக்கதை, வசனம் எழுத, பிரகாஷ்ராவ் படத்தை இயக்கினார். வீனஸ் பிக்சர்ஸ் சார்பில் தனது நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜனுடன் இணைந்து ஸ்ரீதரே படத்தை தயாரித்தார். உத்தம புத்திரன் பட விளம்பரத்தை வெளியிட்ட அதே நேரம், எம்ஜிஆரும் அதே உத்தம புத்திரன் பெயரில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டார். எம்ஜிஆர் இரு வேடங்களில் நடிப்பதாக விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தனர். இது குழப்பத்தை ஏற்படுத்தியது. பிறகு எம்ஜிஆர் தனது உத்தம புத்திரன் அறிவிப்பை விலக்கிக் கொண்டார். உத்தம புத்திரனில் இடம்பெறும், என்னழகை கன்னியர்கள்... பாடலை மைசூர் பிருந்தாவனம் பூங்காவில் எடுத்தனர். அந்த நேரம் ஏராளமான பொதுமக்கள் படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்க குழுமியிருந்தனர். அதில் ஒரு பிரெஞ்ச் பெண்மணி, ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்ட் காட்சியை படமாக்குகையில் அதே கோணத்தில் அவரும் காட்சியை படமாக்குவதை கவனித்தார். 16 எம்எம் மில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சியை லண்டனுக்கு அனுப்பி, 35 எம்எம் மாக மாற்றி பார்த்த போது ரிசல்ட் அபாரமாக வந்திருக்கிறது. அவரும், ஸ்ரீதரும் அந்தப் பெண்மணியை அழைத்து விசாரித்துள்ளனர். அவரது கேமராவில் இருந்தது ஸும் செய்யக் கூடிய லென்ஸ். ஆச்சரியமாகிப் போன ஸ்ரீதரும், வின்சென்டும். அந்த லென்ஸை தங்களிடமிருந்த Paillard Bolex 16 mm கேமராவில் பொருத்தி, அருகில் நிற்கும் பத்மினியிடமிருந்து தொலைவில் நீரூற்று அருகில் மது அருந்திக் கொண்டிருக்கும் சிவாஜியை ஸும் செய்தனர். இன்றும் அந்தப் பாடலின் ஆரம்பத்தில் அருகில் இருக்கும் பத்மினியை காண்பிக்கும் கேமரா அப்படியே ஸும் ஆகி, நீரூற்று அருகில் அமர்ந்திருக்கும் சிவாஜியை காண்பிப்பதைப் பார்க்கலாம். இதுதான், இந்திய சினிமாவில் முதல்முதலாக ஸும் லென்ஸ் பயன்படுத்தி எடுக்கப்பட்ட காட்சியாகும். உத்தம புத்திரன் 1958 பிப்ரவரி 7 வெளியாகி மகத்தான வரவேற்பை பெற்றது. அதன் கதையும், மேக்கிங்கும், சிவாஜியின் நடிப்பும் பாராட்டப்பட்டன. பல திரையரங்குகளில் 100 நாள்களை கடந்து ஓடி லாபம் ஈட்டியது. சிவாஜியை கமர்ஷியல் ஹீரோவாக நிலைநிறுத்திய படங்களில் இதுவும் ஒன்று. #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #😍Old மூவிஸ்