#⛪ வேளாங்கண்ணி சர்ச் #⛪️➕புனித அந்தோனியார் பாடல்கள்🎶 தேவமாதாவைக் குறித்து நாங்கள் அனுசரிக்கத்தக்க பக்தி முயற்சிகளில் சுருக்கமானதும், இலகுவானதும் என்னவெனில் ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் மூன்று முறை “அருள் நிறைந்த மரியே வாழ்க” எனும் மங்கள வார்த்தைச் செபத்தைச் சொல்லுவதாகும். கூடுமாகில் முழந்தாளிட்டுச் சொல்லுவதே அதி உத்தமமாகும்.
மூன்று மங்கள வார்த்தைச் செபங்களுடன் “மாசில்லாமல் உற்பவித்த மரியாயே, உம்முடைய ஒத்தாசையைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்ற மனவல்லயச் செபத்தையும் சேர்ப்பது நலமாகும்.
மூன்று மங்கள வார்த்தைச் செபங்களுடன் பின்வரும் செபத்தைச் சேர்ப்பது புனித லிகோரியாருடைய நன்மதி. அதாவது, “மரியாயே, இந்த நாளில் சாவான பாவத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்” என்பதுவே அவர் சொல்லும் புத்திமதி. (இன்று பின்னேரம், இன்று இரவைக்கு என்று காலநேரத்துக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளலாம்.)
காலையும் மாலையும் மூன்று முறை மங்கள வார்த்தைச் செபம் சொல்லும் பக்தி முயற்சியைப் பயிற்றி வந்தவர்களுள் ஆகமுந்தியவர்களுள் ஒருவர் புனித பதுவை அந்தோனியார். தேவமாதாவின் கன்னிமையைச் சங்கிப்பதும், ஆன்மசரீரத் தூய்மையை அடைந்து கொள்வதுமே அவர் இப்படிச் சிபாரிசு செய்து வந்தமையின் விசேஷ நோக்கமாகும்.
இவரின் பின் பிற்பட்ட காலங்களிலே போட்மோறிசன் புனித லெயோனாட், இரவும் பகலும் சாவான பாவத்தை விலக்குவதற்கு வரப்பிரசாதம் அடையும்படி இந்தப் பக்தியை அனுசரிக்கும்படி செய்துவந்தார். அம்மட்டா, இப்பக்தி முயற்சியை அனுசரிப்பதில் தொடர்பான பிரமாணிக்கம் உள்ளவர்கள் இரட்சணியம் அடைவது நிச்சயமென்றும் அவர் போதித்து வருவார்.
புனித லிகோரியார் இப்பக்தி முயற்சியை அனுசரிக்கும்படி அடிக்கடி நல்ல ஆலோசனை கூறிவந்தது மாத்திரமன்று, அதை அனுசரிக்கும் வழக்கம் இல்லாதவர்களுக்கு அதனைப் பாவசங்கீர்த்தனத்தில் அபராதமாகவும் விதித்துவருவார்.
பெற்றாரும், ஆத்தும குருமாரும், தங்கள் பிள்ளைகளும் தங்களிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய வருபவர்களும் காலையும் மாலையும் இப்பக்தி முயற்சியைத் தவறாது அனுசரித்து வருகிறார்களோ என்பதைப் பற்றிக் கவலையுடன் கவனித்து வரவேண்டும் என்றும் மகா ஆத்திரத்துடன் புத்தி ஏவிவருவார்.
புனித லெயோனாட்டைப் போலவே இவரும் பாவிகளும் புண்ணியவாளரும், ஆடவரும் மாதரும், வாலரும் கன்னியரும், சிறுவர் சிறுமிகளும், சகலருமே இப்பக்தி முயற்சியை அனுசரித்து வரும்படியாக வற்புறுத்தி வருவார்.
## மங்கள வார்த்தைச் செபம் (பழைய வடிவம்)
அருள் நிறைந்த மரியே வாழ்க!
கர்த்தர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சியசிஷ்ட மரியாயே,
சர்வேசுவரனுடைய மாதாவே,
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும்
வேண்டிக்கொள்ளும். – ஆமென்.
## (புதிய வடிவம்)
அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க!
ஆண்டவர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசி பெற்றவரே.
தூய மரியே,
இறைவனின் தாயே,
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும்
வேண்டிக்கொள்ளும். – ஆமென்.