*‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்*
*அநீதிக்கு எதிராக தண்டனை கொடுக்கும் சிங்கப்பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஆட்டி’*
*“அந்த வார்த்தையை விஜய் பின்பற்றுகிறாரோ இல்லையோ நான் பின்பற்றுகிறேன்” ; ‘ஆட்டி’ பட தயாரிப்பாளரும் நடிகருமான இசக்கி கார்வண்ணன்*
*“நான் கமல் ரசிகன்.. ரஜினி நடித்த ஒரே ஒரு படம் மட்டுமே பார்த்திருக்கிறேன்” ; ‘ஆட்டி’ பட தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் ஓபன் டாக்*
*“மெசேஜ் சொல்லும் எந்த படமும் ஓடுவதில்லை” ; இசக்கி கார்வண்ணன் வெளிப்படை பேச்சு*
*“சீமானின் முகத்துக்கு நேராகவே அவரது தவறை சுட்டிக்காட்டிவிட்டு வெளியேறினேன்” ; அரசியல் பயணம் குறித்து இசக்கி கார்வண்ணன் பேச்சு*
சமீப காலத்தில் கருத்து ரீதியாக ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒருசேர வரவேற்பைப் பெற்ற ‘பெட்டிக்கடை’, தமிழ்க் குடிமகன், ‘பரமசிவன் பாத்திமா’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியவர் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். ஒரு நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இவர் தற்போது லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் ‘ஆட்டி’.
இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
“எங்கள் குலத்தில் பெண்களே முதலானவர்கள்” என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.
பழந்தமிழர் வரலாற்றில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற்றதைப் பற்றியும், அதில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி வந்ததைப் பற்றியும், அவர்கள் எதிர்நோக்கிய பாலியல் சீண்டல்களையும், அதைக் கையாண்ட விதம் பற்றியும் பேசுகிறது.
சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ இப்படத்தை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது. ஜூன் 12-ஆம் தேதி ‘ஆட்டி’ படம் வெளியாக உள்ள நிலையில், படம் குறித்தும் தனது சினிமா, அரசியல் மற்றும் வியாபார பயணங்கள் குறித்தும் மனம் திறந்துள்ளார் இசக்கி கார்வண்ணன்.
“கிராமத்தில் இருந்து இவனை வெளியே அனுப்பி விடுங்கள் என்று ஊரே பஞ்சாயத்து கூட்டி ஒருவனை அனுப்பி வைக்கும் ஒரு சினிமா கதை போலத்தான் நான் மும்பைக்கு பயணமானேன். மும்பை சென்ற பிறகுதான் புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகமானது. கதை எழுதவும் தொடங்கினேன். ஆனால் தொடர்ந்து கதைகளாக எழுதுவதற்குப் பதிலாக எழுதிய கதையை சினிமாவாக எடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் என்னை உந்தித்தள்ளியது. அப்படி சினிமாவிற்கு கிளம்பி வருவதற்குள் தொழிலதிபர் என்கிற அவதாரம் எடுக்க வேண்டிய சூழல் உருவானது.
நேரடியாகவும் மறைமுகமாகவும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை கொடுக்கும் ஒரு லாஜிஸ்டிக் நிறுவனத்தை கடந்த 25 வருடங்களுக்கு மேலாக திறம்பட நடத்தி வருகிறேன். இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னைக்கு வந்த நான், தொழிலதிபராக முதலில் படத் தயாரிப்பில் இறங்கி சினிமாவைக் கற்றுக்கொள்ள முடிவு செய்து ‘முதல் கனவே’ என்கிற படத்தைத் தயாரித்தேன். இந்தப் படத்தை இயக்குவதற்கு ஒரு நல்ல இயக்குநர் வேண்டும் என்று இயக்குநர் சங்கத்திற்கே சென்று வேண்டுகோள் வைத்தேன். இந்திய சினிமாவில் மட்டுமல்ல, உலக சினிமாவிலேயே இப்படி ஒரு இயக்குநர் தேடுதலை நடத்தியவன் நானாகத்தான் இருக்கும்.
இப்போது பிரபலமாக இருக்கும் நடிகை ஹனி ரோஸை அந்தப் படத்தில்தான் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகப்படுத்தினேன். அந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதற்கடுத்து ‘அதே நேரம் அதே இடம்’ என்கிற படத்தை ஜெய்யை கதாநாயகனாக வைத்து தயாரித்தேன்.
அப்படியே டைரக்ஷன் கற்றுக் கொண்டதால் அதன் பிறகு ‘பகிரி’, ‘பெட்டிக்கடை’, ‘தமிழ்க் குடிமகன்’, ‘பரமசிவன் பாத்திமா’ ஆகிய படங்களை நானே தயாரித்து இயக்குநராகவும் பொறுப்பேற்றேன். இதோ இப்போது ‘ஆட்டி’ திரைப்படத்தை தயாரித்துள்ளேன். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறேன். அடுத்து இன்னொரு படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறேன்.
இத்தனை வருட சினிமா பயணத்தில் சினிமா வேறு, பொது வாழ்க்கை வேறு என்பதை இப்போதுதான் பிரித்துப் பார்க்க பழகி இருக்கிறேன். காரணம், இதற்கு முன்பு நான் எடுத்த நான்கு படங்களும் அதன் மூலம் மக்களுக்கு ஏதாவது மெசேஜ் சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் எடுக்கப்பட்டது.
இங்கே சினிமா என்பது ஒரு பொழுதுபோக்குதான். கருப்பு-வெள்ளை காலத்திலிருந்து மெசேஜ் சொல்லும் படங்கள் ஒருபோதும் ஓடியது இல்லை. இதைக் கற்றுக்கொள்வதற்கு எனக்கு நான்கு படங்களும் 10 கோடி செலவும் தேவைப்பட்டது.
இன்று சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் தரமாக எடுக்கப்பட்டாலும், யார் ஹீரோ என்றுதான் முதலில் ரசிகர்கள் பார்க்கிறார்கள். என்னுடைய படங்களில் ஜெய், விமல், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தாலும் கூட அவர்கள் மிகப்பெரிய ஹீரோக்கள் அல்ல. சமுத்திரக்கனியை வைத்து மெசேஜ் சொல்லும் படம் எடுத்தேன்.. வரவேற்பைப் பெறவில்லை.
இன்றைக்கு திரையரங்குகள் கிடைப்பதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. அதற்கு காரணம், சினிமாவிலிருந்து யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு செல்லலாம். ஆனால் அரசியலில் இருப்பவர்கள் சினிமாவிற்கு வரக்கூடாது. குறிப்பாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து வரும்போது திரையரங்குகளில் அதிகார துஷ்பிரயோகம் நடக்க ஆரம்பித்துவிடுகிறது.
என்னுடைய ‘தமிழ்க்குடிமகன்’ பட ரிலீஸ் சமயத்தில் வேறு பெரிய படங்கள் எதுவும் இல்லாத நிலையில்கூட எனக்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. காரணம், அப்போது ஹிந்தி படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. கிட்டத்தட்ட 75 சதவீதத்திற்கும் அதிகமான திரையரங்குகளை அந்தப் படத்திற்கு ஒதுக்கினார்கள். அதில் பின்னணியில் ஒரு அரசியல்வாதி நடத்தும் சினிமா நிறுவனம் இருந்தது.
யாரையும் கட்டாயப்படுத்தி படம் பார்க்க வைக்க முடியாது. என்னையே எடுத்துக் கொண்டால் நான் அடிப்படையில் கமல் படங்களை விரும்பி பார்ப்பவன். ஆனால் ரஜினிகாந்த் நடித்த தனிக்காட்டு ராஜா என்கிற ஒரே ஒரு படத்தை மட்டுமே பார்த்திருக்கிறேன்.. அதற்கு பிறகு அவரது எந்த படத்தையும் நான் பார்த்ததில்லை ஆனால் இன்று படம் பார்க்க வருபவர்களுக்கு வேறு வாய்ப்பே தரவில்லை என்றால், இருப்பதைத்தானே அவர்கள் பார்த்தாக வேண்டும் ?
இதனாலேயே பெரும்பாலானவர்கள் திரையரங்குகளுக்கு வருவதையே நிறுத்திவிட்டார்கள். ஒரு காலத்தில் தியேட்டர் அதிபர்களின் கையில் சினிமா இருந்தது. நல்ல படங்களை மட்டுமே தேர்வு செய்து திரையிட்டார்கள். இப்போது அது அரசியல்வாதிகள் கையில் போய்விட்டது. எத்தனையோ பேர் ஒரு படத்துடனே மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பி விடுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே தாக்குப்பிடித்து தொடர்ந்து படங்களை எடுக்கிறார்கள். அதில் நானும் ஒருவன்.
பிரபலமானவர்களை வைத்து படம் எடுக்கும்போது சில சங்கடங்களையும் எதிர்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. ‘தமிழ்க் குடிமகன்’ படத்தைத் தயாரிக்கும் போது நடிப்பதற்காக வந்த இயக்குநர் சேரன், அந்தப் படத்தின் கதையின் போக்கையே மாற்றிவிட்டதில் எனக்கு ரொம்பவே வருத்தம். அவரை நடிகராகத் தான் அழைத்தோம்; ஆனால் அவரோ இயக்குநர் மனநிலையுடன் வந்தார். கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி அவரது செயல்பாடுகள் இல்லை என்பதால் அந்தப்படத்திற்கு ஒரு இயக்குநராகவும் அவர் நடந்துகொள்ளவில்லை. நடிகராகவும் நடந்துகொள்ளவில்லை.
‘ஆட்டி’ திரைப்படம் போதிய திரையரங்குகள் கிடைக்காமையால் இரண்டு முறை அதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. ஒரு முறை எதிர்பாராமல் ‘காந்தாரா 2’ மற்றும் ‘பைசன்’ படங்கள் வெளியான சமயத்தில் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்தோம். இப்போது ‘கருப்பு’ மற்றும் ‘பிளாஸ்ட்’ ஆகிய படங்கள் அதிக அளவு திரையரங்குகளில் ஓடுவதால் ‘ஆட்டி’ படத்தை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பட துவக்கத்தின் போது அனைவரிடமும் காணப்படும் இணக்கம், ஒரு படம் முடிந்து ரிலீஸ் சமயத்தின் போது இருப்பதில்லை. கடைசியில் தயாரிப்பாளர் மட்டுமே தனித்து விடப்படுகிறார். அந்த பொருளாதார வலியை அவர் மட்டுமே தாங்க வேண்டி இருக்கிறது. இப்படி பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடக்கின்றன.
இன்னொரு பக்கம் நடிகர்கள் சம்பளம் ஒரு படத்திலேயே இரட்டிப்பாக ஏறிவிடுகிறது. வரும்போது சினிமாவில் நடிகனாக சாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு சினிமா மீதான காதலோடு வருகிறவர்கள், வெற்றியைப் பார்த்ததும் அடுத்த படத்திலிருந்து சம்பாதிக்க வேண்டும் என்கிற மனநிலைக்கு மாறிவிடுவதுதான் இதற்கு காரணம். ஹீரோக்கள் சம்பளம் கூட்டியதால் குணச்சித்திர நடிகர்களும் பல மடங்கு சம்பளத்தை ஏற்றி விட்டார்கள். விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் போல படங்களை தயாரிக்கும் நடிகர்களுக்கு இந்த வலி நன்றாகவே தெரியும்.
இத்தனை வருடம் தமிழ் சினிமாவில் தமிழ் தேசிய படங்கள் எதுவுமே வரவில்லை. தமிழ் தேசிய ஆர்வலர்கள் வந்திருந்தாலும் கூட அவர்களும் கமர்ஷியல் படங்களில்தான் கவனம் செலுத்துகிறார்கள். காரணம், இது போன்ற படங்களைப் பார்ப்பதற்கு இங்கே ரசிகர்கள் விரும்புவதில்லை.
இயக்குநர் வெற்றிமாறன் கூட தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்தான். ஆனாலும் கூட அவரே அப்படிப்பட்ட படங்களை எடுக்கவில்லை. சரவணா ஸ்டோர் அண்ணாச்சி மிகப்பெரிய பணக்காரர். அவர் சாதாரண பட்ஜெட் படங்களில் நடித்தால் பெரிய அளவு வரவேற்பு பெறும். ஆனால் அவரும் ரஜினி, விஜய் ரேஞ்சுக்கு நடிக்க வேண்டும் என்று தேர்வு செய்து 50 கோடி வரை செலவு செய்து படம் எடுக்கிறார்.
ஒரு கட்டத்தில் அரசியலிலும் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் நாம் தமிழர் கட்சியில் சீமானுடன் இணைந்து பணியாற்றினேன். சீமானைப் பொறுத்தவரை அசாத்தியமான திறமை கொண்டவர். ஆனால் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாதவர். அதனால்தான் அவரால் வெல்ல முடியவில்லை. “தனி மனிதனாக கட்சியை சுமக்காமல், அனைவரும் சேர்ந்து சுமக்கலாம் என்று கூறினேன் சேர்ந்து நின்று ஜெயித்தால் தலைமைப் பதவியே உங்களுக்குத்தான்” என்றோம். ஆனால் அவரோ “தனியாகத்தான் நிற்பேன்” என்றார். ஆனால் அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதை அவரிடமே தைரியமாக சொல்லிவிட்டு வெளியே வந்த முதல் ஆள் நான்தான். இத்தனைக்கும் சீமானுக்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பல விஷயங்களில் ரொம்பவே ஆதரவாக இருந்தவன் நான்.. காரணம், சீமான் தோற்றுவிட்டால் அது தமிழ்த் தேசியம் தோற்றுவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடும் என்று நினைத்தேன். அது போலத்தான் இப்போது நடந்திருக்கிறது.
சினிமாவுக்காக வந்தவன் நான். 2009-க்கு பிறகு சூழல் என்னை அரசியலிலும் இழுத்துவிட்டது. அந்த வலிதான் இப்போது எனக்கு அதிகமாக இருக்கிறது. இதனால். குடும்பத்தை, பொருளாதாரத்தை இழந்திருக்கிறேன். அந்த கோபம் இப்போதும் என்னிடம் இருக்கிறது.
விஜய் அரசியலில் எந்த அனுபவமும் இல்லாதவர். அவர் கட்சி துவங்கி இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. ஆனாலும் மற்ற எல்லோருமாக சேர்ந்து அவரை எதிர்த்தது தான், ஒரு மாற்றத்தை விரும்பிய மக்கள் மனதில் அவரைப் பற்றிய ஒரு இரக்கத்தை உண்டாக்கிவிட்டது.
தப்பு செய்பவர்களுக்கு, பெண்களுக்கு எதிராக அநீதி இழைப்பவர்களுக்கு பெண்களே தெய்வங்களாக மாறி தண்டனை கொடுக்கும் கருத்தை மையமாக வைத்து தான் இந்த ‘ஆட்டி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதையெல்லாம் எந்தப் பெண்கள் செய்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. சொல்லப்போனால் தற்போது உருவாக்கி இருக்கிறார்களே ‘சிங்கப்பெண் படை’, இந்த அம்சத்தைத்தான் என்னுடைய படத்தில் சொல்லி இருக்கிறேன்.
இதனுடைய நீட்சியாக இரண்டாம் பாகமும் இருக்கிறது. முற்காலத்தில் நம் பெண்கள், இளம் கன்னிகள் எப்படி எல்லாம் இருந்திருக்கிறார்கள் என்கிற தாக்கத்தை இந்தப்படம் பெண்களிடம் ஏற்படுத்தும்.
முந்தைய ‘தமிழ் குடிமகன்’, ‘பரமசிவன் பாத்திமா’ படங்கள் படம் பார்த்தவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். ‘ஆட்டி’ திரைப்படமும் அதுபோல ஒன்றுதான்.
இதுவரைக்கும் என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்ததில்லை. எனக்கென ஒரு வெற்றி வரும்போதுதான் அப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என முடிவு செய்து வைத்திருக்கிறேன். இப்போது கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். முதலில் கரை சேர வேண்டும்.
சினிமாவில் பயணிக்க வேண்டும் என்பதுதான் லட்சியம் என்றாலும், அரசியலையும் என்னால் விட முடியாது. அதே சமயம் இப்போதைய சூழலில் எந்தக் கட்சியிலும் போய் சேரும் எண்ணமும் இல்லை. எந்தக் கட்சியைப் பார்த்தாலும் அது இன்னொரு திராவிடக் கட்சி போலத்தான் காட்சியளிக்கிறது.
தற்போது சுகா இயக்கத்தில் ‘தேனப்பன் சைக்கிள் மார்ட்’ என்கிற படத்தைத் தயாரித்திருக்கிறேன். சுகா ரொம்பவே தன்மையான மனிதர் இதன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இசைஞானியின் இசையமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து இலங்கையில் நடைபெறும் ஒரு காதல் கதையை மையப்படுத்தி இன்னொரு படத்தை உருவாக்க இருக்கிறேன்..
தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என இதோ ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து வருகிறேன். குறிப்பாக ஒரு இயக்குநராக எனக்கான இடத்தை அடைய வேண்டிய போராட்டத்தில் இருக்கிறேன்.
உறவினர்கள், நண்பர்கள் கூட “எதற்கு இந்த போராட்டம்?” என்று கேட்பார்கள். ஆனால் விஜய் ஒரு படத்தில், “ஒரு தடவை முடிவு செய்துவிட்டால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்பார்.. அதை நிஜத்தில் அவர் செய்கிறாரோ இல்லையோ, நான் பின்பற்றி வருகிறேன்” என்று கூறினார்.
#👩எனக்கு பிடித்த நடிகை #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥