திருவாரூரில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில் அமர்ந்து கொண்டிருந்தேன். இரவு பத்து மணிக்கு மேல் பேருந்து மயிலாடுதுறை பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தது. 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் எனக்கு அருகில் வந்து உட்கார்ந்தார்.
ஏதோ சில காரணங்களால் பேருந்து சிறிது நேரம் நின்று கொண்டிருந்தது. பொதுவாகப் பேருந்தில் பயணிக்கும் போது ஏதாவது ஒரு வாராந்திர புத்தகத்தை வாங்கிப் படிப்பது என்னுடைய வழக்கமாக இருந்த காலக் கட்டம் அது. என்னை வழியனுப்ப வந்த என் மாமனார் தண்ணீர் பாட்டிலுடன் சக்தி விகடன் புத்தகத்தை வாங்கிக் கொடுத்திருந்தார். அதை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
பேருந்து சில நிமிடங்களில் நகரத் தொடங்கியது. அருகிலிருந்தவர் புன்னகையுடன் "தம்பிக்கு கடவுள் நம்பிக்கை ஜாஸ்தி போல.." என்றார்.
நானும் சிரித்துக் கொண்டே "அப்படி எல்லாம் இல்லைங்க.. இந்த ராசி பலன் மட்டும் அப்பப்ப பார்த்துக்குவேன்.." என்றேன்.
சரி தான்.. அப்ப உங்களுக்கு நம்பிக்கை இருக்குன்னு தான அர்த்தம்..
புன்னகையுடன் புத்தகத்தை அவரிடம் கொடுக்க, அவரோ "எனக்கெல்லாம் வீட்டுக்கே தபால்'ல வந்துடும்.. வந்த உடனே நானும் என் மனைவியும் படிச்சிடுவோம்.." என்றார்.
"நல்லதுங்க.." என்றபடி சக்தி விகடனை என்னுடைய பேக்கிற்குள் வைத்து விட்டு, புஷ்-பேக் சீட்டை லேசாகச் சாய்த்து விட்டபடி கண்களை மூடிக் கொண்டேன். அவர் ஏதாவது பேச்சை ஆரம்பிக்க, அது பிறகு சீர்காழி சிதம்பரம் பண்ருட்டி வடலூர் வரை தொடர்ந்தால் என்ன செய்வது என்ற பயம் தான் காரணம்.
தம்பி.. தம்பி..
என்னங்க..
தூக்கம் வருதுங்களா?..
ஆமாங்க..
சரி தூங்குங்க..
பேருந்தில் அணைந்து விளக்குகளையும் அனைத்து விட்டார்கள். சில வினாடிகளுக்குப் பிறகு அவராகவே மீண்டும் "தம்பி.. இந்தக் கர்மா பத்தி என்ன நினைக்குறீங்க?.." என்றார்.
"இதோ.. உன் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்குறேன் பாரு.. இது தான் அந்தக் கருமம் பிடிச்ச கர்மா.." என்று நினைத்துக் கொண்டு "சார்.. தப்பா எடுத்துக்காதீங்க.. எனக்குத் தூக்கம் வருது.." என்றேன்.
சரிங்க தம்பி..
சட்டென்று அவருடைய முகம் வாட, எனக்கு என்னவோ போல இருந்தது.
சரி சொல்லுங்க சார்.. என்னமோ சொல்ல வந்தீங்களே?..
இல்ல இந்தக் கர்மா மேல எல்லாம் நம்பிக்கை இருக்கா?..
இருக்கு சார்.. நிறையவே இருக்கு..
பேருந்திற்குள் விளக்குகள் அனைத்தும் அனைக்கப்பட்டு ஜன்னல் கண்ணாடி வழியாக அவ்வப்போது வெளிச்சம் உள்ளே வந்து கொண்டிருந்தது.
சாமி கும்பிட்டா இந்த கெட்ட கர்மா எல்லாம் குறையுமா தம்பி?..
அப்படித் தான எல்லாரும் சொல்றாங்க..
தம்பி.. நான் அரசாங்கத்தோட உள்கட்டமைப்புப் பிரிவு துறையில அதிகாரியா வேலை செய்திருக்கேன்.. கிட்டத்தட்ட 36 வருஷ சர்வீஸ்.. கை நிறையப் பென்சன் வாங்குறேன்.. ஆனா மன நிறைவே இல்ல..
நான் அமைதியாக அவர் பேசுவதைக் கேட்டபடி இருந்தேன்.
நான் வேலை செய்த காலத்துல ஒரு பைசா கூட லஞ்சம் வாங்குனதே கிடையாது.. எனக்கு ஒரு பொண்ணு ஒரு பையன்.. அழகான அன்பான மனைவி.. எல்லாமே திருப்தியா அமைஞ்சது எனக்கு.. நான் வேலை செய்த துறையில, எந்தவொரு திட்டமும் அமைச்சரவையோட (Cabinet) இறுதி ஒப்புதலுக்குப் போறதுக்கு முன்னாடியே, அதோட மதிப்பீடு, அதுக்கான தேர்வு செய்யப்படுற இடம், அரசுத்துறையில ஒருசிலருக்கு மட்டும் தான் தெரியும்.. அதுல நானும் ஒருத்தன்..
விஷயம் வெளிய கசியுறதுக்கு முன்னாடியே எங்களுக்குத் தெரிஞ்சிடும்.. நாங்களும் உடனே அந்த லொகேஷன்'ல இருக்குற ஒரு ஏக்கர் ரெண்டு ஏக்கர்'ன்னு வாங்கிப் போட்டு, திட்டம் அறிவிச்ச கொஞ்ச காலத்துலயே, அந்த இடத்தை நல்ல ரேட்டுக்கு வித்துடுவோம்.. அதாவது விஷயம் தெரிஞ்சு பத்து லட்சத்துக்கு வாங்குன இடம், ரெண்டு வருஷத்துல நாற்பது ஐம்பது லட்சத்துக்குப் போகும்..
"அட ஒங்கொக்க மக்கா.." சட்டென்று என் மனதில் இருந்த சலிப்பு முழுவதுமாக நீங்கி விழிப்புணர்வு வந்து விட்டது. என் ஆர்வத்தைப் புரிந்து கொண்டவரை போல மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்த அந்த நபர் மேலும் பேசினார்.
நான் யாரையும் ஏமாத்தலையே.. அன்னைக்கு ரேட்'ல தான இடத்தை வாங்கிப் போட்டேன்.. இப்படித் தான் தம்பி நானும் நினைச்சுகிட்டு இருந்தேன்.. வர்ற லாபத்துல ரெண்டு சதவிகிதம் குலதெய்வ கோவிலுக்குக் கொடுத்துடுவேன்.. வருஷா வருஷம் கிடா வெட்டு அது இதுன்னு அமர்களப்படுத்துவேன்.. எங்க ஊர் பக்கம் இருக்குற பாதிக் கோவில்கள்'ல ஏதாவது ஒரு மார்பிள் கல்லுல என்னோட பெயர் இருக்கும்..
நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
திருப்பதி திருச்செந்தூர் எல்லாக் கோவிலுக்கும் போவோம், ஸ்பெஷல் தரிசனம் அன்னதானம் எல்லாம் அடிக்கடி பண்ணுவோம்..
சிறிது நேரம் ஜன்னலுக்கு வெளியே பார்வையை ஓட விட்டவர் "ஒரு முறை எங்க ஊர்'ல புதுப் பஸ் ஸ்டேண்ட் கட்ட இடம் பார்த்துகிட்டு இருந்தாங்க நம்ம அரசாங்கம்.. நான் அந்தப் பஸ் ஸ்டேண்ட்அமைய போற இடத்துக்கு 100 மீட்டர் தொலைவுல ரெண்டு கிரவுண்ட் இடத்தை வாங்கிப் போட்டேன்.. அந்த இடத்தை வித்த அம்மாவுக்கு ஒரே மகன் அவன் சிங்கப்பூர்'ல இருந்தான்.. இடத்தை அவன் வர்ற வரைக்கும் விக்க வேண்டாம்'னு சொல்லி இருந்தான்.. அவனோட மனைவியும் பிரசவத்துக்குப் போயிருந்தா போல.. இடத்தை விக்கப் பவர் ஆப் அட்டார்னி அந்த அம்மா பெயர்'ல இருந்தது.. ஏதோ ஆத்திர அவசரத்துக்கு இடத்தை விக்க வேண்டி வந்தா என்ன பண்றதுன்னு, அந்த மகன் அம்மா பெயர்'ல பவர் ஆப் அட்டார்னி கொடுத்திருப்பான் போல..
நான் அந்த அம்மா கிட்ட அப்படி இப்படிப் பேசி, கூடக் காசு தர்றேன்னு சொல்லி இடத்தை வாங்கிட்டேன்.. நாலு மாசத்துல அந்த இடத்துக்குப் பக்கத்துல அரசாங்கம் புதுப் பஸ் ஸ்டேண்ட் கட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. இடத்தை வித்த அந்த அம்மாவுக்கு ஒன்னும் புரியல.. சிங்கப்பூர்'ல இருந்து வந்த மகனுக்கு விஷயம் தெரிஞ்சு என்கிட்ட வந்து சண்டை போட்டான்..
மீண்டும் பேருந்தின் ஜன்னல் வழியே பார்வையை ஒட விட்டவர், பிறகு என்னைப் பார்த்து "அரசாங்க அதிகாரி.. என் கூடவே ஆளுங்க வேற இருப்பாங்க.. அவனால என்னை எதிர்த்துச் சண்டை போட முடியல.. நான் பத்து மடங்கு லாபத்துக்கு அந்த இடத்தை வேற பார்ட்டிக்கு வித்துட்டேன்.." என்றார்.
அந்த அம்மாவோட மகன் கோபத்துல அந்த அம்மாவை அடிச்சு விரட்டிட்டான்.. அந்த அம்மா என் வீட்டுக்கிட்ட வந்து அழுதுச்சு.. "இப்படி ஏமாத்திட்டீங்களே ஐயா.." அப்படின்னு அழும்.. என் வீட்டு வேலைக்காரங்க அந்த அம்மாவை விரட்டி விடுவாங்க..
அங்கங்க சாப்பிட்டுக்கிட்டுப் பித்துப் பிடிச்சு திரிஞ்ச அந்த அம்மா ஆக்சிடெண்ட்'ல செத்து போச்சு..
என் மனதை ஏதோ ஒன்று பிசைவதை போல இருந்தது.
சில வினாடிகள் அமைதியாகத் தலையைக் குனிந்தபடி இருந்த அவர், பிறகு சட்டென்று "என் மகன் அமெரிக்கா போகணும்'னு ஆசைப்பட்டான்.. அனுப்பி வைச்சேன்.. அங்கேயே ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டான்.. அவனுக்குக் குழந்தையும் பிறந்தது.. என் பொண்ணையும் அமெரிக்கா அனுப்பி வைச்சேன்.. அவளும் கல்யாணம் குழந்தைன்னு செட்டில் ஆகிட்டா.. ரிட்டையர்மெண்டுக்கு பிறகு நானும் என் மனைவியும் நாலைஞ்சு தடவை அமெரிக்கா போயிட்டு வந்தோம்..
என் மகனோட மகன், அதாவது என் பேரனுக்கு ரெண்டு வயசாகும் போது தான் அவனுக்கு ஆட்டிசம் இருந்தது தெரிய வந்தது.. நிறையச் செலவு பண்ணி பார்த்தான் என் மகன்.. ஒரு கட்டத்துல அவனோட மனைவி அவனை விட்டு விலகி போயிட்டா.. ரெண்டு வருஷம் என் மகன் என் பேரனோட வந்து இங்க இருந்தான்.. அப்புறம் பேரனை எங்க கிட்டயே விட்டுட்டு அவனும் அமெரிக்கா போயிட்டான். ரெண்டு மூனு மாசத்துக்கு ஒரு தடவை போன் பண்ணுவான்.. அவ்வளவு தான்..
என் மகளுக்கும் விவாகரத்து ஆகிடுச்சு.. ஏதேதோ காரணம் சொல்றா.. அமெரிக்காவுல இருக்குற என் நண்பரோட மகன் சொல்றான்.. என் மக யாரு கூடவோ கல்யாணம் பண்ணாமலே தங்கியிருக்காளாம்..
சட்டென்று உடைந்து அழுதார். நான் ஒருவித அசௌகரியத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தேன். பேருந்தில் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. ஒருசிலர் திரும்பி பார்த்து விட்டு மீண்டும் திரும்பி கொண்டார்கள்.
சார்.. அழாதீங்க..
தன் இரண்டு கரங்களால் முகத்தைத் துடைத்துக் கொண்டவர், "இப்ப தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என் மனைவிக்குப் பக்கவாதம் வந்துடுச்சு.. மாசத்துக்கு ஐம்பதாயிரம் சம்பளம் கொடுத்து என் பேரனையும் மனைவியையும் பார்த்துக்க ரெண்டு ஆள் வைச்சிருக்கேன்.. அவங்களும் பாவம் நல்லா தான் பார்த்துக்குறாங்க.." என்றார்.
இப்ப எங்க சார் போய்கிட்டு இருக்கீங்க?..
அவர் கண்கள் கலங்க புன்னகையுடன் "ஒரு அம்மா ஆக்சிடெண்ட்'ல செத்து போச்சுன்னு சொன்னேன் தான.. அவங்க மகன் இப்ப சென்னையில இருக்கானாம்.. ஏதோ கஷ்டத்துல இருக்கான்னு கேள்விப்பட்டேன்.. அதான் அவன் கிட்ட இருபது லட்ச ரூபா செக்'கை கொடுத்துட்டு வரலாம்னு போய்கிட்டு இருக்கேன்.." என்றார்.
நல்லதுங்க..
என்னமோ தம்பி.. நான், என் மனைவி, மகன், மகள், எல்லாரும் சிங்கப்பூர், மலேசியா அப்புறம் ஒரு முறை லண்டனுக்குக் கூடப் போயிட்டு வந்திருக்கோம்.. எல்லா ஸ்டார் ஹோட்டல்'லயும் திருப்தியா சாப்பிட்டிருக்கோம்.. ஆனா எந்த நினைவுகளும் சந்தோஷத்தை தரல தம்பி.. வயசான பிறகு ஒரு இடத்துல உட்காருவோம் தான.. அப்ப நம்ம மனசாட்சி நம்மள குடைய ஆரம்பிக்கும் பாருங்க.. ஐயோ.. அது ரொம்ப வலிக்கும்..
ஒரு பக்கம் எழுந்து நடமாட முடியாத மனைவி.. இன்னொரு பக்கம் பத்து வயசாகியும் குழந்தையாவே இருக்குற பேரன்.. பெத்த மகனும் மகளும் எப்படி இருக்காங்கன்னு தெரியாத கொடுமை.. இதுக்காகவா நான் ஓடி ஓடி சம்பாதிச்சேன். ரொம்பப் புத்திசாலித்தனமா சொத்து சேர்த்தேன்?..
பேருந்து விக்கிரவாண்டியை தாண்டி திண்டிவனம் நெடுஞ்சாலையில் வேகமெடுக்க ஆரம்பித்தது.
சரிங்க.. மனசை தளர விடாதீங்க..
தம்பி.. கொஞ்சம் நினைச்சு பாருங்க.. எனக்கு இடத்தை வித்த அம்மாவை, அவங்க பெத்த மகனே வீட்டை விட்டு விரட்டிட்டான்.. அந்த அம்மா மனசு எப்படித் துடிச்சிருக்கும்.. வயசான காலத்துல பித்துப் பிடிச்சுத் தெருத்தெருவா சுத்திகிட்டு இருக்கும் போது கூட, என்னை எங்கயாவது ரோட்டுல பார்த்தா கையெடுத்து கும்பிட்டு "ஐயா சாமி.. என் பேரனை தொட கூட விட மாட்டேங்குறாங்க சாமி.. குடுத்துடுங்க சாமி.." அப்படின்னு அழும்..
இதைச் சொல்லும் போது அவர் உடல் அளவுக்கு அதிகமாக நடுங்கியது.
அவரைத் தேற்ற நினைத்த நான் "சரி விடுங்க.. அப்படிப் பார்த்தா பெத்த அம்மாவை விரட்டியடிச்ச அந்த மகனும் தான தப்பு பண்ணியிருக்கான்.." என்றேன்.
இங்க தான் தம்பி கர்மா வேலை செய்யுது.. பாவம் ஒரு சங்கிலி தொடர் மாதிரி.. அந்த அம்மாவோட மகனும் பைக்'ல இருந்து கீழ விழுந்து கால் துண்டாகிடுச்சு.. இப்ப சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கான்.. நான் அந்த இடத்தை அன்னைக்கு வாங்காம இருந்திருந்தா அந்த அம்மாவுக்கு இந்த நிலைமை வந்திருக்காது தான.. அந்த அம்மா மகன் எல்லாரும் நல்லா இருந்திருப்பாங்க தான..
நான் அமைதியாகப் பேருந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன்.
இத்தனைக்கும் அந்த அம்மா என்னைத் திட்டுனதில்ல.. சாபம் விட்டதில்ல.. ஏமாத்திட்டீங்களே ஐயா.. அப்படின்னு ஈனஸ்வரத்துல புலம்பும்.. நான் கோடி கோடியா சம்பாதிச்சு இருக்கேன், ஆனா இப்ப அதெல்லாம் ஒரு மயிருக்கும் பிரயோஜனப்படல..
அதிகாலை ஐந்து மணிக்கு அவர் மறைமலை நகரில் இறங்கி கொண்டார். அதன் பிறகு பேருந்து நிலையத்தில் இருந்து வீடு வந்து சேரும் வரை அவர் கூறிய வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
மண்ணை வாரி தூத்தல.. காது கூச கெட்ட வார்த்தையால திட்டல.. என் பொண்டாட்டி புள்ளைங்க மேல சாபம் விடல.. ஆனா என்னைப் பார்த்து வெம்பி அழுதா அந்தக் கிழவி.. அவளோட ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் நான் பல சொட்டு இரத்தம் சிந்திக்கிட்டு இருக்கேன்.. அதான் தம்பி கர்மா.. உடம்புல ஒட்டுத் துணி இல்லாம நெருப்புல புரண்டு பரிகாரம் பண்ணாலும், என்னால அநியாயமா பாதிக்கப்பட்டு அழுதவனோட கண்ணீருக்கு நானும் என் வம்சமும் பதில் சொல்லியே ஆகணும்.. நமசிவாய🤟🤘
#கர்மா 🕉️