Makkal Mugam
530 views
8 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 *சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜு – இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் இணைந்து பேட்டி* இராமநாதபுரம், மே 23- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜு மற்றும் தமிழக வெற்றி கழக இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜு, தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் தனக்கு முக்கியமான பொறுப்பையும், மக்கள் பணியாற்ற ஒரு சிறந்த வாய்ப்பையும் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். அந்த நம்பிக்கைக்கு ஏற்ப மக்கள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்றும் கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், இராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி இன்றி மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் உடனடியாக அந்த செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுத்தார். இயற்கை வளங்களை சேதப்படுத்தும் சட்டவிரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுகள் பொதுமக்களின் உடல்நலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக கூறினார். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் உருவாகும் அபாயம் நிலவி வருவதால், சாயப்பட்டறை கழிவுகளை முறையாக சுத்திகரித்து மட்டுமே வெளியேற்ற வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். ராமநாதபுரம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த பகுதிகளை தூய்மையாகவும், குப்பைகள் தேங்காத வகையிலும் பராமரிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் உடனடியாக அந்த செயல்களை கைவிட வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான தண்டனைகள் எதிர்நோக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். இளைஞர்கள் போதை பழக்கங்களிலிருந்து விலகி கல்வி மற்றும் நல்ல முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க முழுமையாக பாடுபடுவேன் என்றும் உறுதியளித்தார். இந்த பேட்டியின் போது இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன், அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.