Diraviam Jayaraj
5K views
4 days ago
பைபிள் வாசகங்கள்: மே 2 : முதல் வாசகம் நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 44-52 அடுத்து வந்த ஓய்வுநாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடிவந்தனர். மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப் பழித்துரைத்தார்கள். பவுலும் பர்னபாவும் துணிவுடன், “கடவுளின் வார்த்தையை உங்களுக்குத்தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித் தள்ளி நிலைவாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம். ஏனென்றால், ‘உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்’ என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்” என்று எடுத்துக் கூறினார்கள். இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட் டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது. ஆனால் யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள். அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு இக்கோனியாவுக்குச் சென்றார்கள். சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். ஆண்டவரின் அருள்வாக்கு. மே 2 : பதிலுரைப் பாடல் திபா 98: 1. 2-3ab. 3cd-4 (பல்லவி: 3c) பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். அல்லது: அல்லேலூயா. 1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி 2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ab இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி 3cd உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 8: 31b-32 அல்லேலூயா, அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. மே 2 : நற்செய்தி வாசகம் என்னைக் காண்பது, தந்தையைக் காண்பது ஆகும். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 7-14 அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி: “நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்” என்றார். அப்போது பிலிப்பு அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார். இயேசு அவரிடம் கூறியது: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால், என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்.” ஆண்டவரின் அருள்வாக்கு. ----------------------------------------------------------------- “வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்” பாஸ்கா காலத்தின் நான்காம் வாரம் சனிக்கிழமை I திருத்தூதர் பணிகள் 13: 44-52 திருப்பாடல் 98: 1, 2-3ab, 3cd-4 (3c) II யோவான் 14: 7-14 “வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்” ஆண்டவர் அனைவருக்குமானவர் இயேசு தங்களை விட்டுப் பிரிந்து போகப் போகிறார் செய்தியைக் கேள்விப்பட்ட அவரது சீடர்கள் கலக்க மடைந்தார்கள். இதனால் இயேசு அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஒருசில உண்மைகளை விளக்கிக் கூறுகின்றார். அவற்றுள் ஒன்றுதான், “நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றை விடப் பெரியவற்றையும் செய்வார்” என்பதாகும். இயேசுவின் இவ்வார்த்தைகள், அவர்மீது நம்பிக்கை வைத்து வாழும்போது மிகப்பெரிய செயல்களைச் செய்ய முடியும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இதனைப் பவுலும், “எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” (பிலி 4:13) என்கிறார். பவுல் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து அவரது பணியைக் செய்தார். இதனால் யூதர்கள் அவர் அறிவித்த செய்தியை ஏற்றுக்கொள்ளாமல் போனாலும், பிறவினத்தார் அதனை நம்பி ஏற்றுக்கொள்கின்றார்கள். இவ்வாறு பவுல் வேற்றினத்தார்க்கு ஒளியாக மாறுகின்றார். பவுல் ஆற்றிய நற்செய்திப் பணி ஒரு மாபெரும் பணி. இதனால் பிறவினத்தார் இயேசுவை நம்பி ஏற்றுக்கொண்டார்கள் எனில், இயேசு எல்லாருக்கும் பொதுவானவர் என்பது தெளிவாகின்றது. இயேசு எல்லாருக்கும் பொதுவானவர் என்னும்போது, மாந்தர் அனைவரும், இன்று நாம் பதிலுரைப்பாடலில் பாடக்கேட்டது போன்று, அவரைப் போற்றிப் புகழ்வதுதான் தகுதியும் நீதியும் ஆகும். ஆகையால், இயேசு நமக்கு அளித்திருக்கும் எல்லா அருளுக்காகவும் அவரைப் போற்றிப் புகழ்வோம். அதே வேளையில், அவர் எல்லாருக்கும் பொதுவானவர் என்பதால், நாம் அனைவரும் சகோதரர் சகோதரிகளாக வாழ பழகுவோம். கிறிஸ்தவத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு மார்கோ போலோவை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. வெனிஸ் நகரைச் சேர்ந்த வணிகப் பயணியான இவர் உலகின் பல பகுதிகளுக்கும் சென்றவர். குறிப்பாக இவர் சீனாவைப் பற்றி எழுதிய குறிப்புகள்தான் ஐரோப்பியருக்கு சீனா ஒன்றொரு நாடு இருக்கின்றது என்பதைத் தெரிவித்தன. இவரது தந்தை மட்டோ போலோ (Matteo Polo), இவரது சித்தப்பா நிக்கலோ (Nichelo) இவர்கள் இருவரும் வணிகப் பயணிகள் தான். இவர்கள் இருவரும் பதின்மூன்றாம் நூற்றாண்டில் கிழக்குத் திசையில் சீனா, இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளை ஆட்சி செய்து வந்த குப்லா கான் (Kubla Kahn) என்ற மன்னனை 1271 ஆம் ஆண்டு சந்தித்து, இயேசுவைப் பற்றி அறிவித்தார்கள். இவர்கள் இருவரும் இயேசுவைப் பற்றி அறிவித்ததைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த குப்லா கான் இவர்களிடம், “நீங்கள் உங்கள் சமயத் தலைவரிடம் சென்று, அவரிடம் நூறு மறைப்பணியாளர்களை இங்கே அனுப்பச் சொல்லுங்கள். அவ்வாறு அனுப்பினால், நான் உட்பட என்னுடைய ஆளுகைக்குள் இருக்கும் யாவரும் கிறிஸ்துவை நம்பி ஏற்றுக் கொள்வார்கள்” என்றார். இச்செய்தியை இருவரும் அப்போதிருந்த திருத்தந்தையிடம் சொன்ன போது, “அந்தக் காட்டுமிராண்டிகளுக்கெல்லாம் நற்செய்தி தேவையில்லை” என்று சொல்லி மறுத்துவிட்டார். இது நடந்து சில ஆண்டுகள் கழித்து புத்த துறவிகள் குப்லா கான் மன்னனைச் சந்தித்து, அவரிடம் தங்கள் சமயக் கருத்துகளை எடுத்துச் சொன்னபோது, அவர் அதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தவராய் புத்த மதத்தைப் பற்றி மக்களுக்கு அறிவிக்கச் சொன்னார். அவர்களும் அவ்வாறு செய்ய, பெரும்பாலான மக்கள் புத்தக மதத்தை நம்பி ஏற்றுக் கொண்டார்கள். ஒருவேளை திருத்தந்தை மட்டும் நூறு மறைப்பணியாளர்களை அனுப்பியிருந்தார் என்றால், கீழ்த்திசை நாடுகளில் பெரும்பாலான மக்கள் கிறிஸ்துவை நம்பி ஏற்றுக்கொண்டிருந்திருப்பார்கள். அவ்வாறு நடக்காதது கிறிஸ்தவ மதத்திற்கு ஏற்பட்ட பேரிழப்புதான். கடவுள் எல்லாரும் தனது வார்த்தையைக் கேட்டு, மீட்படைய வேண்டும் என்று விரும்புகின்றார். நாம் கடவுளின் விருப்பம் நிறைவேறக் கருவியாக இருக்கின்றோமா? அல்லது தடையாக இருக்கின்றோமா? சிந்திப்போம். ஆண்டவரின் வார்த்தை “எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்” (1 திமொ 2:4) தீர்மானங்கள் 1) கடவுளின் வார்த்தையை நம்பி ஏற்றுக்கொள்வோம். ஏனெனில், அது வாழ்வளிக்கக் கூடியது. 2) கடவுள் எல்லாரும் பொதுவானவர் என்பதால் நாம் சகோதரர் சகோதரிகளாக வாழப் பழகுவோம் 3) எந்நிலையிலும் பதற்றமடைய வேண்டாம். ஏனெனில், தூய ஆவியார் நமக்குத் துணையாக இருக்கின்றார். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்