திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால ஆதிக்கத்தை ஒரு புதிய கட்சி உடைத்திருப்பதை அவர் ஒரு மாபெரும் அரசியல் சாதனையாக அங்கீகரித்துள்ளார்.. குறிப்பாக, தற்போதைய இக்கட்டான அரசியல் சூழலில் விஜய்யை ஆதரிப்பதன் மூலம் தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகவும் அவர் அளித்த ஒரு பேட்டி மூலம் தெரியவருகிறது..!!
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்! மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொண்டர்களுக்கும் அவர்கள் அயராத தேர்தல் பணிக்கும் என் நன்றி! தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை ஏற்போம், நல்லாட்சி அமையட்டும்" எனப் பதிவிட்டிருந்தார்..
தவெக விஜய்க்கு வாழ்த்து
இதனைத் தொடர்ந்து இந்தியா டுடே ஆங்கில சேனலுக்கு அளித்த நேர்காணலில் விஜய்யின் வெற்றி குறித்து பேசியிருக்கிறார்.. "தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு மாற்று சக்தியாகத் தவெக உருவெடுத்து ஆட்சி அமைப்பதன் மூலம், விஜய் ஒரு மிகப்பெரிய அரசியல் தடையை உடைத்திருக்கிறார்.. இதற்காக நான் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கனவே எம்ஜிஆர் சினிமாவில் இருந்து வந்து முதல்வராகப் பொறுப்பேற்றார் என்றாலும், அவர் பல ஆண்டுகள் திமுகவில் பயணித்த அனுபவம் கொண்டவர்.. ஆனால் விஜய், வெறும் 2 ஆண்டுகளே ஆன ஒரு புதிய கட்சியை வைத்துக் கொண்டு, எந்தவிதமான பெரிய உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாத நிலையிலேயே இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார்.. அந்த வகையில் விஜய் ஒரு முன்னோடி (Pioneer) என்றே நான் கருதுகிறேன்
ப சிதம்பரம் சொன்ன ரகசியம்
விஜய்யின் இந்த வெற்றிக்கு இரண்டு முக்கியக் காரணங்களை என்னால் சொல்ல முடியும்.. முதலாவதாக, சமூக ஊடகங்களின் அசுர வளர்ச்சி.. இரண்டாவதாக, இளைஞர்கள் மற்றும் குறிப்பாக இளம்பெண்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் மிகப்பெரிய ஈர்ப்பு. அனைத்துத் தரப்பு பெண்களும் அவருக்கு வாக்களித்திருந்தாலும், இளைஞர்களின் பேராதரவுதான் அவரை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது..
தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் ஒரு தேர்தலையோ அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியையோ யாருமே விரும்பவில்லை.. குறிப்பாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது மறைமுகமாக பாஜகவின் ஆட்சியே.. இதனைத் தவிர்க்கவும், ஒரு நிலையான அரசை வழங்கவும் ஆட்சியமைக்கத் தகுதியான ஒரே நபர் விஜய் மட்டும்தான் என்பதால் காங்கிரஸ் அவருக்கு ஆதரவு அளித்தது
இந்தியா கூட்டணி - முக்கிய பதவி?
உண்மையைச் சொல்லப்போனால், தேர்தலுக்கு முன்பாக விஜய்யின் பலத்தை எங்களால் சரியாகக் கணிக்க முடியவில்லை.. ஒட்டுமொத்த அரசியல் உலகமுமே விஜய்யின் ஆதரவு அலையைக் கணிப்பதில் தவறு செய்துவிட்டது. அந்தத் தவறை நானும் செய்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜய்யை 'இந்தியா' கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.. அவர் எங்களோடு இணைவதன் மூலம் இந்தியா கூட்டணியை மேலும் வலுப்படுத்த முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றெல்லாம் தெரிவித்துள்ளதார்.
வெளிப்படையான பாராட்டு
ப.சிதம்பரம் போன்ற அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர் விஜய்யை இவ்வளவு வெளிப்படையாகப் பாராட்டியிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்று வருகிறது.. மற்றொருபுறம் இதற்கு பின்னால் மிக முக்கியமான அரசியல் தந்திரங்கள் இருப்பதையும் கணிக்க முடிகிறது..
இப்போது தவெக அரசுக்குக் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில், விஜய்யின் பலத்தை நாங்கள் சரியாகக் கணிக்கவில்லை என்று மூத்த தலைவர் சிதம்பரம் சொல்வது, மறைமுகமாக திமுக தலைமையிலான கூட்டணியின் தோல்வியையும், அக்கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குறைபாட்டையும் சுட்டிக்காட்டுவதாகவே அமைகிறது.
விஜய்யின் "சைலண்ட் வேவ்" எனப்படும் அமைதியான எழுச்சியைத் திமுக அரசு முன்கூட்டியே உணர்ந்து அதற்குத் தகுந்த வியூகங்களை வகுக்கத் தவறிவிட்டது என்பதைத் தான் சிதம்பரம் 'Error of Judgment' என்று குறிப்பிடுகிறார் போலும்.
ஒருவேளை, திமுக அரசு முன்கூட்டியே சுதாரித்து விஜய்யின் வருகையை ஒரு சாதாரண சினிமா நட்சத்திரத்தின் வரவாகப் பார்க்காமல், ஒரு வலுவான அரசியல் சவாலாகக் கருதி இருந்தால், களத்தில் போட்டிகள் இன்னும் கடுமையாக இருந்திருக்கும்.
திமுகவுக்கு செக்?
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்களைக் கவரும் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்ட சூழலில், விஜய்யை அரவணைத்து செல்வதே காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளுக்கு சரியானதாக தெரிகிறது..
இதன் மூலம் எதிர்கால "இந்தியா" கூட்டணியில் விஜய்யைத் தக்கவைத்துக் கொள்ளவும், தமிழகத்தில் பாஜக காலூன்றுவதைத் தடுக்கவும் ப.சிதம்பரம் ஒரு ராஜதந்திர நகர்வை மேற்கொண்டிருக்கிறார் என்றே தோன்றுசிகறது..
ஆகமொத்தம், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்திருக்கும் விஜய்யை ஒரு ஜனநாயக சக்தியாக அங்கீகரித்து, காங்கிரஸின் இருப்பை தமிழகத்தில் உறுதி செய்துள்ளார் மூத்த தலைவர் ப.சிதம்பரம்... இனி என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🙋♂️தமிழக வெற்றி கழகம் #📺அரசியல் 360🔴 #🗞️இன்றைய தேர்தல் களம்🟠