ஸ்ரீ (969)உய்யக்கொண்டார் கோதைக்குச் சூட்டிய பெயர்!
நாதமுனிகள், தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு 'யமுனைத்துறைவன்' எனப் பெயர் சூட்டி அருளுரை வழங்குமாறு உய்யக்கொண்டாரைக் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் காலத்தில் அது இயலாமல் போகவே, உய்யக்கொண்டார் தன் இறுதிக்காலத்தில் இப் பணியைத் தனது மாணாக்கரான மணக்கால் நம்பியிடம் ஒப்படைத்தார். மணக்கால் நம்பியும் தனது ஆசிரியரின் விருப்பப்படியே, ஈசுவரமுனியின் மகனுக்கு 'யமுனைத்துறைவன்' என்று திருநாமம் சூட்டி, அவருக்கு அருளிச்செயல் (திவ்யபிரபந்தம்) பாடங்களை உபதேசித்தார்.
“யமுனைத்துறைவன்” என்ற பெயர் எங்கிருந்து வந்திருக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆண்டாள் திருப்பாவையில்:
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
என்று கண்ணனைப் போற்றுகிறார். திருவரங்கத்து அமுதனார் தமது 'இராமானுச நூற்றந்தாதியில்', ஆளவந்தாரைக் குறிப்பிடும்போது, நாதமுனிகள் விரும்பிய பெயரையே பயன்படுத்திப் பாடுகிறார்:
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமாநுசன் என்னை காத்தனனே
நாதமுனிகளின் நேர் சீடரான உய்யக்கொண்டாரின் இயற்பெயர் புண்டரீகாக்ஷர். (இவர் திருவெள்ளறையில் அவதரித்தவர்). இவருக்கு 'உய்யக்கொண்டார்' என்ற பெயர் எப்படி வந்தது?
ஸ்ரீமத் நாதமுனிகள் யோக சாஸ்திரத்தில் விற்பன்னர்; யோகத்தின் மூலம் பகவானை உணரும் ஆற்றல் பெற்றவர். நாதமுனிகள், குருகைகாவலப்பனுக்கு அஷ்டாங்க யோகம் கற்பித்தபோது, உய்யக்கொண்டாருக்கும் அதைக் கற்றுக்கொடுக்க விரும்பினார். அப்போது உய்யக்கொண்டார், “பிணம் கிடக்க மணம் புணரலாமோ?” என்றார்.
அதாவது, ஒரு வீட்டில் இழவு விழுந்து பிணம் கிடக்கும்போது, அங்கே மகிழ்ச்சியான திருமணப் பேச்சுகளைப் பேசமாட்டார்கள். இதன் உட்பொருள்: உலகில் பல கோடி மக்கள் சம்சாரத் துன்பங்களில் உழன்று கிடக்கையில், நாம் மட்டும் சுயநலமாகப் பகவானை அனுபவித்துக் கொண்டிருக்கலாமா? என்பதாகும்.
இதைக் கேட்டு மகிழ்ந்த நாதமுனிகள், அவருடைய பெருந்தன்மையை வியந்து, “இந்த வையம் உய்யக் கொண்டீரோ?” (உலகத்தையே உய்யச் செய்ய வந்தவரோ?) என்று பாராட்டினார். இதனால் அவருக்கு உய்யக்கொண்டார் என்ற பெயர் நிலைத்தது. எனினும், நாதமுனிகள் ஆழ்வார் திருவாக்கில் வந்த வார்த்தையையே இவருக்குப் பெயராகச் சூட்டினார் என்றும் கொள்ளலாம்.
திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில்:
“தாய் இருக்கும் வண்ணமே உம்மை தன் வயிற்று இருத்தி உய்யக்கொண்டான்” என்கிறார்.
நாதமுனிகள் ஆழ்வார்களின் பாசுரங்களிலேயே மூழ்கியவர் என்பதால், ஆழ்வாரின் சொற்களே அவருடைய சொல்லகராதியாக (Vocabulary) இருந்தன.
திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் 'சங்கத் தமிழ்மாலை'. சங்கத் தமிழில் இயல், இசை, நாடகம் என்ற மூன்றுமே இருக்கும். அதனால்தான் அதனை 'முத்தமிழ்' என்கிறோம். சங்க இலக்கியங்களில் இவை தனித்தனியே இருக்கலாம், ஆனால் திருப்பாவையில் இவை மூன்றும் ஒருசேர அமைந்திருப்பதைக் காணலாம்.
இயல் (செய்யுள்): திருப்பாவை மிகக் கடினமான 'வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர் ஒரு விகற்பக் கொச்சகக் கலிப்பா' வகையைச் சேர்ந்தது. (இதனை 'இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா' என்றும் கூறுவர்). ஆண்டாள் சாதாரணமாகப் பேசுவதே செய்யுள் வடிவில்தான் இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
நாடகம்: திருப்பாவையை நாட்டுப்புறப் பாடல் பாணியில் அமைந்த ஒரு திரைக்கதை (Screenplay) என்றே சொல்லலாம். பாவை நோன்பு நோற்கும் பெண்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு செல்வது போன்ற ஒரு நாடகத் தன்மை இதில் உள்ளது.( சென்ற மார்கழியில் ஆண்டாளும் தோழிகளும் என்ற அடியேன் எழுதியது நினைவிருக்கலாம்).
இசை: உய்யக்கொண்டார் அருளிய தனியனே இதற்குச் சான்று. “இன்னிசையால் பாடிக் கொடுத்தாள்” என்று அவர் குறிப்பிடுகிறார்:
அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை; பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
கோதை 'ஆண்டாள்' ஆன கதை
ஆண்டாள் தன்னை 'சுரும்பார் குழல்கோதை' (நாச்சியார் திருமொழி) என்றும், 'பட்டர்பிரான் கோதை சொன்ன' (திருப்பாவை) என்றும், 'கோதை' என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறாள். எங்கும் தன்னை 'ஆண்டாள்' என்று கூறிக்கொள்ளவில்லை. ஆனால், இன்று 'ஆண்டாள்' என்பதே பிரசித்தமான பெயராக உள்ளது. இப்பெயரைச் சூட்டியது யார்?
நாச்சியார் திருமொழியின் தனியனில், நாதமுனிகளின் மற்றொரு சீடரான ஸ்ரீ திருக்கண்ணமங்கையாண்டான்:
மல்லிநாடு ஆண்ட மடமயில்... என்கிறார்.
பாண்டிய மன்னன் தன் செல்வாக்கினால் நாட்டை ஆண்டான்; ஆனால், ஆண்டாள் தன் பக்தியின் 'சொல்வாக்கினால்' நாட்டை ஆண்டாள். எனவே, 'ஆண்டாள்' என்றால் மல்லிநாட்டைப் (ஸ்ரீவில்லிப்புத்தூர் அல்லது அதன் அருகில் இருக்கும் மல்லி நாடு) பக்தியால் ஆண்டவள் என்று பொருள்.
எனினும், உய்யக்கொண்டார் அருளிய திருப்பாவைத் தனியனில்தான் “ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம்” என முதன்முதலில் 'ஆண்டாள்' என்ற திருநாமம் இடம்பெறுகிறது.
நமது கோதைக்கு 'ஆண்டாள்' என்று பெயர் சூட்டி மகிழ்ந்த உய்யக்கொண்டாரின் 1200-வது திருநட்சத்திரம் இன்று.
- சுஜாதா தேசிகன்
(2021-இல் எழுதியது: சித்திரை - கார்த்திகை)
#ராமாநுஜர்