இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 28/06/2026
வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 308
வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் :
XI. 2) “ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ள வர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள்." (வெளி 14:4) (Part - 1)
அன்பான கர்த்தருடைய பரிசுத்தவான்களே, இவ்வசனத்தின்படி சீயோன்மலையில் ஆட்டுக்குட்டியானவரோடு கூட இருந்து புதுப்பாடலைப் பாடிய இவர்கள், ஆவிக்குரிய நான்கு நிலைகளை உடையவர்களாய் இருப்பதைக் காண்கிறோம்.
1. ஸ்திரீகளால் கறைப்படுத்தப்படாதவர்கள்.
2. கற்புள்ளவர்கள்.
3. ஆட்டுக்குட்டியானவரைப் பின்பற்றுகிறவர்கள்.
4. முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள்.
அன்பான கர்த்தருடைய பிள்ளைகளே, ஸ்திரீகளால் கறைப்படுத்திக் கொள்ளாதவர்கள் (not defiled with women) என்பதினால் திருமணமாகாத ஆண்கள் மட்டும் தான் சீயோன் மலையில் காணப்படுவார்கள் என்ற தவறான கருத்துக்கள் சில சபைகளில் போதிக்கப்பட்டு வருகிறது. அப்போஸ்தலர்களில் திவ்ய வாசகனாகிய அப். யோவான் மட்டுமே திருமணமாகாதவராய் இருந்தார் என்று அறியப்படுகிறது. அப்படியானால் திருமணமான அப்போஸ்தலர்களும், பரிசுத்தவான்களும், தீர்க்கதரிசிகளும் இந்த சீயோன் மலையின் நித்திய மேன்மைகளை இழந்து விடுவார்களா?
வேதாகமத்தில் திருமண உறவைத் தடை செய்யும் அல்லது பிரம்மச்சரியத்தை ஆதரிக்கும்படி எந்த வசனமும் சொல்லப்படவில்லை. "மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்." (ஆதி 2:18) என்பது தேவனுடைய நியமம். ஆதாம் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று தேவனிடம் ஜெபித்ததே இல்லை. "விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது." (எபி 13:4) என்று தேவன் சொல்லுகிறார். திருமண ஐக்கியம் பாவமானதாக இருக்குமேயானால் அப்.பவுல் கிறிஸ்துவுக்கும் சபைக்குமிடையே உள்ள உறவை கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உறவோடு சம்பந்தப்படுத்திப் பேசியிருக்க மாட்டார். (எபே 5:28-32). வெளி 14:4-ம் வசனத்தை எழுத்தின்படியாக எடுத்துக்கொள்வோமானால் ஸ்திரீகள் எவருமே சீயோனுக்குப் போக முடியாது என்றாகிவிடும்.
வெளி 14:4-ம் வசனத்தில் “ஸ்திரீயினால்” தங்களைக் கறைப் படுத்தாதவர்கள் என்று எழுதப்படாமல் “ஸ்திரீகளால்” என்று பன்மையில் எழுதப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்திரீகள் என்பதினால் விவாகம் பண்ணினவன் தன் மனைவியை அல்லாமல் வேறொரு ஸ்திரீயோடு உறவு கொண்டு விபசாரனாகக்கூடாது. “புருஷன் தன் மனைவியை சொந்தச் சரீரமாகப் பாவித்து அவரில் அன்பு கூற வேண்டும். தன் மனைவியில் அன்பு கூறுகிறவன் தன்னில் தான் அன்பு கூறுகிறான்.'' (எபே 5:28) என்கிறார் அப்.பவுல். "விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்." (எபி 13:4) என்பதைப் பார்க்கிறோம். இங்கே "விவாக மஞ்சம்" என்கிறார். மஞ்சம் என்றால் நீதி 7:16-ல் படுக்கை என்று அறிய முடிகிறது. "விவாக மஞ்சம்" என்றால் விவாக வாழ்க்கையாகும். விவாக வாழ்க்கையை உடையவர்கள் வேசித்தனம். விபச்சாரம் ஆகியவைகளுக்கு இடம் கொடாத கற்புள்ள வாழ்க்கையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். அப்படியில்லாத வாழ்க்கை வாழ்கிறவர்கள் கற்பில்லாத கறை படிந்த, விபச்சார வேசித்தன வாழ்க்கையுடையவர்கள் என்று எபி13:4-ம் வசனத்தில் எச்சரிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு காத்திருக்கிறது. ஆகையினால் அப். யோவான் வெளி 14:4-ம் வசனத்தில் சீயோனுக்குப் போக வேண்டுமென்றால், ஸ்திரீகளால் கறைபடாதவர்களாய் இருக்க வேண்டும் என்கிறார் அப்.யோவான்.
"கற்புள்ளவர்கள் இவர்களே" என்பது They are Virgins (கன்னிகைகள்) என்பதின் மொழி பெயர்ப்பாகும். "நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக் கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவ வைராக்கியமான வைராக்கியங் கொண்டிருக்கிறேன்.” (2 கொரி 11 :2). “கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்." (உன் 1:3). இவ்வசனங்களின்படி திருமணமாகாத கன்னியர்களாகிய கன்னிப்பெண்கள் மட்டுமே சீயோனிலே காணப்பட முடியும் என்பதாகிவிடும். திருமண உறவு பாவம் இல்லை என்பதனால், "நீங்கள். பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்." (ஆதி 9:1). "பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி. பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவ ஐந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்." (ஆதி 1:28)
மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்கள் எல்லாம் தேவனாகிய கர்த்தர் திருமண உறவை ஆசீர்வதிக்கிறார். “அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவ பக்தியுள்ள சந்ததியைப் பெறும்படி தானே” (மல் 2:15) “அப்பொழுது ஒலிமுக வாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி; நாங்களும் சாட்சி தான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டு பேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப் போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக; நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ் பெற்றிருக்கக்கடவாய்." (ரூத் 4:11) என்ற திருவசனங்களெல்லாம் திருமண உறவை கர்த்தராகிய தேவன் ஆசீர்வதித்ததைப் பார்க்கிறோம். (தொடரும்)
கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர்,
I. ஆசீர்வாதம்
"பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை"
மதுரை,
இந்தியா,
(தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805)
Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n.
#✝பைபிள் வசனங்கள் #🙏கோவில் #🙏ஆன்மீகம் #✝️இயேசுவே ஜீவன் #🖌பக்தி ஓவியம்🎨🙏